செவ்வாய், 27 அக்டோபர், 2015

பேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 16

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15



ராஜ் பரோட்டா ஹவுஸ்-ல் மதிய உணவினை முடித்துக் கொண்டோம்.  வயிறு நிறைந்தால் மனதும் நிறைந்து விடுகிறது – சற்று நேரத்திற்கேனும்! அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்த படகோட்டம் ஆரம்பித்து இருந்தது.  படகு என்றால் சிறிய படகு என நினைத்து விட வேண்டாம். சற்றே பெரிய படகு – 150 முதல் 200 பேரை அதில் அடைத்துவிடுகிறார்கள் – வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள பெஞ்சுகள் போடப்பட்டிருக்கிறது. பக்கவாட்டிலும் இருக்கைகள் உண்டு!



இந்த இருக்கைகள் தவிர முதல் வகுப்பு ஒன்றும் உண்டு! பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  தலைக்கு மேல் கூரை இருக்கிறது. நான்கு சுவற்றுக்குள் அமர்ந்திருப்பது போல ஒரு அமைப்பு – கண்களுக்கு நேரே திறப்புகள். அங்கிருந்தே மற்ற படகுகளையும் காட்சிகளையும் பார்க்க முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. சாதாரணமாக ஒரு பயணியிடமிருந்து 10 ரூபாய் வாங்குகிறார்கள். இந்த அமைப்புக்கு நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாக சென்றால் 500 ரூபாய் வரை கேட்கிறார்கள். பேரம் பேசிக்கொண்டிருந்தவர்களும் உண்டு!



படகில் ஒவ்வொருவராய் ஏறிக்கொள்ள படகில் உள்ள இருக்கைகள் அனைத்தும் நிரம்பினால் தான் படகைச் செலுத்துவேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தார் படகோட்டியும் அவரது கூட இருப்பவரும் – அப்போதே கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளிலும் மனிதர்கள். மிஞ்சிப் போனால் நான்கு ஐந்து இருக்கைகள் தான் காலி இருக்கும். அவர்களையும் ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டது. டீசல் மோட்டார்களினால் இயக்கப்படும் படகுகள் இவை.



இந்தியாவில் உள்ள பெரும்பாலான படகுத் துறைகளில் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு இல்லவே இல்லை. படகில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் தரவேண்டும் என படகோட்டிகளோ, அரசாங்கமோ நினைப்பதில்லை.  ஹிந்தியில் ஒரு வாசகம் சொல்வார்கள் – ”[b][g]கவான் [b]பரோசே – அதாவது ஆண்டவன் மேல் பாரத்தைப்போட்டு என்று நாம் சொல்வதைப் போல! அதே தான் இங்கே நடக்கிறது.  பேட் த்வாரகாவும் விதிவிலக்கல்ல! இத்தனை பேரை ஏற்றிக் கொண்டு செல்லும் படகுகளில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் கிடையாது.



பயணம் செய்யப்போவது என்னமோ குறைவான தூரம் தான் என்றாலும் கொஞ்சமாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டாமோ? அதுவும் நல்ல ஆழமான பகுதியில் தான் பயணம் செய்கிறார்கள் – கூடவே படகில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம் எனும்போது தப்பித்தவறி விபத்து ஏற்பட்டால் இழக்கப்போகும் மனித உயிர்கள் நிறையவே என்பதை யோசிப்பதே இல்லை. எப்போதாவது இப்படி விபத்து ஏற்படும் போது கொஞ்சம் கெடுபிடிகள் இருக்கும் – பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போக, அடுத்த விபத்து ஏற்படும் வரை சுணக்கம் தான்.



