புதன், 11 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி ஐந்து – எதிர்பாராமல் கிடைத்த பரிசு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பிரார்த்தனை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை; மற்றவரைப் போல வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பேயில்லை.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! 

 

யாரிவள்! பகுதி இருபத்தி ஐந்து - எதிர்பாராமல் கிடைத்த பரிசு


 

பொறுப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் வேறுபடும். எப்படி என்று நினைக்கிறீர்களா! பொறுப்பாக அல்லது பொறுப்புடன் இருப்பது என்பது வேறு! பொறுப்பில் இருப்பது என்பது வேறு! அல்லவா!

 

சுட்டிப் பெண்ணுக்கு தமிழாசிரியரால்  பள்ளியில் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. மாணவர்களின் சிறுசேமிப்புத் திட்டமான 'சஞ்சய்கா'வில் அவர்கள்  தரும் பணத்திற்கு எண்ட்ரி போட்டு கணக்குகளை பார்த்துக் கொள்ள வேண்டும்! அதற்காக பாஸ்புக்குகளும் உண்டு. தினமும் மதிய உணவை முடித்துக் கொண்டு கவுண்ட்டரில் சென்று அமர்ந்து கொள்வாள். 

 

பெரும்பாலும் கிடைக்கும் காசிற்கு பள்ளியின் உள்ளேயே இருந்த கேண்ட்டீனில் நொறுக்குத் தீனி வாங்கித் தான் சாப்பிடுவார்கள் என்றாலும், ஒரு சிலர் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மாணவர்களிடையே அந்த எண்ணத்தை வளர்க்கும் ஒரு திட்டம் தான் சஞ்சய்கா!

 

இவளுக்கு சேமிக்கும் பழக்கம் எப்போதும் உண்டு. வீட்டிற்கு வரும் மாமா, அத்தை என்று யார் தந்தாலும் அதை செலவழிக்காமல் உண்டியலில் போட்டு விடுவாள்! முதலில் அப்பா அவளுக்கு மண்ணால் செய்யப்பட்ட மாம்பழ உண்டியல் ஒன்று வாங்கித் தந்தார். உண்டியல் நிறைந்ததும் அதை உடைத்து தான் எடுக்க வேண்டும். 

 

இந்த சஞ்சய்கா திட்டத்தை பற்றி தெரிந்ததிலிருந்து கிடைக்கும் பணத்தையெல்லாம் அதில் சேமித்து வந்தாள். குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும் இவளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவற்றை வாங்கிக் கொள்வாள். சில சமயம் அப்பாவுக்கே செலவுக்கு கொடுத்து திருப்பித் தரும் போது பத்து, இருபது கூட கேட்டு வாங்கிக் கொள்வாள்..🙂

 

ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவின் போது மாணாக்கர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க அவர்களின் சேமிப்புக்கு ஏற்றாற் போல் பரிசுகளும் மேடையில் தரப்படும். பரிசுகளை வாங்கவேனும் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள் என்ற நோக்கம் தான்!

 

இவள் ஹிந்தி படித்து வந்ததைப் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா! ஆறு மாதத்துக்கு ஒரு பரீட்சையாக  எழுதி தேறி வந்தாள். இப்படித்தான் ஒருமுறை சஞ்சய்காவில் 300 ரூ சேர்ந்திருந்தது. அப்பா அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்காமல் அதை வைத்து பரீட்சைக்கு பணம் கட்டி அடுத்த தேர்வுக்கான புத்தகங்களும் வாங்கி விட்டாள்.

 

அந்த வருட ஆண்டு விழாவில் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் என்று இவள் பொறுப்பில் இருந்ததால் ஆசிரியரும் இவளும் சேர்ந்து தான் பரிசுகளை பிரித்து வைத்தார்கள். சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து விட்டதால் மனதின் ஒரு ஓரத்தில், சே! ஆண்டு விழா முடிந்ததும் எடுத்திருக்கலாம். பரிசு நமக்கில்லையே என்று இருந்தது. அதை அவள் யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!

