சனி, 24 பிப்ரவரி, 2024

காஃபி வித் கிட்டு - 184 - முறைவாசல் - பராஷர் ஏரி - மோட் கச்சோடி - நைனிதால் - முன்னோர்கள் - Parle G - ராமர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கையுடன் ஒன்றிய தங்குமிடம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : முறைவாசல்


கோலம் போடுவது குறித்து உங்களுக்கு புதியதாக என்ன தகவல் தரமுடியும். பொதுவாக பெண்கள் மட்டுமே கோலங்களில் அதிக அளவில் ஈடுபாடு காட்டுவார்கள் என்றாலும் சில ஆண்களும் கோலங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் தினமலர் இணையதளத்தில் அப்படியான ஒரு ஆண் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.  அந்த தகவல் கீழே!


கோலத்திற்கு என, சமூக வலைதளத்தில் பல பக்கங்கள் இருந்தாலும், 'முறைவாசல்' என்ற இணையபக்கம், அதிக கவனம் பெற்றது. காரணம், அதை நிர்வகிப்பது, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரவிசங்கர் என்ற இளைஞர். 


மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டி வழி முழு செய்தியும் படிக்கலாம். 


Placing kolam is also an art! | கோலம் போடுவதும் கலையே! | Dinamalar


அவரது இன்ஸ்டாகிராம் முகவரி:


Muraivaasal (@muraivaasal) • Instagram photos and videos 


******


இந்த வாரத்தின் சுற்றுலாதலம்:  பராஷர் ஏரி





ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல சுற்றுலாத் தலங்கள் உண்டு.  சிலவற்றுக்கு நானும் சென்று வந்திருக்கிறேன். இங்கேயும் அப்பயணங்கள் குறித்து எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய எண்ணிலடங்கா இடங்கள் உண்டு.  மண்டி எனும் மாவட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உண்டு. எனது ஒரு பயணத்தில் மண்டி மாவட்டத்தில் சில இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன் - அது குறித்து இங்கே எழுதியும் இருக்கிறேன். அதே மாவட்டத்தில் இருக்கும் அற்புதமான ஒரு இடம் பராஷர் ஏரி என அழைக்கப்படும் ஒரு ஏரி. கடல் மட்டத்திலிருந்து 9000 அடிக்கும் மேலாக இருக்கும் மலைப்பகுதியில் இப்படி ஒரு அழகிய ஏரி இருந்தால் எப்படி இருக்கும். சுற்றிலும் மலைகள், அதிலும் பனிக்காலத்தில் பனிபடர்ந்த சிகரங்கள், நடுவே ஒரு கோயில், ஏரி, அதிலும் ஏரியில் இருக்கும் மிதக்கும் தீவு என ரொம்பவே ரம்மியமான இடம்.  


சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செய்து போக வேண்டியிருக்கும் என்பதும் இங்கே சொல்ல வேண்டிய தகவல்.  இந்த இடம் குறித்து நிறைய தகவல்கள் இணையத்தில் உண்டு.  விருப்பம் இருப்பவர்கள் பார்க்கலாம்.  இணையத்திலிருந்து இந்த ஏரியின் இரண்டு படங்கள் - குளிர்காலத்தில் எடுத்த படம் ஒன்றும், மற்ற நாட்களில் எடுத்த படம் ஒன்றும் சேர்த்திருக்கிறேன்.  படங்கள் தவிர இந்த இடம் குறித்த தகவல்கள் ( ஹிந்தியில்! :( ) மற்றும் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட சில காட்சிகள் அடங்கிய ஒரு காணொளி ஒன்று கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.  ஹிந்தியில் இருப்பதன் அர்த்தம் தெரியவில்லை என்பவர்கள் அந்த இடங்களை மட்டுமேனும் பார்த்து ரசிக்கலாம்! 


Complete Guide to Prashar Lake | Prashar Lake History| Drone Shots (youtube.com)


******


இந்த வாரத்தின் உணவு - மோட் கச்சோடி



தலைநகர் தில்லிக்கு வந்தால் நிச்சயம் சுவைக்க வேண்டிய ஒரு உணவு வகை மோட் கச்சோடி. அவ்வப்போது நானும் சுவைப்பதுண்டு. சமீபத்தில் ஒரு நிகழ்வொன்றுக்குச் சென்றபோது இந்த மோட் கச்சோடி சுவைத்தேன். பூரி போன்று இருக்கிறதே, எதைக் கொண்டு தயாரிக்கிறார்கள் போன்ற தகவல்கள் தேவைப்பட்டால், இணையத்தில் நிறைய தகவல்கள் உண்டு - பாருங்களேன்.  இல்லை அந்தத் தொந்தரவெல்லாம் வேண்டாம், தில்லி வரும்போது வாங்கித் தாருங்கள் என்றாலும் எனக்கு ஓகே! வாருங்கள் சேர்ந்தே சுவைக்கலாம் மோட் கச்சோடி மட்டுமல்ல, இன்னும் பலப் பல உணவு வகைகளை!  இப்போதைக்கு மேலே சமீபத்தில் எடுத்த மோட் கச்சோடி படம் ஒன்று மட்டும் இணைத்திருக்கிறேன்.