படகில் பயணித்தபடியே மற்ற படகுகளையும், மற்ற காட்சிகளையும் படமெடுத்துக்கொண்டே வந்தேன். சில நிமிடப் பயணத்திற்குள்ளாகவே இறங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். இத்தனை நேரம் உட்கார்ந்திருந்த மனிதர்களுக்கு கரை வந்தவுடன் அப்படி ஒரு அவசரம். படகு நிற்பதற்குள் கரைக்கு தாவிடுவார்கள் போல! எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல நாங்கள் கொஞ்சம் பொறுமையாகவே முன்னேறினோம். எப்படியும் கோவில் வாயிலில் சென்று காத்திருக்க வேண்டும்!



கோவில் மூடிய பிறகு அங்கிருந்து புறப்பட்ட மக்கள் படகைப் பார்த்ததும் அதில் ஏறிக்கொள்ள முண்டியடித்து வருகிறார்கள். அவர்களை சமாளித்து நாம் முன்னேற வேண்டும்.  சாதாரணமாகவே இது போன்ற கோவில்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அரசு தரப்பிலோ, மாவட்ட நிர்வாகம் தரப்பிலோ இது போன்ற இடங்களில் தகுந்த Crowd Management செய்ய வேண்டும் என்றாலும் செய்வதில்லை என்பது நிதர்சனம்.



படகிலிருந்து படகுத் துறையில் இறங்கியபின்னும் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு ஒரு ஏற்பாடு இங்கே உண்டு.  நமது ஊரில் தள்ளுவண்டி இருக்கிறதே அதைப் போல இங்கேயும் சில தள்ளுவண்டிகள் வைத்துக் கொண்டு சிலர் நிற்பார்கள். தள்ளுவண்டியின் மேலே ஏறி நீங்கள் உட்கார்ந்து கொண்டால் உங்களை தள்ளிக்கொண்டு போய் விடுவார்கள்!  “தள்ளு மடல் வண்டி இது தள்ளி விடுங்க!என்று நீங்களே பாடிக்கொள்ள வேண்டியது தான் பாக்கி! இந்த வண்டியில் ஏறி உட்கார அவஸ்தைப் படுபவர்களைப் பார்த்தபோது “இந்த அவஸ்தைக்கு இவர்கள் நடந்தே போயிருக்கலாம் எனத் தோன்றியது!



அப்படியும் அந்த குறுகலான பாதையில் நடந்து முன்னேறினோம். சில படங்கள் எடுக்க நினைத்தாலும், நான் ஒரு பக்கமும் கேமரா ஒரு பக்கமும் இழுத்துக் கொண்டு போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஒரே ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறினேன்.  கோவில் வாயில் சென்று சேர, அங்கே ஏற்கனவே பக்தர்கள் காத்திருந்தார்கள்.  கதவு மூடியிருந்தது.  காத்திருந்தவர்களோடு நாங்களும் சேர்ந்து காத்திருக்கத் தொடங்கினோம். 



ஐந்து மணிக்குத் தான் நடை திறக்கும் என்றார்கள். நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது நான்கு மணிதான். எப்படியும் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். காத்திருந்தோம்....  நீங்களும் காத்திருங்கள் – அடுத்த பகுதி வரை!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 கருத்துகள்:

  1. தொடர்கிறேன். குறைந்த டயர்கள், நிறைய பயணிகள். பீதியான பயணம்தான். :தள்ளு மாடல் வண்டி"யைப் புகைப்படம் பிடிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தள்ளு மடல் வண்டியை புகைப்படம் எடுக்கவில்லை ஸ்ரீராம். அனைத்திலும் பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தபடியால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வயிறு நிறைந்தால் மனதும் நிறைந்து விடுகிறது – சற்று நேரத்திற்கேனும்! //

    ஆம்.

