அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட இந்த நாள் இனிய நாள்…. பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சில விஷயங்கள் ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடம் இல்லை. ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தினை நமக்குள் விதைப்பது கூட ஏதோ ஒரு சக்தி தான். அந்த சக்தியை நம்பிக்கையுள்ளவர்கள் இறைவன் என்றும் வேறு சிலர் இயற்கை என்றும் சிலர் பிரபஞ்சம் என்றும் ஏதேதோ சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை அந்த சக்தி இறைவன்.
சமீபத்தில் ஒரு மாலை நேரத்தில், மகள், மனைவி நான் என மூன்று பேருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது மகள் சொன்னதாக மனைவி என்னிடம் சொன்னது - “சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து போகலாம்” என்று! அவளுக்குள் அந்த எண்ணம் தோன்றியதற்கான காரணம் - கல்லூரிக்குச் செல்லும் போது காவேரிப் பாலத்தின் மீது நடந்து சென்ற அவள் பார்த்த, சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள். நடந்து சென்றால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்திருக்கிறது! என்னிடம் தகவல் சொன்னதும், நான் சொன்னது - “Why Not? நடந்து போகலாமே” என்பது தான்.
அப்படிச் சொல்லி விட்டாலும், மகளுக்கு நீண்ட தொலைவு நடந்து பழக்கம் இல்லையே, அவளால் முடியுமா என்ற எண்ணம் இருந்தது. இருந்தாலும், அவள் முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும்போது அந்த நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தேன். தற்போது சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு ஞாயிறும் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடக்கும். பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வண்டி வண்டியாக பூக்கள் வாங்கிக் கொண்டு பக்தர்கள் வருவார்கள். ஆட்டம், பாட்டம், பால்குடம், தீச் சட்டி ஏந்தி வருவது என ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பாக இருக்கும். அந்த நிகழ்வுகளைப் பார்க்கலாம் என்ற ஆவல் இருந்தாலும், அன்றைய தினம் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால், ஞாயிறைத் தவிர்த்து, கடந்த சனிக்கிழமை அன்று காலை ஆறு மணிக்கு நானும் மகளுமாக வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டோம்.
எங்கள் வீட்டிலிருந்து சமயபுரம் ஆலயம் சுமார் பத்து கிலோமீட்டர். நான் தனியாக நடக்கும் சமயங்களில் தொடர்ந்து இப்படி பத்து கிலோமீட்டர் தொலைவெல்லாம் நடந்திருக்கிறேன். ஆனால் மகளால் நடக்க முடியுமா என்ற கவலை மனதோரத்தில் இருந்தது என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் புறப்பட்டு விட்டோம். நடுநடுவே அவளிடம் கால் வலிக்கிறதா, ஓய்வு எடுக்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன் என்றாலும் மகள் தைரியமாகவே நடந்து வந்தது “அவள்” அருள்! வீட்டிலிருந்து கொள்ளிடக் கரை சாலை வழியாக கொள்ளிடம் பாலத்தினைக் கடந்து, நெம்பர் ஒன் டோல்கேட், கூத்தூர் என வரிசையாக வரும் ஊர்களைக் கடந்து நாங்கள் ஆலயத்தின் அருகே சென்ற போது மணி எட்டரை! பத்து கிலோமீட்டர் தொலைவினை சுமார் இரண்டரை மணி நேர நடையில் கடந்திருக்கிறோம். வழியில் ஒரே ஒரு இடத்தில் தான் சற்றே இளைப்பாறினோம். அதுவும் கூட சில நிமிடங்கள் மட்டுமே. தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தோம்.