******


பழைய நினைப்புடா பேராண்டி : நைனிதால் பார்க்கலாம் வாங்க


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நைனிதால் பார்க்கலாம் வாங்க! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்ற ஒரு மலைவாசஸ்தலம் நைனிதால். புது தில்லியிலிருந்து சாலை வழிச் சென்றால் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிகளின் நகரத்தினை அடைய நீங்கள் [G]காசியாபாத், ஹாபூர், மொராதாபாத், ஹல்த்வானி வழியாகச் சென்றால் சுமார் ஏழு மணி நேரம் ஆகலாம். மொராதாபாத் வரை சாலை நன்றாக இருக்கும். அதன் பிறகு ராம்பூர் வரை குண்டுகுழியாக இருக்கும் சாலை தான் – பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் எழுதி இருப்பதை இந்தச் சாலையில் தைரியமாக எழுதி வைக்கலாம்.


அப்படி சாலையில் செல்வது உங்களுக்குப் பிடிக்காது எனில், ஆகாய மார்க்கமாகவும் செல்லலாம். ஆனால் நைனிதால் நகரில் விமான நிலையம் இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் எனும் இடத்தில் இருக்கிறது. நைனிதால் நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் தில்லியிலிருந்து பந்த்நகர் செல்லும் விமானங்கள் அதிகம் இல்லை.


அப்படி இல்லையெனில், ரயிலிலும் செல்ல முடியும். நைனிதால் நகரத்தில் ரயில் நிலையம் ஏதுமில்லை. பக்கத்திலிருக்கும் ரயில் நிலையம் காத்கோதாம் [KATHGODAM] – தில்லி நகரிலிருந்து இரண்டு ரயில்கள் காத்கோதாம் வரை செல்லும் – சுமார் ஏழு மணி நேரப் பயணம்.  காத்கோதாம் நகரிலிருந்து நைனிதால் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவு. அதை சாலை வழியாகத்தான் கடக்க வேண்டும்.


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் காணொளி : முன்னோர்கள்


அலுவலத்தில் எனது இருக்கைக்குப் பின்னர் பெரிய கண்ணாடித் தடுப்பும் இரு சிறு ஜன்னல்களும் (அதிலும் இரண்டு - கண்ணாடி மற்றும் கம்பிவலை) உண்டு. அப்படியே அமர்ந்து சாலைகளில் நடப்பதைப் பார்க்க முடியும்.  தவிர ஜன்னல் அருகே வந்து அமர்ந்து கொள்ளும் முன்னோர்களையும் மிக அருகே அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம் - எல்லாம் ஜன்னலுக்கு அந்தப் பக்கம் குரங்குகள் இருக்கின்றன, நம்மை ஒன்றும் செய்து விடாது என்கிற தைரியம் தான். சில சமயங்களில் ஜன்னல்களில் இருக்கும் கம்பி வலைகள் வழி கைகளை நீட்டியும், செல்லக் குரலில் கூப்பிட்டும் சாப்பிட ஏதாவது கேட்பதும் நடக்கும்.  எனது பிரிவில் இருக்கும் சிலர் இது போல வரும் குரங்குகளுக்கு, சப்பாத்தி, உப்புக் கடலை என எதையாவது கொடுத்து பழக்கிவிட்டார்கள் என்பதால் இவை அடிக்கடி வந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது. சென்ற வாரத்தில் அப்படி வந்த முன்னோர் ஒருவர் உப்புக் கடலை சாப்பிட்டபோது எடுத்த காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு!



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: பார்லே ஜி


வடக்கில் தினம் தினம் தேநீருடன் பிஸ்கெட் அல்லது நம்கீன் எனப்படும் சிற்றுண்டிகளோ சாப்பிடுவது வழக்கம். தேநீர் மட்டுமே அருந்தினால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும் என்பதால் இப்படியான பழக்கம். தேநீர் மட்டும் குடித்தால் எப்போதும் சொல்வார்கள், கூடவே பிஸ்கெட் சாப்பிடுங்கள் என! அப்படியான பிஸ்கெட் வகைகளில் பார்லே ஜி நிச்சயம் பல வீடுகளில் பெரிய பாக்கெட்டுகளில் வாங்கப்படுவது வழக்கமான விஷயம். பார்லே ஜி விளம்பரங்கள் சில மனதைத் தொடும் விதத்தில் இருக்கும். அப்படியான ஒரு விளம்பரம் ஒன்று உங்கள் பார்வைக்கு!


