சனி, 10 பிப்ரவரி, 2024

காஃபி வித் கிட்டு - 182 - காதலர் தினம் - இச்சே காவ்ன் - என்ன நம்பர்? - சீட்டு கிடைக்கலையே - அகமும் புறமும் - மகோதரம் - புத்தர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர் போல். இந்த உலகத்து மாசும், அழுக்கும் படாத தூய்மையான நீர் அது - டாக்டர் மு.வ.

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் : காதலர் தினம்


 

இந்த வாரம் பேருந்தில் உறையூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன்.  சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் வழி மத்திய பேருந்து நிலையம் செல்லும் உள்ளூர் பேருந்து அது. சத்திரம் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட போது நான் நின்று கொண்டிருந்த இடத்தினருகே இருந்த இருக்கைகளில் வரிசையாக பள்ளி செல்லும் பெண்கள் - அனைவரின் கைகளிலும் பூக்கள். காதலர் தினம் வரப்போகிறது என்பதை பேருந்தில் இருந்த அனைவருக்கும் நினைவூட்டியது அந்தப் பூக்கள்.  எந்த வண்ணத்தில் பூ கிடைக்குமோ என்று அந்தப் பள்ளிப் பெண்களில் ஒரு பெண் பேசியது கேட்டபோது, இந்தப் பள்ளிப் பருவத்திலேயே காதலர் தினம் கொண்டாட்டம், காதல், “அவன் என் ஆளு”, அவன் நம்மளையே பார்த்துட்டு இருக்கான், போன்ற விஷயங்கள் இவர்களுக்குத் தேவையா என்று மனதில் தோன்றியதை தடுக்க இயலவில்லை. அதுவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட விஷயங்கள் மனத்தைக் கலங்கடித்தன.  அவர்களைப் பார்க்கும் போது ஒன்பதாவது அல்லது படிக்கலாம் என்று தோன்றியது.  “முளைத்து மூணு இலை விடல” என்ற வாசகம் ஏனோ வந்து போனது.  காதல் தவறு என்று சொல்ல வரவில்லை - ஆனால் அதற்கான நேரம் இதுவல்லவே என்று தான் தோன்றியது. காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் இன்னும் சில நாட்களுக்கு இந்த விஷயங்கள் நடக்கத்தான் நடக்கும் - “கண்டுகொள்ளாதே, எதையாவது சொல்லிவிட்டால் ‘வந்துட்டாருய்யா Boomer Uncle’ என்று அப்பெண்கள் சொன்னாலும் சொல்லலாம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு பேருந்தில் பயணித்து இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டேன். 

 

******

 

பயணம் செய்யலாம் வாங்க:  இச்சே காவ்ன்


 

மேற்கு வங்கத்தில் நல்லதொரு சுற்றுலாதலம் என்றால் பலரும் டார்ஜிலிங் என்று சொல்லக்கூடும்.  அதற்கு மேலும் நிறைய இடங்கள் அங்கே உண்டு.  சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மேற்கு வங்கத்தில் இருக்கும் இச்சே காவ்ன் (ICHCHE) எனும் கிராமத்திற்குச் சென்று வந்தார். இச்சே என்ற சொல்லுக்கு விருப்பம் என்ற பொருள் உண்டு. காவ்ன் என்றால் கிராமம். காலிம்பாங் அருகே இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல அருகே இருக்கும் இரயில் நிலையம் New Jalpaiguri, அருகே இருக்கும் விமான நிலையம் Bagdogra. இந்த இச்சே காவ்ன் அருகிலேயே இன்னும் சில அழகான கிராமங்கள் உண்டு - சிலேரி (Sileri) காவ்ன், ராம்தூரா போன்ற இடங்களும் உண்டு. இப்பகுதியில் அழகிய Teesta நதியும் ஓடுகிறது. ராம்தூரா-விலிருந்து பனிபடர்ந்த கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தினைக் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் தகவல். எப்போதாவது மேற்கு வங்கத்திற்குச் செல்ல வாய்ப்பு அமைந்தால் இந்தச் சிறு கிராமங்களுக்குச் சென்று வரலாம்.  தங்குவதற்கு நிறைய இடங்களும் இங்கே உண்டு - குறிப்பாக Home Stay. பழங்காலத்தில் Silk Route என்று சொல்லப்பட்ட பாதையில் இருக்கும் கிராமங்கள் இவை.  இணையத்தில் இந்த இடங்கள் குறித்த காணொளிகள் உண்டு. பெரும்பாலானவை பெங்காலி மொழியில் இருக்கின்றன.  இங்கே செல்ல ஒரு பயணத் திட்டம் குறித்து சொல்லும் ஒரு ஆங்கில மொழி காணொளி கீழே.   


