செவ்வாய், 17 ஜனவரி, 2017

எங்கும் பனிமழை பொழிகிறது – எம்.ஜி.ஆர் மாதிரி பாடலாம்!



படம்: இணையத்திலிருந்து....

இன்றைக்கு எம்.ஜி.ஆர். பிறந்த தினம் – தலைநகரில் இருக்கும் தில்லி தமிழ்ச் சங்கம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  சமயமாக இருப்பதால் சென்ற ஞாயிறன்று ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிட்டார்கள்.  சரி ஞாயிற்றுக் கிழமை தானே படம் பார்க்கலாம் என நினைத்திருந்தேன் – அதற்கு வேட்டு வைப்பது போல, அலுவலகத்திலிருந்து அழைப்பு – தலைபோகும் அவசர வேலை – அரை மணி நேரம் வந்து வேலையை முடித்து விட்டு போகலாம் எனச் சொல்ல, நிச்சயம் அரை மணி நேரத்தில் முடியாது என்பது தெரிந்தே செல்ல வேண்டிய சூழல்! வீடு திரும்பும்போது மூன்று மணி நேரம் கடந்திருந்தது!

சரி எம்.ஜி.ஆர். பிறந்த நாளான இன்று அவர் பற்றியோ, அவரது சினிமாக்கள் பற்றியோ நான் எழுதப் போகிறேன் என்று நினைத்தால் உங்கள் தவறு. எனக்கும் சினிமாவுக்கும் ரொம்பவே தூரம்! நான் எழுதப் போவது தலைநகரின்/வட இந்தியாவின் தற்போதைய சூழல் பற்றி!

”இந்த முறை குளிர் காலம் அத்தனை கடுமையாக இல்லை, குளிரே வரவில்லை” என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க, திடீரெனெ ஒரேயடியாக குளிர் ஆரம்பித்து இருக்கிறது. வட இந்தியாவின் ஷிம்லா, குலூ, மணாலி, குஃப்ரி, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர் என பல பகுதிகளிலும் பனிப்பொழிவு – அதுவும் அதிக அளவில் பனிப்பொழிவு.  ஷிம்லாவில் பனிப்பொழிவு பார்க்கலாம் எனச் சென்ற நண்பர் ஒருவர் திண்டாடி அங்கிருந்து அலைபேசியில் அழைத்தார் – தங்குமிடங்கள் எங்கும் நிரம்பியிருக்க, ஒரு நாளைக்கு எட்டாயிரம் வரை வாடகை கேட்கிறார்கள் – தண்ணீர் தரும் குழாய்கள் அனைத்தும் உறைந்து கிடக்க, தண்ணீரே இல்லை! மின்சாரமும் தடைபட்டிருக்க, குளிரில் அனைவரும் உறைந்து கிடக்கிறார்கள்! ஷிம்லாவில் இன்றைய குறைந்த பட்ச வெப்பம் – 0 டிகிரி! அதிக பட்சம் – 15 டிகிரி….   


படம்: இணையத்திலிருந்து....

பொதுவாக காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்றாலும் ஜம்மு பகுதிகளில் அத்தனை பனிப்பொழிவு இருப்பதில்லை. ஜம்முவின் கட்ரா மாநிலத்தில் இருக்கும் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலைப்பகுதியில் இந்த நாட்களில் குளிர் அதிகம் இருக்கும் என்றாலும், பெரும்பாலும் பனிப்பொழிவு இருப்பதில்லை. ஆனால் இந்த வருடம் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலையிலும் அத்தனை பனிப்பொழிவு – பனி மூடிய மலைகளைப் பார்க்க முடிகிறது.

சரி எங்கோ ஷிம்லாவிலும், ஜம்முவிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும் பனிப்பொழிவு என்றால் தில்லியில் இருக்கும் உனக்கென்ன கவலை – தில்லியிலா பனிப்பொழிவு என்று நீங்கள் கேட்கலாம்….  தலைநகர் தில்லியை நம்பித் தானே நாட்டின் எல்லா மாநிலங்களும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் தலைநகர் தில்லி எல்லாவற்றிற்கும் பக்கத்து மாநிலங்களை நம்பித்தானே இருக்கிறது! சொந்தமாய் எதுவுமே கிடையாது! பக்கத்து மாநிலமான ராஜஸ்தானின் பாலைவனங்களில் சூடு அதிகமானால் தில்லி கொதிக்கும்.  பக்கத்து மாநிலங்களில் பனிப்பொழிவு என்றால் இங்கே குளிர் அதிகரித்து விடும்!