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


Maa - You Are My Parle G - Heart touching Ads (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் : ராமர்



சென்ற வாரத்தில் அயோத்யா சென்று இரண்டு நாட்களில் நான்கு ஐந்து முறை ராமரை தரிசித்து வந்த நண்பர் பகிர்ந்து கொண்ட ராமர் படம் - உங்கள் பார்வைக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள். 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


26 கருத்துகள்:

  1. ஏரி பார்க்க தூண்டும் இடம்.  மோட் கச்சோடி இனிப்பா, காரமா?  குரங்கார் அவ்வளவு உயரம் ஏறி வர இறைவன் அவர்களுக்கு வசதி செய்திருக்கிறார்- பயமில்லாமல் அந்தக் குறுகிய இடத்தில் அமரவும்!  நெகிழ்ச்சியான விளம்பரம்.  சம்பந்தம் இல்லாத இடத்தில் பார்லே ஜி நுழைந்தாலும், விளம்பரம் சொல்லும் குறுங்கதை கவிதை.  ராம் லல்லாவை வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோட் கச்சோடி - காரம் தான்.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ப்ராஷர் ஏரிக் கோவிலின் பூசாரியாகப் போனால் எழில் மிகுந்த அந்த இடத்தை ஆண்டுதோறும் கண்டு களிக்கலாம்.

    இதை விஷ் என்று நினைத்து வரம் கொடுக்காமல் இருக்கணும். இடம் உணவு உடை தேவைக்கு அதிகமாக இருந்தால்தான் மனதில் ரசிக்கும் இயல்பு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் பூசாரியாகப் போனால் - ஆஹா... நல்ல வாய்ப்பு என நமக்குத் தோன்றினாலும், அங்கே இருக்கும் பிரச்சனைகள் அங்கே இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. ஆனாலும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய எண்ணிலடங்கா இடங்கள் உண்டு. மண்டி எனும் மாவட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உண்டு. எனது ஒரு பயணத்தில் மண்டி மாவட்டத்தில் சில இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன் - அது குறித்து இங்கே எழுதியும் இருக்கிறேன். //

    ஆமாம் ஜி. இரு மாநிலங்களிலும் பார்க்க வேண்டியவை நிறைய உள்ளன. நீங்கல் எழுதியவையும் நினைவில் இருக்கின்றன. இடங்கள் குறித்து.

    மண்டி போயிருக்கிறோம் அங்கு இந்த ஏரி இருப்பதையும் தெரிந்து வைத்திருந்தோம் ஆனால் அப்போது மலையேற்றத்திற்காக நாங்கள் முன்னேற்பாடுகளுடன் செல்லாததால். பட்ங்கள் செமையா இருக்கு. பராசரர் இதன் கரையில் அமர்ந்திருந்திருக்கிறாராம் அதனால் அதற்கு இப்பெயர் என்பதும் தெரியவந்தது. அழகான இடம் இல்லையா மிதக்கும் தீவு அது எப்படி இருக்கும் என்று நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிய ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அதிக அளவு மலையேற்றம் தேவையில்லை என்றும், ஏரிக்கு 100 மீட்டர் முன்பு வரை வண்டி போகிறது என்றும் மேலதிகத் தகவல்களை நண்பர் ப்ரேம் பிஷ்ட் சொன்னார்.

      எனக்கும் இங்கே செல்ல வேண்டும் என எண்ணம் உண்டு. வாய்ப்பு அமையவேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. அவர்களின் கூட்டம் அலுவலக ஜன்னலில் அமர்ந்து உணவுக்காக்க் கூச்சல் போடாமலிருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர்கள் இரண்டு நான்கு பேராக வந்து குரல் கொடுப்பதுண்டு. முடிந்தால் காணொளி எடுத்து பதிவிடுகிறேன் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. முறைவாசல் - பார்க்கிறேன். ஆமாம் முறைவாசல் என்று சொல்வாங்க தமிழ்நாட்டில். அது எனக்கு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகுதான் (ஹாஹாஹா நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தாலும் இந்தச் சொல் தமிழ்நாட்டின் வடக்குக்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்!!)