கொள்ளிடக் கரை வழியாகச் செல்லும் போது நடந்து செல்லும் பக்தர்களைக் காணவில்லை என்றாலும் நெடுஞ்சாலையில் நடக்கும்போது பக்தர்கள் இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் நடந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அப்படி பெரிதாக நடந்து செல்லும் பக்தர்களைக் காண இயலவில்லை. மொத்தமாக பத்து, பதினைந்து நபர்களையே பார்க்க முடிந்தது. ஒரு வேளை அடுத்த நாளான ஞாயிறு அன்று நடந்து செல்லும் பக்தர்கள் அதிகம் இருக்கலாம். ஸ்ரீரங்கத்தில் தமிழக அரசாங்கம் நடத்தும் தங்குமிடமான யாத்ரி நிவாஸ் கடந்த பிறகு சூரிய உதயம் - ஆஹா என்ன அழகு! செவ்வானமும் சூரியனின் அழகும் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. இயற்கை அன்னையின் கொடை தானே அனைத்தும். அப்படியே அந்த சூரியனையும், செவ்வானத்தினையும் பார்த்து ரசித்ததோடு, சில படங்களும் எடுத்துக் கொண்டோம். தொடர்ந்து நடந்தோம்.
கொள்ளிடம் மீதான பாலத்தினைக் கடக்கும்போது பக்கவாட்டில் இருக்கும் நடைபாதையைப் பயன்படுத்தலாம். அது தான் பாதுகாப்பானதும் கூட. ஆனால் ஆரம்பத்திலேயே, ஒரு நூறடிக்கு அந்த இடம் அசிங்கங்கள் நிறைந்ததாக இருந்தது! ஏன் இப்படி வந்தோம் என்று நினைக்க வைத்தது. ஆனால் நல்லவேளையாக ஆற்றின் மீது இருந்த பாலம் பகுதியில் அப்படியில்லாமல் சுத்தமாகவே இருந்தது. பலரும் அங்கே நடைப்பயணமும் மேற்கொண்டு இருந்தார்கள். ஆற்றின் ஓரத்தில் துணி துவைக்கும் நபர்கள் இருக்கும் இடத்தில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க, பெரும்பாலும் வறண்டே கிடந்தது கொள்ளிடம் ஆறு! மெலிதாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் ஒரு பெரிய கால்வாய் போல வெட்டி தண்ணீரை மறுபக்கம் ஓடச் செய்திருந்தார்கள். ஒரு இடத்தில் பெரிய அளவில் ஊற்று தோண்டி தண்ணீர் தேக்கியும் வைத்திருந்தார்கள். பாலத்தினைக் கடக்கும்போது அந்தப் பகுதிகளையும் படம் எடுத்தபடியே நடந்தோம்.
வீட்டிலிருந்தே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். நம்பர் ஒன் டோல்கேட் வந்ததும், ஒரு ஓரமாக நின்று கொஞ்சமாகத் தண்ணீர் குடித்த பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நெடுஞ்சாலையைத் தொட்டதும் நடப்பது சற்றே சிரமம் - நடைபாதை இல்லாமல் நெடுஞ்சாலையில் ஓரமாக நடக்கும்போது நம்மை அதிக வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்கள் கொஞ்சம் பயமுறுத்தும் - விர்ரென்று பறக்கும் இரு சக்கர வாகனங்கள், பல டயர்களுடன் பிரம்மாண்டமாகச் செல்லும் லாரிகள், பேருந்துகள், கார்கள் என ஒவ்வொன்றும் நம்மைக் கடக்கும்போதும் கொஞ்சம் கலக்கம் தான். ஆனாலும் ஒருவர் பின் ஒருவராக நடந்து கொண்டிருந்தோம். வழியில் கடைகள் இருந்தாலும் ஒன்றும் அருந்தத் தோன்றவில்லை. அதிகம் எதையாவது அருந்தினால் அடுத்த பிரச்சனை பாத்ரூம் தேடுவது! அதனால் நடந்து கொண்டேயிருந்தோம்.