 

ஆண்டு விழாவும் முடிந்தது. அதன் பிறகு தமிழாசிரியர் இவளை தனியே அழைத்து 300 ரூபாய்க்கான பரிசாக எவர்சில்வரில் ஓவல் வடிவத் தட்டு ஒன்றை பரிசளித்தார்! நன்றாக படித்து வா! என்றும் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கடைபிடி! என்றும் வாழ்த்தினார். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

சிறுதுளி பெரு வெள்ளம்! என்ற வாக்குக்கு ஏற்ப இவளின் சின்னஞ்சிறிய சேமிப்புகள் நாளடைவில் தொடர்ந்ததா! என்பதையெல்லாம் போகப் போகப் பார்க்கலாம்!

 

சிறு விண்ணப்பம் - 25 பகுதிகளை தொட்டிருக்கும் 'யாரிவள்' தொடர் குறித்தும், இவளைப் பற்றியும் பொதுவான உங்கள் கருத்து என்ன?? சொல்லுங்களேன்! தெரிந்து கொள்கிறேன்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

30 கருத்துகள்:

  1. உண்மை உழைப்புக்கு தோல்வி என்றுமில்லை.  அந்த ஆசிரியரைப் போல அன்பானவர்களும் இப்போது காண்பதரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்புக்கு என்றும் தோல்வியில் - உண்மை.

      அன்பான ஆசிரியர்கள் இப்போது அரிது தான்.

      தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நான் சிறுவனாக இருந்த போது சஞ்சய்கா சேமிப்பு திட்டம் இருந்தது. ஆனால் சேர்ப்பதற்கு காசுதான்இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமிப்பதற்கு காசு தான் இல்லை - அன்றைய சூழல் அப்படி! பலர் வீட்டில் இந்த நிலை தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  3. அன்று படிப்போடு நல்ல செயல்களும் வளர்ந்து வந்தது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்பும் கூடவே நல்ல விஷயங்களும் கற்றுக் கொடுத்த அன்றைய பள்ளிகளும் ஆசிரியர்களும். இன்றைக்கு ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்வதை விட இணைய வழி/ஊடகங்கள் வழி கற்றுக் கொள்ளும் வேண்டாத விஷயங்கள் அதிகம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. சேமிப்பு, அன்பு போல் என்றும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமிப்பு என்றைக்குமே சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  6. தங்களின் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். நிறைய விஷயங்கள் ஆச்சரியப் பட வைத்துள்ளது. நல்ல நினைவாற்றல். எவ்வளவோ நல்ல பழக்கங்களை இப்போதுள்ள குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க தவறி விட்டோம் என்று நினைக்க வைக்கிறது. எனது இளமை பருவத்தை திரும்பி பார்க்க வைக்கிறது. மொத்தத்தில் சுவாரஸ்யமான தொடர்👍
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன் ஜி. தொடர்ந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  7. குழ்ந்தைகளுக்கு சேமிப்பு பழக்கம் வருவது நல்லது.

    சிறுதுளி பெரு வெள்ளம்! என்ற வாக்குக்கு ஏற்ப இவளின் சின்னஞ்சிறிய சேமிப்புகள் நாளடைவில் தொடர்ந்ததா! என்பதையெல்லாம் போகப் போகப் பார்க்கலாம்!//

    சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம் மறக்காது. நாளடைவில் தொடர்ந்து இருக்கும், அதில் சந்தேகம் இல்லை.

    அருமையான தொடருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நல்ல பழக்கங்கள் ஆதி!

    உங்கள் தொடர் நன்றாகவே இருக்கிறது. பல நல்ல விஷயங்கள். ரொம்ப நல்ல பெண்ணாக நல்ல பழங்கள் உள்ள பெண்ணாக இருந்திருக்கிறீர்கள். உங்களின் நினைவாற்றல் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது. நன்றாகவும் எழுதி வருகிறீர்கள் ஆதி.

    அப்போதைய ஆசிரியர்கள் போல இப்போது இருக்கிறார்களா எண்ணிவிடும் அளவேனும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் ஆசிரியர்களை இன்றும் நினைவுகூர்வதுண்டு. நல்ல ஆசிரியைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு மற்றும் தொடர் குறித்த தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. பள்ளியில் சேமிப்பு என்பது நான் படிக்கும் போதும் இருந்தது. ஆனால் சேமிக்க முடிந்ததில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் - உண்மை. எனக்கும் வாய்ப்புகள் கிடைத்ததில்லை. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. நல்ல தொடர். அருமையாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துகள்!