  

பெங்காலி மொழியில் ஏழு நிமிட காணொளி ஒன்று காண சுட்டி கீழே. மொழி புரியவில்லை என்றாலும் அழகான இடங்களை நீங்கள் பார்க்க முடியும். பாருங்களேன்.

 

Icche gaon | Ramdhura | Sillery gaon | kalimpong tourist places | Offbeat Kalimpong | Kanchenjunga| - YouTube

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை - கார் விபத்தா என்ன நம்பர்?

 

சிறுகதைகள் தளத்தில் படித்த ஒரு சிறுகதை தான் இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை.  கதையை எழுதியவர் சே.வே.சண்முகம்.  எழுதிய ஆண்டு - 1968. கதையிலிருந்து சில வரிகள் கீழே. 

 

எந்த வழியானாலும் அது இஷ்டத்துக்கு வருவது தானாம் அதிர்ஷ்டம்! நல்லவேளை, நம் இஷ்டத்துக்கு வராமற்போனதால் அது உலகில் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறது!

 

அதிர்ஷ்டம் என்னும் வார்த்தை மட்டும் இல்லா விட்டால் உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் பேர் நெஞ்சு வெடித்தே செத்துப் போவார்கள்— ஏமாற்றம் தாளாமல்!

 

‘முதற் பரிசு கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் ஒரேவொரு நம்பர் தவறிப் போச்சு. ஊம்… நமக்கு இப்ப அதிர்ஷ்டமில்லை…’ என்று ஏங்கி உருகுகிறவர் அதிர்ஷ்டம் என்பதை நம்பாதவராயிருந்தால் என்ன கதிக்கு ஆளாவார்?

 

அதிர்ஷ்டம் திடீரென்று குதித்துச் சிலரை மயக்கம் போட்டு விழச் செய்யுமாம். அப்படி விழுந்தவர்களில் சில பேர் மறுபடி விழித்தெழுவது மில்லையாம். ‘அதிர்ஷ் டத்தின் தாக்குதல்’ என்பார்கள் இதை!

 

நாலு நம்பர் லாட்டரி விவகாரமொன்றின் தாக்கு தலுக்கு நானும்தான் ஆளானேன். ஆனால், அது எந்த வகையைச் சேர்ந்த அதிர்ஷ்டம் தெரியுமா?

 

முழு கதையும் படிக்க சுட்டி கீழே. 

 

கார் விபத்தா என்ன நம்பர்? - சிறுகதைகள் (sirukathaigal.com)

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : என் சீட்டு கிடைக்கலையே அவனுக்கு…

 

2020-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - என் சீட்டு கிடைக்கலையே அவனுக்கு… - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

”என் சீட்டு அவன் கைக்கு ஆம்பட மாட்டேங்குதேடி… என் சீட்டு மட்டும் அவன் கைக்கு ஆம்பட மாட்டேங்குதேடி…” புலம்பிக் கொண்டிருந்தாள் சுப்பிப் பாட்டி! என்ன சீட்டு, யார் கைக்கு ஆம்படமாட்டேங்குது? அதாவது கிடைக்க மாட்டேங்குது அந்த சீட்டு?

 

சுப்பிப் பாட்டிக்கு வயது எண்பதுக்கு மேல்! நாள் முழுவதும் சமையல் வேலைக்கே நேரம் போதாது – சும்மாவா வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் எந்த நேரம் என்ன வேண்டும் என்பது சுப்பிப் பாட்டிக்கு மட்டுமே தெரிந்த விஷயம் – அதுவும் யாருக்கு என்ன சுவை பிடிக்கும் என்பது வரை அவருக்கு அத்துப்படி! இப்போது மாதிரி இரண்டு மூன்று பேர் கொண்ட குடும்பம் அல்லவே! வீட்டில் எப்போதும் பத்துப் பதினைந்து பேருக்குச் சமைக்க வேண்டும் – அதைத் தவிர விருந்தாளிகள் இல்லாத நாளே இருக்காது! அதனால் கூடவே சமைத்து வைக்க வேண்டும். வருடம் முழுவதற்குமான அப்பளம் இட்டு வைக்க வேண்டும். அதுவும் ஆயிரக் கணக்கில் அப்பளம் இடுவார்கள்! அத்தனைக்கும் மாவு இடித்து, சலித்து என அது ஒரு பெரிய ப்ராசஸ். வருடாந்திரத்திற்குத் தேவையான வடாம், வத்தல், சாம்பார் பொடி என பலதும் செய்து வைக்க வேண்டும். கூடவே வயலிலிருந்து வரும் நெல், தானியங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும்! எத்தனையோ வேலைகள்.

