திங்கள், 30 ஜனவரி, 2017

பாக் பசார் - கொல்கத்தா – இரவு உணவு – வெல்ல ரஸ்குல்லா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 95

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

குமோர்துலி பகுதியில் துர்கா பூஜைக்குத் தயாராகும் பிரதிமா[பொம்மை]களைப் பார்த்து அப்பகுதியில் லிக்கர் சாய் அருந்திய பிறகு நாங்கள் சென்ற இடம் பாக் பசார் – பாகிஸ்தான் பொருட்கள் விற்கும் இடம் என நினைத்து விடாதீர்கள் – இந்த பாக் பாகிஸ்தான் அல்ல! Bபாக்gh Bபசார்….. கொல்கத்தாவின் வடபகுதியில் இருக்கும் இந்த அங்காடி மிகவும் பிரபலமான ஒன்று.  சாலை முழுவதுமே நிறைய கடைகள் – பெரிய கடைகள் தவிர, ஒவ்வொரு சந்திலும் சின்னச் சின்னதாய் கடைகள் உண்டு. பலவிதமான அலங்காரப் பொருட்கள், அனைவருக்கும் தேவையான பொருட்கள் என இல்லாததே கிடையாது.

ஹூக்ளி நதிக்கரை அருகிலேயே இருக்கிறது இந்த பாக் பசார் பகுதி. கொல்கத்தா நகரில் ஓடும் சர்க்குலர் ட்ரையின் நிற்பதற்காக இங்கே ஒரு ஸ்டேஷன் கூட உண்டு! பாக் பசார் பாட்டா க்ராஸிங் எனும் இடம் மிகவும் பிரபலமான ஒரு இடம். இங்கே இன்னமும் மனிதர்களை மனிதர்களே இழுக்கும் கைவண்டிகளுக்கான ஸ்டாண்ட் உண்டு! எத்தனை முன்னேற்றம் வந்தாலும், இந்த கைவண்டி இழுப்பவர்களுக்கு ஒரு விடிவுகாலம் வரவில்லை.  பெரும்பாலானவர்கள் முதியவர்களாக இருக்கிறார்கள். வண்டியில் உட்கார்ந்திருக்கும் “கன”வான்களைப் பார்த்தால், பார்க்கும்போதே கோபம் வருகிறது – நடந்து போனால் உடம்பாவது குறையும்!

ட்ராம்கள் போவதைப் பார்க்கவே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன்.  ரொம்பவே பொறுமையாகச் செல்கிறது.  நடந்து சென்று கூட அவற்றுக்கு முன்னே சென்றுவிடலாம் போல… ட்ராம் ஓட்டுனர் ஒலிப்பான் மூலம் எழுப்பும் சப்தங்களை பாதசாரிகளும் சரி, சக வாகன ஓட்டுனர்களும் சரி கண்டுகொள்வதே இல்லை! தில்லி எருமைகள் நினைவுக்கு வந்தன.  ட்ராம் சென்று கொண்டிருக்கும்போதே நிறைய பேர் இறங்குகிறார்கள். சிலர் ஏறிக்கொள்ளவும் செய்கிறார்கள்! அதான் அத்தனை மெதுவாகச் செல்கிறதே….

சாலையின் ஓரங்களில் கடைகள் இருக்க, சாலையில் பேருந்துகள், ட்ராம், கை ரிக்‌ஷாக்கள், வாகனங்கள் என்று சென்றபடியே இருக்கின்றன.  நாங்களும் அந்தப் பகுதிக்குச் சென்று கடைகளை பார்த்தபடியே நடந்தோம். சில கடைகளில் புகுந்து சில பல பொருட்களை வாங்கிக் கொண்டோம். நடைபாதைக் கடைகளிலும் நிறைய மக்கள் கூட்டம். இந்தக் கடை வீதியில் இருக்கும் வியாபாரிகள், எல்லா ஊர்களில் இருக்கும் வியாபாரிகள் போல நிறைய மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களுடன் பெங்காலி நண்பர் இருந்ததால் எங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இப்படியே நடந்து சென்றபடியே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நடந்து நடந்து களைப்பான பிறகு எங்கள் வாகனத்திற்கு திரும்ப வந்து நண்பரை அவர் வீட்டருகே விட்ட பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.  கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு உண்பதற்காகக் கீழே இறங்கினோம்.  மதியம் சென்ற அதே உணவகம், அதே இருக்கைகள், அதே பணியாள்! எங்களைப் பார்த்தவுடன் ஒரு புன்னகை! மதியம் சாப்பிட்ட வகைகள் வேண்டாம், வேறு என்ன இருக்கிறது என்று அவராகவே மெனு சொன்னார்!  சரி என எனக்கு சைவ உணவும், நண்பர்களுக்கு அசைவ உணவும் கொண்டு வரச் சொன்னோம்!
  