தொடர்ந்து எங்கள் நடைப்பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடரின் அடுத்த பகுதியில் எழுதுகிறேன். அதுவரை காத்திருங்கள் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 மார்ச் 2026





















நடைப்பயணம், அதுவும் புதிதாக (மகள்) அதுவும் 10 கிலோமீட்டர்... பொறுமையுடன் செய்திருக்கும் சாதனை. நெடுஞ்சாலையில் நடப்பது உண்மையிலேயே ரிஸ்க்கான வேலை. பாதையில் எடுத்த படங்கள் யாவும் ரசனைக்குரியவை.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
எதுவுமே நம் மனதில் உதிக்க ஏதேனும் காரணம் இருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவை சமயபுரம் அம்மன் தரிசனத்தோடு முடித்திருந்திருக்கலாம்.
ந்தி மணலில் ஊற்று படம் மிக அழகு. சிறிய வயதில் வைகை, தாமிரவருணியில் ஊற்று தோண்டியது நினைவுக்கு வருது
காரணம் இல்லாமல் காரியம் இல்லை! உண்மை.
நீக்குஊற்று - நாங்களும் சிறு வயதில் திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஊற்று தோண்டி குளித்திருக்கிறோம். பசுமையான நினைவுகள் அவை. ஊற்று தோண்டுவதற்காகவே பித்தளையில் ஒரு ஓவல் ஷேப் தட்டு போன்ற ஒன்று உண்டு. பெரியம்மா வீட்டிலிருந்து காவிரி ஆற்றுக்குச் செல்லும் போது பையில் அதுவும் இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
மிக மகிழ்ச்சி சார்
பதிலளிநீக்குஎனக்கு பல வருட ஆசை ..பார்ப்போம் அவள் அருள் வேண்டும்
எனது அண்ணா மற்றும் அண்ணி பல வருடங்களாக தேர் அன்று உறையூரிலிருந்து நடந்து சென்று தேர் பார்த்து வருவார்கள். அதுவே எனது ஆசைக்கும் வித்து
முடிந்த போது சென்று வாருங்கள் அனு ப்ரேம் ஜி. நடந்து சென்று வரலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சூப்பர் பயணம் ஜி. மனதில் ஒன்று தோன்றிவிட்டால் உடனே நடத்திட வேண்டும். நல்ல விஷயம் ஜி.
பதிலளிநீக்கு10 கிமீ தூரத்தை 2 1/2 மணி நேரத்தில் அடைந்திருக்கீங்களே! நல்ல துரிதமாக, அதுவும் நீங்கள் இருவரும் உயரமாக இருப்பதால் நல்லா எட்டி எட்டி வைத்து நடக்க முடியும் என்பதால் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் வழக்கமாக நடக்கும் தூரமே 6-7 கிமீ. 1 1/2 - 1 3/4 மணி நேரம் எடுக்கும். இப்படி போக யோசித்ததுண்டு. இப்ப, அட! நடந்துவிடலாமோ என்றும் தோன்றுகிறது.
படங்கள் எல்லாம் அசத்தல் ஜி. அதுவும் கொள்ளிடம் அந்த வாய்க்கால் போல வெட்டி விடிருப்பதும். ஊற்று படமும் செமையா இருக்கு.
கீதா
உயரமாக இருப்பதில் இதுவும் ஒரு வசதி. எட்டி வைத்து நடப்பது சுலபம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
படங்களில் உங்கள் அனுபவம், மற்றும் ரசனை வெளிப்படுகிறது. சிறப்பு.
பதிலளிநீக்குபடங்கள் குறித்த தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஇறை நம்பிக்கை பற்றிய உங்கள் கருத்து அருமை.
மகளின் மனதில் அன்னை வந்து நடைபயணமாக வர சொல்லி இருக்கிறார். அவரும் தைரியமாக நடந்தது அன்னையின் அருள்தான்.
காலை நேரம் நடப்பது சுகம் தான்.
வழியில் எடுத்த படங்கள் எல்லாம் அருமை.
மலர்கள் படம் அழகு.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததாக அமைந்தது - மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தொடர்கிறோம்...படங்கள் உடன் நடக்கிற உணர்வைத் தருகிறது...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி.
நீக்கு