 

சுப்பிப் பாட்டி இல்லாவிட்டால் அந்த வீட்டில் இத்தனை வேலைகள் நடந்து விடாது என்று வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனாலும், சுப்பிப் பாட்டியிடம் அவ்வப்போது சொல்லிக் காட்டாமல் இருந்ததில்லை – “உன்னை விட சின்னவங்க எல்லாரும் போய்ட்டாங்க… நீ மட்டும் இன்னும் முளைக்குச்சி அடிச்சு கட்டினமாதிரி இருக்க!” என்று பெற்ற மகளே கூட கேட்ட நாட்கள் உண்டு! அப்படியான நாட்களில்தான் சுப்பிப் பாட்டி “என் சீட்டு அவன் கைக்கு அம்படமாட்டேங்குதே… நான் என்ன பண்ணட்டும்! ஊர்ல இருக்கற பல இளவட்டங்களோட சீட்டு மட்டும் அவன் கண்ணுக்குப் பட்டு அவங்களை அழைச்சுக்கறானே! என் சீட்டு கிடைச்சா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்துடுவேன்” என்று சொல்வது சுப்பிப்பாட்டிக்கு வழக்கம்.  வயது எண்பதுக்கு மேல் ஆனபோதும் தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.

 

முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த படமும் கவிதையும் : அகமும் புறமும்

 

முகநூலில் சமீபத்தில் பார்த்த ஒரு படமும் அதற்கான கவிதை ஒன்றும் கீழே. கவிதை எழுதியது திரு இராஜேஷ் சங்கரப்பிள்ளை. இவர் ஒரு பள்ளி ஆசிரியர்.  இன்னும் ஒரு தகவல் - இவர் எனது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் உறவினரும் ஆவார். 


 

அன்று

அவன் ......

 

திருடிச் சென்ற

 

'அகத்தை '

 

இன்று

இவர்....

 

'புறமாய் '

 

பார்க்கின்றார்.

 

இராஜேஷ் சங்கரப்பிள்ளை

 

படம் .... திருடப்பட்டது.

 

******

 

இந்த வாரத்தின் அரட்டை : மகோதரம்


 

தமிழகத்தில் இருக்கும்போது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த விஷயங்கள் பலமுறை முன்னரே சொல்லியிருந்தாலும் கூட மீண்டும் மீண்டும் அதே விஷயங்கள் பேசுவார்கள். அப்படி பேசும்போது சொல்லும் விஷயங்கள் நம்பமுடியாதவையாக கூட இருக்கலாம். ஆனாலும் கேட்டுக்கொண்டு இருப்பேன். அந்தக் காலத்தில் இருந்த நோய்கள், அந்தக் கால மனிதர்கள் என பல விஷயங்களைச் சொல்வார்கள். அப்படி அந்தக் காலத்தில் அவர்களுடன் வசித்த உறவுப் பெண்மணிக்கு இருந்த நோய் குறித்து நிறைய முறை சொல்லி இருக்கிறார்கள். அந்த நோய் மகோதரம் என்கிற நோய் - வயிறு வீங்கியே இருக்கும் என்றும் சிறுநீர் பிரிவது மிகவும் குறைவு என்றும் அதற்கு பெரிதாக தீர்வு இல்லை என்றும் கிராமத்து வைத்தியர் தரும் மருந்துகள் தவிர இன்னுமொரு சிகிச்சையாக சொன்ன விஷயம் தான் highlight… 

 

இந்த நோய்க்கு வொளவால்களின் எச்சங்களைச் சேகரித்து அவற்றை பொடியாக்கி தண்ணீர் சேர்த்து பெரிதாக இருக்கும் வயிற்றில் தடவுவார்களாம்.  அப்படித் தடவினால் சிறுநீர் பிரிந்து வயிறு கொஞ்சம் குறையும் என்றும் சொல்வார்கள்.  நினைத்தாலேயே குமட்டுகிறது என்றாலும் இப்படியெல்லாம் இருந்த சிகிச்சைகளை இன்றைய நாளில் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன்.  