    சேமிப்பு என்பது மிக மிக நல்ல பழக்கம். அதன் முக்கியத்துவமும் தொடரும் பகுதியில் உங்கள் அனுபவமாக வரும் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் பதிவுகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ஜி. தொடர்ந்து தரும் ஆதரவிற்கு நன்றி.

      நீக்கு
  11. கும்பகோணத்தில் பள்ளிக்காலத்தில் எங்கள் தாத்தா அவ்வப்போது தரும் 25 பைசாவை உண்டியலில் சேர்த்துவைத்த நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இளமைக்கால நினைவுகளை இப்பதிவு மீட்டு எடுக்க உதவியதால் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வாசகமும் அருமை. சிறுவயதிலிருந்தே சேமிக்கும் பழக்கம் மிகவும் நல்லதான ஒன்று. ஏற்கனவே இருந்த அந்த நல்ல பழக்கம் உங்களிடையே வளர்வதற்கு சிறந்த சில பொறுப்புகளை உங்களிடம் தந்து வளர்ந்தது விட்ட உங்கள் வகுப்பு ஆசிரியருக்கும் நன்றி.

    எனக்குத் தெரிந்து என்னை விட வயதுள்ள உறவு தோழி ஒருவர் பள்ளியிலிருந்து சேமிக்க கற்று அவர் திருமணத்திற்கு நகை வாங்குமளவிற்கு சேர்த்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். அவரையும் முன்னுதாரணமாக கொண்டு நானும் வருடந்தோறும் வரும் கோவில்கள் திருவிழாவிற்கு
    இல்லை பள்ளி செல்லும் போது அப்பா தரும் பணத்தை சேமித்திருக்கிறேன். அவை வீட்டில் ஒரு கஸ்டம் என வந்த கால கட்டத்தில் அனைவருக்கும் பயனாக இருந்ததை மறக்க முடியாது.

    யாரிவள் என்ற தொடரிலிருந்து உங்களைப்பற்றி கருத்து சொல்ல வேண்டுமானால்...., நீங்கள் ஒரு நல்ல பழக்க வழக்கங்களை உடைய நல்ல பெண்ணாக பெற்றோர்களுக்கு பெருமை சேரும் வகையில் வளர்ந்தது மட்டுமின்றி, ஒரு நல்ல மனைவியாக சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் பரிமளிப்பதோடு, ஒரு நல்ல தாயாக தங்கள் கைபக்குவத்தில் மகளுக்கும் அருமையான உணவுளோடு நல்ல பழக்கங்ளை ஊட்டி வளர்த்து அவரையும் சிறப்பான முறையில் வளர்த்து ஒரு சிறப்பான குடும்ப பெண்ணாக உலா வருகிறீர்கள். என் மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன். சரியா? நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. உங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. எங்கள் பள்ளிக்கூடத்தில் சிறு சேமிப்பு திட்டம் ஒன்று இருந்தது, ஆசிரியரே விருப்பமுள்ள மாணவர்களது சேமிப்பை, வங்கிகள் போலவே கணக்கு புத்தகத்தில் எழுதி வைப்பார்; அதை பாஸ் புத்தகம் போல இருக்கும் சிறு நோட்புக்கில் எழுதி கையொப்பம் இருட்டு கொடுப்பார்.
    என்னுடைய சேமிப்பு பணம்(காசு) அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு கணக்கில் இருக்கும் அடுத்த வா ரம் கேண்டினில் இருக்கும்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக பட்சம் இரண்டு வாரம் மட்டுமே சேமிப்பு இருக்கும்! :) தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கோ.

      நீக்கு
  14. பள்ளியில் சேமிப்பு என்பது எங்கள் காலத்தில் இருக்கவில்லை. சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கம் இருப்பது நன்று.

    இனிய தொடர் தொடரட்டும் உங்கள் தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவு குறித்த கருத்துரைக்கு நன்றி மாதேவி. தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. எங்கள் பள்ளியிலும் தபால் நிலையத்தில் சேமிக்கும் முறையை சொல்லி கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துரைக்கும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....