இப்போது கூட தலைநகர் தில்லியில் அடிக்கும் குளிர் காற்று உடலை உறைய வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இப்போது அடிக்கும் காற்றினை இங்குள்ளவர்கள் Barfeeli hawa என்று அழைக்கிறார்கள் – ஏதோ தேங்காய் பர்ஃபி என நினைத்துவிடாதீர்கள். ஹிந்தியில் Barf என்றால் ஐஸ்கட்டி! ஐஸ்கட்டி போன்ற காற்று என்பதைத் தான் இப்படி Barfeeli hawa என அழைக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் சொல்வதானால் Icy Wind!  இந்தக் குளிர் காற்று அடிக்கும்போது நம் எலும்புகளை ஊடுருவிச் செல்வது போன்ற ஒரு உணர்வு!

அடிக்கும் குளிரில், தண்ணீர் அப்படி சில்லென்று இருக்கிறது! குளிப்பதற்கு மட்டுமல்ல குடிப்பதற்கும் வெந்நீர் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தண்ணீரைக் குடித்தால் கூட பற்கள் கிடுகிடுக்கிறது! சில நாட்களாக வீட்டில் வெந்நீர் தான் குடிக்கிறேன்! காலையில் எழுந்து கொள்வதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. எழுந்து சமைத்து, குளித்து, காலை உணவைச் சாப்பிட்டு மதியத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்…  ஒவ்வொரு நாளும் குளிரை நொந்தபடியே தான் வேலைகள் நடக்கின்றன. 

வீட்டுக்குள் இருக்கும் நமக்கே குளிர் தாங்கவில்லை எனும்போது வீடில்லாதவர்கள், நடைபாதைகளில் தூங்குபவர்கள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள் ஆகியோரை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது. எல்லா வருடங்கள் போலவே குளிர் தாங்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் தான் என்றாலும், பெரிதாய் செய்திகள் வருவதில்லை. Night Shelters ஆங்காங்கே இருந்தாலும், இருப்பவை தேவையை விட மிகவும் குறைவு. அவதிப்படும் மக்களைப் பார்க்கும்போது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய், மாடு, ஆடு போன்றவற்றுக்கு ஸ்வெட்டர் போட்டு விடுகிறார்கள் என்றாலும் தெருவில் திரியும் நாய்கள் குளிரினால் அவதிப்பட்டு ஒடுங்கிக் கிடக்கின்றன…..

என்னதான் கோடை நாட்களை விட, குளிர் நாட்கள் பிடிக்கும் என்றாலும், ஏனோ இந்த முறை குளிர் அதிகமாகவே தெரிகிறது.  எங்கும் பனிமழை பொழிகிறது எனப் பாடலாம் என்றால் சாதாரணமாகவே கர்ணகொடூரமாக இருக்கும் குரல், குளிர் காரணமாக நடுக்கத்துடன் இன்னும் மோசமாக இருக்கிறது! அதனால் தான் பாடவில்லை என்றும் சொல்லி விடுகிறேன்! இன்னும் பதினைந்து நாட்களோ, ஒரு மாதமோ இந்த குளிருடன் போராட்டம் தான்! அதன் பிறகு தான் சகஜ நிலை திரும்பும் போல இருக்கிறது…..

அதுவரை நடுங்கியபடியே வேலை செய்வதோடு, பதிவுகளும் போட வேண்டியது தான்! விரல்கள் வேலை செய்ய மறுக்க, ஆங்காங்கே தட்டச்சுப் பிழைகள் வரலாம்! J

ஜில்லென்று காற்று வந்ததே என்று பாடியபடியே…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. எனக்குக் குளிர் என்றாலே நடுக்கம் ஜி....எப்படி நீங்கள் எல்லோரும் சமாளிக்கிறீர்களோ..

    கீதா: எனக்கு மிகவுமே பிடித்த ஸீசன் என் தங்கையிடம் வந்தால் இந்த சீசனில் தான் வருவேன் என்று சொல்வதுண்டு.....புது வெள்ளை மழை அங்கு பொழிகின்றது பாடல் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் காலம் எனக்கும் மிகவும் பிடித்த காலம். என்றாலும் பலருக்குக் கஷ்டமாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. நானும் தில்லியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்பதால் தாங்கள் படும் அவதியை உணரமுடிகிறது. தில்லியில் சொல்வார்கள் குளிரைத் தாங்கிக்கொள்ளலாம்.ஆனால் வெயிலைத்தான் தாங்கிக்கொள்ளமுடியாது என்று. இப்போது குளிரையும் தாங்கமுடியாது போல் இருக்கிறதே. ஹோலி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தில்லி அனுபவம் இருந்திருக்கிறது என்பதால் குளிர் பற்றி புரிகிறது. முன்பு போல அல்லாமல் இப்போதெல்லாம் அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே அதிக குளிர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  4. >>> அவதிப்படும் மக்களைப் பார்க்கும்போது பரிதாபம் தான் மிஞ்சுகிறது..<<<

    கடும் குளிர் என்றால் கஷ்டமும் வேதனையும் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. கடும் குளிர் எந்தளவுக்கு கொடுமையாக இருக்கும் என்பதை அறிவேன். இங்கும் கனடாவின் வடபகுதியில் பனிக் குளிர், -30. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி நண்பரே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரக்ஞகன் ஜி!

