வியாழன், 26 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HAPPY PEOPLE BUILD THEIR INNER WORLD; UNHAPPY PEOPLE BLAME THEIR OUTER WORLD - DALAI LAMA.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்



 

அயோத்யா ஜி குறித்து சில பதிவுகள் இது வரை வெளி வந்து விட்டாலும், இன்னமும் பிரதான கோவிலான இராம ஜென்ம பூமி குறித்த பதிவு ஒன்றுமே வரவில்லையே என சிலர் நினைத்திருக்கலாம்.  இதோ இராம ஜென்ம பூமி குறித்த பதிவுடன் உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.  தற்போது இராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமருக்கான சிறப்பான கோவிலின் கட்டுமானப்பணிகள் நடந்து வருவதால், தற்காலிகமாக, பாலாலயம் என்றும் சொல்லக் கூடிய அமைப்பில் தான் நம்மால் இராமபிரானை தரிசனம் செய்ய முடியும்.  அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பிரம்மாண்டமான இராமர் கோவில் அமைந்து திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.  முடிந்தால் அதன் பின்னர் ஒரு முறை அயோத்யா சென்று வர வேண்டும் என எண்ணம் உண்டு.  அதற்கு முன்னர் தற்போது சென்ற சமயத்தில் கிடைத்த அனுபவங்களை இப்பதிவில் காணலாம்.  

 

ஜெய் ஶ்ரீராம்..... நாங்கள் அயோத்யா ஜி சென்று சேர்ந்த அன்று மாலையில், சைத்ர நவராத்திரி நாட்களில், ராம் லல்லா என செல்லமாக பக்தர்களால் அழைக்கப்படும் இராமபிரானின் திவ்ய தரிசனம் பெற பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றோம். இந்த கோவிலில் கேமரா, அலைபேசி போன்ற எவற்றுக்கும் அனுமதி கிடையாது.  வெளியே இருக்கும் அதற்கான இடங்களில் அவற்றை வைத்து விட்டு தான் உள்ளே செல்ல முடியும். ஒரு விதத்தில் அலைபேசி, கேமரா போன்றவை இல்லாததும் நல்லதே.  நிழற்படம் எடுக்கவும், அலைபேசியை நோண்டவும் தேவையில்லாமல் செல்லும் வழி எங்கும் இராம நாமம் சொல்லியபடி நாம் செல்ல வசதியாக இருக்கும்.   ஒரு சில இடங்கள் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அதிர்வுகளையும் மட்டுமே தரக்கூடியவை. அப்படி ஒரு இடம் ராம் லல்லாவின் கோவில். 

 

எண்ணற்ற மக்கள் வந்து போகும் இடம் என்றாலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து, வரும் அனைவருக்கும் திவ்யமான தரிசனம் கிடைக்க வழி வகை செய்து வைத்திருக்கும் நிர்வாகத்தினர், பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும் காவல்துறையினர் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சிறப்பான தரிசனம் பெற்றதோடு சில நிமிடங்கள் ராம் DHதர்பார் என அழைக்கப்படும் இராமபிரானின் சன்னதியில் நின்று அங்கே வரும் அனைவருக்கும் பாரபட்சமின்றி பிரசாதம் வழங்கிய ஒரு கோவில் பூஜாரியுடனும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பெண்ணிடமும் பேசி கோவில் குறித்த சில தகவல்களையும் பெற முடிந்தது. மனதுக்கு நிம்மதியான நாளாக அமைத்துத் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி… 

 

வாரத்தின் எல்லா நாட்களும் இரவு பகலாக கோவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  வெகு விரைவில் கோவில் பணிகள் முடிந்து முழு அளவிலான கோவில் அமைந்து விடும் என்பதோடு இராமபிரானை பக்தர்கள் நின்று நிதானித்து தரிசிக்க தேவையான அனைத்து வசதிகளும் இங்கே இருக்கப்போகிறது என்பது சிறப்பான விஷயம்.  அந்தப் பகுதியில் பூமியில் அகழ்ந்து போது  கிடைத்த சிலைகளை  பக்தர்களின் பார்வைக்கு ஒரு பகுதியில் (சுற்று பிரகாரத்தில்) வைத்து இருந்தார்கள்.  அங்கே பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த ஒரு பெண் போலீஸ் உடன் பேச்சு கொடுத்தோம்.  அவை எல்லாமே கோவிலுக்கான அஸ்திவாரம் போடுவதற்காக பூமியைத் தோண்டியபோது கிடைத்த சிலைகள் எனவும், கோவில் அமைந்த பிறகு இங்கேயே அமைக்கப்போகும் ஒரு அருங்காடசியகத்தில் இப்படியான சிலைகள், மற்ற விஷயங்களென அனைத்தும் காடசிக்கு வைக்கப்படும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.   