    # நீச்சல் தெரியாதவர் படகு சவாரிக்கு ஆசைப் படக் கூடாதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சல் தெரிந்தாலும் கூட அத்தனை தண்ணீரில் எதிர்நீச்சல் கொஞ்சம் கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  3. அதிக எண்ணிக்கையிலான மனிதர்களுடன் படகினைப் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது ஐயா
    எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல்
    இது போன்றபயணங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. தள்ளுமாடல் வண்டியை நான் பார்க்கலையே!!!! சமீபத்திய வரவோ? இப்படிச்சொல்லிக்கிட்டே பழைய படங்களை எடுத்துப்பார்த்தால் ஒரு வண்டி இருக்கு. அதை உங்க ஃபேஸ்புக்கில் போடறேன். இங்கே படம் போடமுடியாதே:-( அதுதானான்னு பாருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப் புத்தகத்தில் பார்த்தேன். அதே தான். அடுத்த பதிவில் அப்படத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. படகுப் பயணம், அதிலும் இத்தனை மக்களோடு பயணம் என்கிறபோது பயமாகத்தான் இருக்கிறது. கவ்காத்தியிலும் கல்கத்தாவிலும் எனக்கு இதுபோன்ற படகில் பயணம் செய்த அனுபவம் உண்டு. நல்ல பதிவு.!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்திய வடகிழக்கு மாநில பயணங்களில் நானும் சில படகுப் பயணங்கள் மேற்கொண்டேன் - பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  6. தேக்கடி விபத்தை நினைவு படுத்தியது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. படகில் 200 பேரா நம்பமுடியவில்லை. பயமாகவும் இருந்தது. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. கோவிலுக்குச் செல்பவர்களிடம் கூட அனுசரிக்கும் தன்மை இல்லை என்பது தெளிவு..
    அதேபோல - எவ்வளவுதான் சொன்னாலும் - படகுத்துறையில் கண்டு கொள்ளமாட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  9. தனியாகச் செல்வதானால் ரூ 10 ஐந்தாறு பேர் கொண்ட குழுவாகப் போனால் ரூ 500....? லாஜிகலாக இல்லையே பயம் இல்லாமல் பயணிக்க முடிகிறதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து செல்பவர்களுக்கு தலைக்கு பத்து ரூபாய். தனியிடம் - கூண்டுக்குள் அமர்ந்து செல்ல 500-1000, என பேரம் நடக்கிறது.....

      பயம் இருந்தால் பயணிக்க முடியாது! :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. தரிசனத்துக்கு நானும் காத்திருக்கிறேன்.
    படகுப்பயண விவரம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  13. படகைத் திருப்புங்க ... படகைத் திருப்புங்க .. :)
    விட்டுப்போன பதிவுகளைப் படித்துவிட்டு வந்து படகில் ஏறிக்கொள்கிறேன் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காகவே படகை கொஞ்சம் நிறுத்தி வைத்து விட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  14. நானும் படகில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  15. நாங்களும் இந்தப் படகுப் பயணத்தை அனுபவித்திருக்கிறோம். ஏகப்பட்ட கூட்டம். ஏதோ நல்லவேளை, நல்லபடியாகப் போய்விட்டு வந்துவிட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. ஸ்ரீஜி மந்திர் போனபோது நீங்கள் சொல்லியிருப்பதுபோல ஒரு மீன்பாடி வண்டியில் மேலே ஏறி இறங்கினோம். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி இதுபோல ஒரு ரிஸ்க் எடுத்தோம் என்று.

    நானும் விட்டுப்போன பதிவுகளைப் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      சில இடங்களில் இருந்த கூட்டம் இப்போது நினைத்தாலும் பயமாகத் தான் இருக்கிறது!

      நீக்கு
  16. தமிழகத்தில் தான் படகு பயணம் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்று நினைத்தேன்! அங்குமா? தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் இதே நிலை தான் சுரேஷ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. படகுச் சவாரிகளில் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைக் கட்டாயம் செய்யவேண்டும்..அதுவும் இம்மாதிரி அதிகம் பேர் பயணிக்கும்பொழுது..

    ஒரு வழியா வந்துட்டேன்..படகை நிறுத்தி வைத்திருந்ததற்கு நன்றி அண்ணா :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....