பெங்காலிகளுக்கு மீன் எப்படி பிடித்தமானதோ, அதே போல இனிப்புகளும்! அப்பாடி மலைக்க வைக்கும் இனிப்பு வகைகள் அங்கே கிடைக்கின்றன. எத்தனை எத்தனை வகை இனிப்புகள். பெங்காலி நண்பர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் ஏதாவது இனிப்பு இருக்கும்! அவருக்குப் பிடிக்கிறது என்பதற்காக நமக்கும் இனிப்பு! அதுவும் ஒன்றிரண்டு சாப்பிட்டால் பரவாயில்லை. ஒரு தட்டு நிறைய இனிப்பு தந்து சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொல்லுவார் அவரும் அவரது துணைவியும்.  கொல்கத்தாவில் இரவு உணவு சாப்பிடச் சென்ற உணவகத்திலும், அந்தச் சிப்பந்தி சாப்பிட்டு முடிக்கக் காத்திருந்தவர் போல என்ன இனிப்பு கொண்டு வரட்டும் எனக் கேட்க, ஏற்கனவே சாப்பிட்ட உணவிற்கு மேல் இனிப்பா என நினைத்து, வேண்டாம் என்று சொன்னோம்.



எங்களை ஒரு மாதிரி பார்த்த பின்னர், கொல்கத்தா வந்த பிறகு இனிப்பு வேண்டாம் என்று சொன்னால் எப்படி? நிச்சயம் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் எனச் சொன்னதோடு, தானாகவே ஒரு இனிப்பு – கொல்கத்தா ஸ்பெஷல் கொண்டு வருகிறேன் என உள்ளே சென்றார்.  அந்த இனிப்பு ரஸ்குல்லா! ஆனால் நமக்குத் தெரிந்த வெள்ளை ரஸ்குல்லா இல்லை – சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்து செய்யப்பட ரஸ்குல்லா, அதுவும் மண் பாண்டத்தில்!  பெங்காலி நண்பர் சில சமயங்களில் கொல்கத்தாவிலிருந்து வரும்போது இப்படி மட்கா ரஸ்குல்லா வாங்கி வந்ததுண்டு – ஆனால் அவை வெள்ளை ரஸ்குல்லா, இந்த வெல்ல ரஸ்குல்லா அல்ல!

வெல்லம் சேர்த்து செய்த ரஸ்குல்லாவினை உள்ளே தள்ளி, அதிக உணவு உண்ட மயக்கத்தில் சிறிது நடந்து தங்குமிடம் திரும்பினோம்.  உறக்கம் எங்களைத் தழுவ ஆழ்ந்து உறங்கினோம். அடுத்த நாள் கொல்கத்தாவின் சிறப்பிடங்கள் சிலவற்றிற்குப் பயணிக்க வேண்டும்.  தயாராகக் காத்திருங்கள். உங்களையும் அழைத்துச் செல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

34 கருத்துகள்:

  1. //தில்லி எருமைகள் நினைவுக்கு வந்தன!//

    எருமைகள் எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான்!

    இந்த ரசகுல்லா சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி எருமைகள் கொஞ்சம் ஸ்பெஷல்! ஹிந்தியில் Deet என ஒரு வார்த்தை உண்டு. அதன் முழு அர்த்தம் தில்லி எருமையை பார்த்தால் தெரிந்துவிடும்!

      ரசகுல்லா சாப்பிட்டு பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ரசகுல்லா சாப்பிடத் தூண்டுகிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டுப் பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. ரஸ்குல்லா பார்த்து மகிழ்கிறேன்... (வேற வழியில்லை...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தொடர்ந்து பயணிப்போம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  5. ரசகுல்லா பார்க்க அழகாக இருக்கிறதே,,, ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க மட்டுமல்ல, சாப்பிடவும் நன்றாகவே இருக்கும் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. கை வண்டி முதல் மெட்ரோ ட்ரைன் வரை உள்ள ஒரே நகரம் கல்கத்தா மட்டும் தான் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து ரக வாகனங்களும் இங்கே உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. >>> வெல்லம் சேர்த்து செய்த ரஸ்குல்லா..<<<

    கற்பனையிலும் இனிமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. இவ்வளவு இனிப்பு சாப்பிட்டால் என்னாவது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமும் இனிப்பு சாப்பிடுவது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி ஜி!