      நீக்கு
  7. படங்களைப் பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு. மைனஸ் 15 டிகிரியா... வாழ்நாள் ஆசை இந்தமாதிரி இடத்தில் ஒரு வாரம் தங்கணும்னு. Icy Wind... நினைக்கவே நல்லாருக்கு. ஆனால் ஏழைகளுக்கும், சரியான வசதியற்றவர்களுக்கும் உள்ள கஷ்டத்தை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாயிருக்கு. வெயிலைக்கூட அவர்கள் ஓரளவுக்கு சமாளிச்சுறலாம்... குளிர்காலம் அவர்களுக்கு நரகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைனஸ் 15 டிகிரி அல்ல.... அதிக பட்சம் 15 டிகிரி, இடைவெளிக்காக - குறியீடு பயன்படுத்தி இருக்கிறேன்.....

      இருந்தாலும் இந்தக் குளிரும் தொடர்ந்து இருந்தால் கஷ்டம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100-வது பிறந்த நாளான இன்று (17.01.2017) தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு மிகவும் அருமை. அதற்கு முதலில் என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    வெயில், மழை, குளிர், பனி, காற்று போன்றவை எப்போதும் மிதமாக இருந்தால் மட்டுமே நல்லது. கடுமையாக மிக அதிகமாக இருக்கும்போதோ அல்லது சுத்தமாக இல்லாதபோது மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகவே நேரிடுகிறது. பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  9. எனக்கு வெயில் என்றால்தான் ஒத்து வாராது குளிர்காலத்தை சமாளித்துவிடலாம் எளிதில் நம்பினால் நம்புங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நான் குளிர்கால ஜாக்கெட் அணிந்து வருகிறேன் முன்பு எல்லாம் அணிவதே இல்லை.அதுவும் என் நாய் குட்டி வந்த பிந்தான் அணிய ஆரம்பித்துள்ளேண் ஒரு வேளை எனக்கு வயதாகிவிட்டாதால் என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வந்த புதிதில் நானும் இப்படித்தான் இருந்தேன் - குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன் - எவ்வளவு குளிராக இருந்தாலும்.... இப்போது முடிவதில்லை! நீங்கள் சொல்வது போல வயதாகிவிட்டதாலோ? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. ஒரு முறை ஜனவரியில் டெல்லி வந்திருக்கிறேன். விமானக்கதவைத்திறந்து காலை ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை, அதற்குள் முகத்தில் அறைந்த பனிக்காற்றில் அப்ப்டியே உடல் விறைத்துப்போனது தான் உங்களின் பதிவைப்படிக்கையில் நினைவுக்கு வருகிறது! இந்தப் பனியிலும் குளிரிலும் சின்ன சின்ன குழந்தைகள் விடியற்காலையில் பள்ளிக்குப் போகும் காட்சியை பார்க்கையில் வேதனையாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற வாரம் குளிர் அதிகமாக இருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டார்கள்.... காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  14. இந்த ஆண்டு எல்லாமே தாமதமோ. பெங்களூரிலும் குளிர் லேட்டாகத்தான் துவங்கி இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  15. DD சொல்வதுபோல எதுவும் அதிகமானால் சிரமம்தான். இங்கு சென்னையிலும் கூட கொஞ்ச நாட்களாக குளிர் அதிகம் தெரிகிறது. காற்றும் சில் என்று அடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளவுக்கு மிஞ்சினால்.... அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. எனக்கு குளிர் என்றால் கொஞ்சம் அலர்ஜிதான். ஆனால் புகைப்படங்களைப் பார்த்தால் அந்த இடங்களை நேரே சென்று பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை சென்று வாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி....

      நீக்கு
  17. நியூ ஜெர்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. மைனஸ் 5 வரை போகிறது. திடீரென்று இரண்டங்குலம் பனிப்பொழிவும் ஏற்படுகிறது. டில்லியில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைதான் அங்கே குளிர். அதுவும் 3 டிகிரிக்குக் கீழே போவதில்லை. அதையா குளிர் என்கிறீர்கள்? வெறும் ஜூஜூபி!

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்டார்டிகா பகுதியில் ஆராய்ச்சிக்காக போய் இருப்பவர்களுக்கு நியூ ஜெர்சி குளிர் ஒன்றுமே இல்லை... போலவே நியூ ஜெர்சியில் இருக்கும் உங்களுக்கு தில்லியில் குளிர் ஜூஜூபி தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா ஐயா.

      நீக்கு
  18. இந்த மாதிரி சீசனில்,நானும் ஒரு முறை டெல்லி வந்து அவதிப் பட்டதுண்டு !பெயர்தான் தலைநகர் வெயில் அடித்தாலும் ,பனி பொழிந்தாலும் உச்சபட்சமா இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....