வெள்ளி, 18 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஆறு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பிறப்பு இறப்பு மட்டுமே நம்மைத் தேடி வரும். மற்றவற்றை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். 

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே! பகுதி ஐந்து இங்கே!

 

யாரிவள்! பகுதி ஆறு



 

குழந்தைப்பருவத்தில் கற்றுக் கொண்ட எந்தவொரு செயலும் பெரியவர்களானாலும் மறந்து போவதில்லை! மனதில் பசுமையாய் படிந்து விடுகிறது. அதனால் தான் நல்லவற்றை மட்டும் அவர்களிடத்தில் பேச வேண்டும்! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று பெரியவர்கள் சொன்னதன் பொருளும் அது தான்!

 

சுட்டிப்பெண் இப்போது தன் ஆறாம் வயதில் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றிருந்தாள். குட்டித்தம்பியும் அதே  பள்ளியில் எல்கேஜி சேர்ந்து விட்டான். தம்பிக்கும் இவளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசம் என்றாலும் அவன் எடை குறைவாகவும், மெலிந்த தேகத்துடன் இருந்ததால் கைக்குழந்தையெல்லாம் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்! அதனால் ஒரு வருடம் தாமதமாகத் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டான்!

 

இருவரையும் முன்னாலும், பின்னாலும் சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு பள்ளியில் கொண்டு விடுவார் அப்பா! பின்னால் அமர்ந்து செல்லும் போது தன் இரு கைகளாலும் அப்பாவின் தொப்பையை இறுக்கமாக பற்றிக் கொள்வாள்! எங்கேயாவது விழுந்து விடுவோமோ என்ற பயம் அவளுக்கு..🙂

 

இந்த ஒன்றாம் வகுப்பு முதல் இவள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். காலியான சோப்பு டப்பா, பேஸ்ட் டப்பா, தீப்பெட்டி இவற்றையெல்லாம் வைத்து சோஃபா செட் செய்யவும், சிகரெட் டப்பாவில் ஹேண்ட் பேக் செய்யவும், சாக்லேட் பேப்பரில் பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டாள்! 

 

பள்ளிச் சுற்றுலாவாக கோவையிலிருந்து ஊட்டி, குன்னூர், கல்லாறு, ஆழியார் அணை, அமராவதி அணை போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வகுப்புத் தோழமைகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டு ஆசிரியர்களின் கண்காணிப்பில் சந்தோஷமாக  சில்லென்ற ஊட்டியை சுற்றி வந்தாள்.

 

சுற்றுலாவுக்கு முதல் நாள் வீட்டிலிருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று பெரிய லிஸ்ட் கரும்பலகையில் எழுதிப் போடப்பட்டது! அதில் செய்தித்தாளும், எலுமிச்சையும் கட்டாயம் என்றிருந்தது! எதற்காக என்றெல்லாம் இவளுக்குத் தெரியவில்லை! அப்பா இவளுக்காக அவாமினும் வாங்கிக் கொடுத்து விட்டார்! 

 

சுற்றுலா நாளன்று பேருந்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கையில் செய்தித்தாள் போடப்பட்டு அதில் தான் அமர வைக்கப்பட்டனர். கையில் எலுமிச்சையும் வைத்துக் கொண்ட பின் தான் பயணம் துவங்கியது. இப்படியாக  அதிகாலையில் துவங்கிய பயணத்தில் ஒவ்வொரு இடமாக இறங்கி சுற்றிப் பார்த்து கண்டுகளித்த பின்னர் இரவு மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய பின் அவரவர் பெற்றோருடன் அனுப்பப்பட்டனர்.

 

அந்த இரவு நேரம் சைக்கிளோடு அப்பா காத்திருந்தார். பேருந்தை விட்டு இறங்கியதும்  முதல் வேலையாக 'அப்பா! இந்தாப் பிடி! என்று ஒரு கவரை கையில் திணித்தாள்! என்னம்மா! மாத்திரை போட்டுக்கவே இல்லையா! இல்லப்பா! எனக்கு ஒண்ணுமே பண்ணலை! ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா போயிட்டு வந்தேன்! என்றாள்.

 

இப்படியாக பல விஷயங்களை கற்றுணர்ந்து கொண்டும், மகிழ்வுடன் நாட்களை செலவிட்டுக் கொண்டும் சந்தோஷமாகச் சென்றன நாட்கள்! 

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள்! தொடர்ந்து பார்க்கலாம்! அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. நானும் என் இரு மகன்களையும் சைக்கிளில் அமரவைத்து பள்ளியில் கொண்டு சென்று விட்டு, அழைத்து வந்திருக்கிறேன்!!


    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. //கைக்குழந்தை எல்லாம் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்//

    ஹா.. ஹா.. சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரை தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. உங்கள் தம்பி சவலைக் குழந்தை? அப்போது...அதான் அப்படி ஆகியிருக்கிறது.

    // காலியான சோப்பு டப்பா, பேஸ்ட் டப்பா, தீப்பெட்டி இவற்றையெல்லாம் வைத்து சோஃபா செட் செய்யவும், சிகரெட் டப்பாவில் ஹேண்ட் பேக் செய்யவும், சாக்லேட் பேப்பரில் பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டாள்! //

    அதே அதே. நானும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. என் பெரிய மாமா என்னை சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வார்.

    // பள்ளிச் சுற்றுலாவாக கோவையிலிருந்து ஊட்டி, குன்னூர், கல்லாறு, ஆழியார் அணை, அமராவதி அணை போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வகுப்புத் தோழமைகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டு ஆசிரியர்களின் கண்காணிப்பில் சந்தோஷமாக சில்லென்ற ஊட்டியை சுற்றி வந்தாள்.//

    அட! அப்போல்லாம் அவோமின் போட்டு சுற்றுலா போயிருக்கீங்க! அதுக்கு அப்புறம் தான் சுற்றுலான்னா வாந்திப் பிரச்சனை, போக அத்தனை விருப்பமில்லாமல்? ஆமாம் மலைப்பகுதி என்றால் பலரும் எலுமிச்சையை கையில் வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்துக் கொண்டே வருவார்கள் இல்லை என்றால் உப்பு எலுமிச்சை நார்த்தங்காய் ஊறுகாயை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.. இப்போதும் அவாமின் உண்டு கீதா ஜி. ஆனாலும் சில சமயங்களில் பிரச்சனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. 'அப்பா! இந்தாப் பிடி! என்று ஒரு கவரை கையில் திணித்தாள்! என்னம்மா! மாத்திரை போட்டுக்கவே இல்லையா! இல்லப்பா! எனக்கு ஒண்ணுமே பண்ணலை! ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா போயிட்டு வந்தேன்!//

    ஆஹா!! அப்புறம் தான் அந்தப் பிரச்சனையா அப்ப...ஆதி இனியாச்சும் வாய்ப்பு கிடைக்கும் போது ஜி யோடு பயணம் போய்ட்டு வாங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும். சூழல்கள் சரியாக இருந்தால் பயணம் செல்லலாம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. நாங்கள் சிறுவயதில் ஸ்கூல் சுற்றுலா சென்றதில்லை அருகே உள்ள கோவில்கள், பாடசாலைகளுக்குத்தான் சென்றுள்ளோம். ஆறாம் வகுப்பில்தான் பெரிய பாடசாலையில் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி காலத்தில் நானும் சுற்றுலா சென்றதில்லை மாதேவி. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....