      நீக்கு
  9. ஆம் ரசகுல்லாவுக்கு
    அவர்கள்தானே அதாரிட்டி இல்லையா ?
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான இனிப்புகளுக்கு அவர்கள் தானே அதாரிட்டி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  10. ஜி எல்லா ஊரிலும் எருமைகள் அப்படி இருந்தாலும் என்னவோ தெரியவில்லை தில்லி எருமைகள் என்று புகழ்பெற்றுவிட்டன!!!! அங்கு எருமைகள் எப்போதும் வெளியே அவிழ்த்துவிட்டு இருப்பதாலோ??!!!

    இருவருமே ரொஸகுல்லாவைக் கண்ணால் கண்டு நாவில் நீர் சுரக்கப் பார்த்துக் கொண்டே இருந்தோம்...இனிமையானவர்கள் அதான் ஹிஹிஹி..

    கீதா: வெல்லத்தில் இப்போதுதான் பார்க்கிறேன் ஜி...செய்து பார்த்துவிட வேண்டியதுதான்....சாப்பிட முடியாதுதான் என்றாலும்....வெல்லம் என்பதால் ஒன்றே ஒன்று சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் அதற்கு ஏற்றாற் போல் டயட்டை அன்று பார்த்துக் கொண்டால் போயிற்று என்று முடிவு செய்தாயிற்று...பின்னே என்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பெங்காலிகளைப் போல "சீனி"வாசன்கள்!!! நீங்கள் இதன் குறிப்பைக் கேட்டிருப்பீர்களே...இல்லையோ??!!!

    தொடர்கின்றோம்..ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமை என்றாலே தில்லி எருமை தான் நினைவுக்கு வருகிறது என்ன செய்ய!

      சீனிவாசன்கள்! :) பலரும் சீனிவாசன்கள் தான் இப்போது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  11. வெல்ல ரசகுல்லா பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும் தனபாலன் சொல்வது போல பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து மட்டுமே ரசிக்க முடியும்! :) சில சமயங்களில் பிடித்திருந்தாலும் சாப்பிட முடிவதில்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  13. 15 நாட்கள் கொல்கத்தாவில் இருந்தோம், வெல்ல ரஸகுல்லா சாப்பிடவில்லையே!
    ட்ராம்களில் பயணம் செய்தோம். கை ரிக்‌ஷாக்களைப் பார்த்து வருத்தப்பட்டு இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு அந்த தொழில்தானே உணவு அளிக்கிறது. அதில் அமர்ந்து வருபவர்கள் நிறைய காசு கொடுக்கலாம், அவர்கள் கஷ்டத்திற்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கு அந்த தொழில் தான் உணவு அளிக்கிறது - உண்மைதான்மா... ஆனாலும் வருத்தமாகத் தான் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  14. ரசகுல்லா சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் வெள்ளை நிறம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மில் பெரும்பாலானவர்கள் வெள்ளை நிற ரஸகுல்லா தான் சாப்பிட்டு இருக்கிறோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  15. மனிதனை மனிதன் இழுக்கும் வழக்கம் இன்னும் மாறாதது வருந்தத்தக்கது.

    (சும்மா அதுபாட்டுக்கு நடு ரோட்டில் நின்று கொண்டு யார் வம்புக்கு போகாமல் அசை போட்டுக் கொண்டு இருக்கும் எருமையை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமையை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க! அதானே.... :) அதை வம்புக்கு இழுத்தாலும் சும்மாவே இருக்குமே - அதனால் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  17. எப்படி இந்த இடுகையை மிஸ் பண்ணியிருக்கிறேன்? இப்போதான் வெள்ளை ரசகுல்லா சாப்பிட்டேன். வெல்ல ரசகுல்லா கேள்விப்பட்டதேயில்லை. படம் பார்த்து ஜாமூன் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்ல ரஸகுல்லா - கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாகவே இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....