    எங்க்ள் ஊர்ப்பக்கம், கேரளத்தில் பொதுவாக ஆண்கள்தான் ரங்கோலி போல கோயில்களில் கோலம் போடுவாங்க சில வழிபாடுகளுக்கு. கர்நாடகத்திலும் கோயில்களில் சில பரிகாரங்கள், சில நிகழ்வுகளுக்கு ரங்கோலி ஆண்கள் போடுவாங்க. அது பெரும்பாலும் மங்களூர் உடுப்பி பக்க கோயில் முறைகளைப் பின்பற்றும் கோயில்களில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது நடப்பது தான். சில இடங்களில் ஆண்களும் கோலம் போடுகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. மோட் கச்சோடி சுவைத்திருக்கிறேன். தில்லியிலும், இதோ இங்கும். பல வட இந்தியக்கடைகள்தான் இங்கு பரவலாக. வீட்டிலும் செய்திருக்கிறேன் ஆனால் அடிக்கடி செய்வதில்லை.
    moth பீன்ஸ் வட கர்நாடகா, மஹாராஷ்ட்ராவில் இந்த பீன்ஸ் (பச்சைப்பயறு போலத்தான் ஆனால் கொஞ்சம் ப்ரௌன் நிறத்தில் இருக்குமே உங்களுக்கும் தெரியாததா!!!!) அது இங்கும் நன்றாகக் கிடைக்கிறது என்பதோடு, கொல்ஹாபுரி மிசல் பாவ் ற்கும் இந்த பய்றுதான் பயன்படுத்துகிறார்கள்.

    சென்னையில் இந்தப் பயறு கிடைத்ததில்லை அப்போது. இப்ப கிடைக்குமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோட் பீன்ஸ் - இப்போது தெற்கிலும் கிடைக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. தேநீருடன் பிஸ்கெட் அல்லது நம்கீன் //

    ஆ இது இல்லாமல் அவங்க தேநீர் தருவதே இல்லை. அதுவும் காலை வேளையில் தேனீருடன். எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் பாவம் அவங்க அன்போடு அதுவும் வட இந்தியர்களின் உபசரிப்பு!!!! தேநீருடன் அருகில் இருப்பவை அதிகமாக அதுவும் இனிப்பும் கூடவே!!!

    சில பகுதிகளை மதியம் வந்து பார்க்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேநீருடன் பிஸ்கெட் அல்லது நம்கீன் - இவர்களை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ள முடியாது தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பராஷரர் பச்சை மற்றும் பனி சூழ் படங்களே போதும் அதன் அழகை நுகர. அந்தக் கோயில் பற்றி தெரிந்து கொள்ள சுட்டிக்குச் செல்கிறேன்.

    ஓ உங்கள் அலுவலகத்திற்கு வரும் visitor ஆ அவர்!!!. காணொளியை ரசித்தேன். கோலம் பற்றி பேச நம்மிடையே பல கலைஞர்கள், வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி.

    வட இந்தியா போல் கேரளத்தில் மாலையில் தேநீருடன் கடிக்கான் என்று சொல்லி சிலது வழங்கப்படுவதுண்டு வீடுகளில். ஆனால் வட இந்தியாவில் போல் இல்லைதான்.
    விளம்பரம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடிக்கான் - எனக்கு பதிவிடும் போது நினைவுக்கு வரவில்லை - கேரளத்தில் இப்படி சுவைத்ததுண்டு.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. ஏரியின் புகைப்படம் அழகு.
    மற்ற தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த படம், தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  10. ஏரிப் மிகுந்த அழகு தகவல்களும் சிறப்பு.
    மோட்கச்சோடி புதிய உணவு பார்க்க நன்றாக உள்ளது.

    நமது முன்னோர் காணொளி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  11. பார்லே காணொளியை ரசித்தேன் மிக அழகான குறும்படம் போன்ற விளம்பரம்.

    நைனிதால் பதிவையும் வாசித்துவிட்டேன் ஜி. அந்த அருவி செமையா இருக்கு. மிக அழகான படங்கள் சாலை மலையில் ஏறும் போது கீழே உள்ள சாலை அருமையான படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. பராஷர் ஏரி மிக அழகு. பதிவின் அனைத்தும் அருமை. விளம்பர காணொளி மிக அருமை.

    குரங்கார் தினம் ஜன்னல் வழியாக உணவு எடுக்கும் காணொளியும் நன்றாக இருக்கிறது

    கோலம் போடும் முறைவாசல் தினமலர் செய்தியும் அவர் வைத்து இருக்கும் பழைய பொருட்கள் கடையும், அவர் போடும் கோலங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. அனைத்தும் ரசனையான தகவல்கள். பராஷர் ஏரி வியக்கவைக்கிறது. குரங்கார் கடலை சாப்பிடுவது அழகு. பார்லேஜி விளம்பரம் மனதைத் தொடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தஙகளது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....