 

பத்து நிமிடத்திற்கும் மேலாக இராமபிரானின் தற்காலிக கோவிலில் நின்று நிதானித்தது தரிசனம் பெற்றபிறகு வெளியே செல்லும் பாதையில் நகர்ந்தோம்.  ஹனுமனின் காவலில் இருக்கும் அயோத்யா ஜி நகரில் அவரது இனமான குரங்கினங்கள் நிறையவே சுற்றுப் பாதையில் வலம் வருகிறார்கள்.  கைகளில் பிரசாதம் அவற்றை தட்டிப் பறித்துக் கொள்ள தயாராக இருந்தார்கள்.  இராமபிரானை தரிசிக்க வரும் அனைவருக்கும் சின்னச்சின்ன பேப்பர் பாக்கெட்டுகளில் சர்க்கரை உருண்டைகளை பிரசாதமாக தருவது வழக்கம்.  அவற்றை எனது பேண்ட் பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டேன்.  அப்படியே நடந்து வெளியேறும் பாதைக்கு அருகே வரும்போது ஒரு மனிதரைச் சந்தித்தோம்.  வெள்ளை வெட்டி, வெள்ளையில் மேல் துண்டு, நீண்ட தாடி என இருந்த அவர் கைகளில் இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் - வழியில் தண்ணீர் பிடிக்க இருக்கும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

நாங்கள் தமிழில் பேசியபடி நடக்க, அந்த வெண்ணுடை மனிதர் எங்களுடன் தமிழில் பேசத் தொடங்கினார். அன்னையின் பக்தர்.  கோவில் வளாகத்திற்கு அருகேயே, பிரகாரத்தில் பாண்டிச்சேரி அன்னை ஆஸ்ரமத்தின் கிளை ஒன்று இருக்கிறது எனவும், அன்னையின் பக்தரான ஒரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் இங்கே இடம் கொடுத்து ஆஸ்ரமம் அமைத்து இருப்பதையும் சொன்னார்.  மாலை ஆகிவிட்டதால் அங்கே செல்ல முடியவில்லை.  அடுத்த நாள் முடிந்தால் அன்னையின் ஆஸ்ரமத்திற்கு வாருங்களேன் என அழைப்பு விடுத்த அவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதை நாம் எப்படி முடிவு செய்ய?  எல்லாம் இறைவன் சித்தப்படி தானே! தொடர்ந்து நடந்து வெளியே வந்து, எங்கள் அலைபேசிகளை வைத்த இடத்திலிருந்து வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.  அடுத்து எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அயோத்யா ஜி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

6 கருத்துகள்:

  1. அலைபேசி, கேமிரா என்றில்லை, நகவெட்டி, பளேட், கீ செயின் என்று எதுவுமே எடுத்துச் செல்லக்கூடாது.  எனவே அவற்றை நாங்களும் அறையிலேயே வைத்து விட்டுத்தான் வரிசைக்கு வந்தோம்.  நீண்ட வரிசை.  சில கணங்களில் முடிந்து விட்ட தரிசன இடம்..  பிறகு கோவில் கட்டுமானத்துக்காக வைத்திருந்த கற்கள், விதானங்களையும் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு மூன்று முறை அயோத்யா இராமர் கோவிலில் தரிசனம் வாய்த்திருக்கிறது. கெடுபிடி கூண்டுகள் இல்லாத தரிசனத்தை எதிர்பார்த்திருக்கிறேன். சரயு ந்தியில் குளித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  3. படிப்படியான தகவல்கள் அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  4. நிழற்படம் எடுக்கவும், அலைபேசியை நோண்டவும் தேவையில்லாமல் செல்லும் வழி எங்கும் இராம நாமம் சொல்லியபடி நாம் செல்ல வசதியாக இருக்கும். ஒரு சில இடங்கள் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அதிர்வுகளையும் மட்டுமே தரக்கூடியவை. அப்படி ஒரு இடம் ராம் லல்லாவின் கோவில். //

    அருமையான விஷயம். ராம் லல்லா - கூப்பிடுவது என்ன அழகா இருக்கு இல்லையா..உரிமையோடு ஏதோ ஒரு பிணைப்போடு...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ராம் DHதர்பார் என அழைக்கப்படும் இராமபிரானின் சன்னதியில் நின்று அங்கே வரும் அனைவருக்கும் பாரபட்சமின்றி பிரசாதம் வழங்கிய ஒரு கோவில் பூஜாரியுடனும், //

    ராம்தர்பார் என்பது அதுதானே பாரபட்சமின்றி பிரசாதம் வழங்குவது....பூஜாரியை பாராட்ட வேண்டும்

    //வெகு விரைவில் கோவில் பணிகள் முடிந்து முழு அளவிலான கோவில் அமைந்து விடும் என்பதோடு இராமபிரானை பக்தர்கள் நின்று நிதானித்து தரிசிக்க தேவையான அனைத்து வசதிகளும் இங்கே இருக்கப்போகிறது என்பது சிறப்பான விஷயம். //

    கண்டிப்பாகச் செல்ல வேண்டும் இதில் கண்டிப்பாக என்ற வார்த்தையை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொண்டேன்...அருங்காட்சியகமும் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

    குரங்கார்கள்!!!! பின்ன அவர்கள் இல்லாமலா..

    ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //ஒரு சில இடங்கள் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அதிர்வுகளையும் மட்டுமே தரக்கூடியவை. அப்படி ஒரு இடம் ராம் லல்லாவின் கோவில். //

    அருமை.
    தேவைபடும் விவரங்கள் அடங்கிய பதிவு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....