 

On a different note, பிள்ளையாருக்கு மகோதரா என்ற பெயர் உண்டு - அந்த வார்த்தையின் அர்த்தம் பெரிய வயிறு உடையவன். பெயர்க்காரணமாக ஒரு கதையும் உண்டு. அந்தக் கதையை பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.   மேலே சொன்ன நோய்க்கும், அதனால் வயிறு வீங்கி பெரிதாகிவிடுவதால் மகோதரம் என்கிற பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தோன்றியது. 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் : புத்தர் 



 

சமீபத்தில் முகநூலில் பார்த்த ஒரு படம் மிகவும் பிடித்திருந்தது.  நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

28 கருத்துகள்:

  1. பள்ளிப் பையன்களும், பளிச் சிறுமியரும் இப்படி ஹார்மோன் வசப்படுவதற்கு பாதி காரணம் சினிமாக்கள், அப்புறம் டெக்னாலஜி வளர்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான ஹார்மோன் கோளாறுகளுக்கான நீங்கள் சொல்லி இருக்கும் காரணம் உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிறுகதையின் வரிகள் ஈர்க்கின்றன.  படிக்க வேண்டும்.

    சுப்பிப்பாட்டி பற்றி ஏற்கெனவே படித்து நெகிழ்ந்திருக்கிறேன் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சுட்டி வழி சென்று இந்தச் சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.

      சுப்பிப்பாட்டி - நீங்கள் படித்து கருத்துக்களையும் பகிர்ந்து இருக்கிறீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மகோதரக்கதை பற்றி கேள்விப்பட்டதில்லை.  ஆனால் தொப்பைப் பிரச்னை இப்போது நிறைய நபர்களுக்கு உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொப்பைப் பிரச்சனை இப்போது நிறைய நபர்களுக்கு உண்டு. உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. புத்தர் படம் அழகு.  அட, இவர் கூட சிரிக்கும் புத்தர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிக்கும் புத்தர் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இன்றைய பள்ளி சிறுவர் சிறுமிகளிடம் மட்டுமல்ல கல்லூரியில் பயிலும் மாணவர் மாணிவிகளுக்கிடையே வருவது காதல் இல்லை பருவக் கோளாறுகளினால் ஏற்பட்ட இனக் கவர்ச்சிதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருவக்கோளாறுகளினால் வந்த இனக்கவர்ச்சி தான் - அதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. இப்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகள் கல்லூரி மாணவர்களின் போக்கு கொஞ்சம் கவலை கொள்ளத்தான் செய்கிறது. நான் முதலில் சுட்டுவது பெற்றோர் வளர்ப்புச் சூழல் வளரும் சூழலைத்தான்.

    புத்தர் படம் வெகு அழகு.

    மகோரதம் - புதிய தகவல். ஆச்சரியமாக இருந்தது, பொதுவாகவே சிறுநீர் சரியாகக் கழியவில்லை என்றால் வயிறு பெரிதாகும். அதற்கு இப்போதெல்லாம் சிகிச்சை நன்றாக இருக்கிறது. மகோரதம், அக்கதையும் கேட்டதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பள்ளிக்குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் நிலைக்கு பெற்றோர்களின் வளர்ப்பும் ஒரு காரணமே.

      புத்தர் படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மகோரதம் குறித்த விஷயங்கள் உங்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. மகோரதம் குறித்த கதை - விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. படத்திற்கான கவிதை - படம் எங்கூர் போல இருக்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலம் போன்று இருக்கிறதோ என்று கூர்ந்து போர்த்தால் அது இல்லை. சங்கரப்பிள்ளை என்ற பெயருமே எங்கூர்ப்பக்கம் என்று தோன்றியது கடைசியில் நம்ம பப்பு அண்ணாச்சியின் உறவா!!

    கவிதை நன்று.

    எனக்கு அந்தப் படத்தில் உள்ள பெண் மிகவும் அபாயகரமான நிலையில் பாலத்தின் விளிம்பில் உட்கார்ந்து இருக்கிறாளே என்ற கவலையுடன் பார்த்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கான படம் தொட்டிப் பாலம் அல்ல - படம் கேரளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

      கவிதை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. படத்தில் உள்ள பெண் அபாயகரமான நிலையில் அமர்ந்து இருப்பது - ஹாஹா... அவர்களுக்கு அதைப் பற்றிய கவலை எல்லாம் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. சுப்பிப்பாட்டியை எப்படி மிஸ் செய்தேன்! வாசித்த நினைவில்லை. போய்ப்பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்கள் அப்பதிவினை படிக்கவில்லை போலும் - அப்பதிவில் உங்கள் கருத்துக்கள் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. வெங்கட்ஜி - சுப்பிப்பாட்டி பதிவு மனதை நெகிழ்த்திவிட்டது. ஆமாம் வயதானவங்க இருந்தா சிலர் இப்படிச் சொல்லிக் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். பாவம்.

    இதை நீங்க கதை போலவே எழுதியிருக்கீங்க வெங்கட்ஜி...சிறுகதைக்கானவை நிறைய இருக்கு. நீங்க அப்படியாகவே எழுதியிருக்கலாம் இப்போதே கதை போன்றுதான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பிப்பாட்டி பதிவு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கதை போலவே இருந்தது இந்தப் பதிவு - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. காதலர் தினம் கண்டு கொள்ளாமல் போவது நன்று.

    காணொளி பார்த்து ரசித்தேன் சிறப்பாக இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலர் தினம் - கண்டுகொள்ளாமல் போவதே நன்று - 100% உண்மை.

      காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. இச்சே காவ்ன்//

    பார்த்து குறித்துக் கொண்டுவிட்டேன், ஜி. அருமையாக இருக்கு. ஆமாம் ஒவ்வொரு இடத்திலும் புகழ்பெற்ற இடங்கள் தவிர நிறைய இருக்கின்றன சுற்றிப் பார்க்க அமைதியாக இருந்துவிட்டு வர என்று. ஆனால் பெரும்பாலும் சுற்றுலாத்தலங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆனால் இவை இப்படியே இருக்கட்டும்னும் தோன்றும். இல்லைனா இப்படியான இடங்கள் அமைதியை இழந்துவிடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இச்சே காவ்ன் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இப்படியான இடங்கள் இருப்பது நல்லதே! கொஞ்சம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதர்கள் அவற்றை அப்படியே விட்டு விடுவதில்லை என்பது நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. காணொளி அருமை மிகவும் அழகிய இடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியும் பதிவும் உங்களுக்கும் பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  13. இச்சே காவ்ன் - அர்த்தம் தெரிந்தது. அழகான மலைக்கிராமம் என்று தெரிகிறது. காணொளிகளில்.

    பள்ளிச்சிறுமிகள் பற்றி என்ன சொல்ல? இப்போதைய இந்த சமூக வலைத்தள, மீடியா காலகட்டத்தில் பெற்றோரின் கவனம், வளர்ப்பு முந்தைய காலகட்டத்தை விட இன்னும் முக்கியம் என்பதைச் சொல்கிறது.

    உள்ளங்கையி ஏந்தியிருக்கும் புத்தர் கீச்செயின் படம் மிக அழகாக இருக்கிறது.

    மகோதரம் தகவல் புதிதாக இருக்கிறது ஆனால் இச்சொல் விநாயகர் பாடல் ஏதேனும் வருமோ கேட்டது போல் இருக்கிறது. அப்பாடலை சட்டென்று நினைவு கூர முடியவில்லை. சமஸ்கிருத பாடல் என்று நினைக்கிறேன் மோதகம் என்று வரும்.

    சுப்பிப் பாட்டியும், சிறு கதையும் வாசிக்கிறேன்.

    கவிதை நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  14. இச்சே காவ்ன் காணொளி அருமை, அதை சுற்றி உள்ள அழகான கிராமங்கள்.
    கவிதை அருமை.
    சுப்பு பாட்டி கதை அருமை. வய்தானவர்கள் சொல்லிய சொல் உண்மை அவர் அவராக்கான நேரம் வரும் வரை நம் கடமைகளை செய்து கொண்டு காத்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....