வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - லான்ஸ்(d)டௌன் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட முத்தரசநல்லூரில் குருவாயூரப்பன் கோயில் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்.  

 

*******

 

இத்தொடரின் முதல் பகுதியில் பார்த்த விஷயங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். முதல் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்தச் சுட்டி வழி நீங்கள் படிக்கலாம். தொடர்ந்து இந்தப் பயணம் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

லான்ஸ்(d)டௌன் - பார்க்க என்ன இருக்கிறது?





இயற்கையான சூழலில் இப்படி ஒரு வீடு அமைந்தால்…
 

இந்தக் கேள்விக்கு, “பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை” என்று நான் சொன்னால் உங்களுக்கு அது அதிர்ச்சியான பதிலாக இருக்க முடியும். ஆனால் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த லான்ஸ்(d)டௌன் நிச்சயம் இடம் பிடித்து விடும். காரணம் இங்கே இருக்கும் அமைதியும், இயற்கை எழிலும் என்று சொல்லலாம்.  மிகவும் அமைதியான பகுதி இது. சுற்றிலும் மலைகள், ஆங்காங்கே பாய்ந்து கொண்டிருக்கும் கங்கையின் உபரி நதிகள், சின்னச் சின்னதாக சில கடைவீதிகள், சில கோயில்கள் என பார்க்க வேண்டிய இடங்கள் சில இருந்தாலும், அமைதியை நாடியும், எந்த வித வேலைகளும் இல்லாமல் இயற்கை எழிலை ரசித்தபடி இருக்கவும் இங்கே சென்று வரலாம்.  ஒன்றிரண்டு நாட்களேனும் இங்கே தங்கிவருவது நமது உடலுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என்பதையும் இங்கே சொல்வது நல்லது.  எங்களைப் போன்று தலைநகர் தில்லியின் மாசுத் தொல்லையிலிருந்து விடுபட்டு இந்த லான்ஸ்(d)டௌன் போன்ற இடத்திற்குச் சென்று வருவது நிச்சயம் நல்லதொரு பயணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

 

எங்கள் பயணம் ஆரம்பம்…



நாங்கள் பயணித்த வாகனம்…
 

திட்டமிட்டபடி 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை ஐந்து மணிக்கு, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த 12 இருக்கைகள் கொண்ட Tempo Traveller உடன் ஓட்டுநர் அனில் திவாரி வந்து சேர்ந்தார்.  மொத்தம் பத்து பேர் கொண்ட எங்கள் நண்பர்கள் குழுவினை அவரவர் இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து ஏற்றிக் கொண்டு தில்லி நகரின் எல்லையிலிருந்து ஆரம்பிக்கும் தில்லி - மீரட் அதிவேக பாதையைத் தொடும் போது காலை ஆறு மணிக்கு 10 நிமிடங்கள் இருந்தன.  நாங்கள் வாகனம் ஏற்பாடு செய்யும்போதே சில சிக்கல்கள் இருந்தன.  தில்லியில் உள்ள அதீத அளவு மாசு காரணமாக டீசல், பெட்ரோல் வாகனங்கள், குறிப்பாக Commercial வாகனங்கள், காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை தில்லி நகர எல்லைக்குள் உலா வர தடை விதித்து இருந்தார்கள். அப்படி உலா வரும் வாகனங்களுக்கு அதிக அளவு அபராதமும் வாங்கிக் கொண்டு இருந்தார்கள் என்பதால், வாகனம் ஏற்பாடு செய்தபோது வாகன உரிமையாளர் (DH)தீரஜ் ஜிண்(d)டல் அவர்கள் இந்தத் தகவல் சொன்னதோடு, நிச்சயம் ஆறு மணிக்குள் தில்லி எல்லையைக் கடந்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  சொன்னபடியே தில்லி நகர எல்லையை காலை ஆறு மணிக்குள் அடைந்து விட்டோம். நகர எல்லை அருகே Ghazipur-இல் இருக்கும் Bharat Petroleum Outlet-இல் வண்டிக்குத் தேவையான டீசல் (ரூபாய் 4000/-) நிரப்பிக்கொண்ட பிறகு எங்கள் பயணம் சீரான வேகத்தில் தொடங்கியது.

 

லான்ஸ்(d)டௌன் செல்வது எப்படி?



மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியன் - மலைமுகடுகளுக்கு இடையே…
 

உத்திராகண்ட் மாநிலத்தின் லான்ஸ்(d)டௌன் செல்ல சாலை வழி, இரயில் வழி அல்லது விமான வழி இருந்தாலும் பெரும்பாலும் சாலை வழியே சிறந்தது.  சாலை வழி பயணம் என்றால் தில்லியிலிருந்து புறப்பட்டு Meerut Expressway வழி மீரட் வரை பயணித்து அதன்பின்னர் (B)பிஜ்னோர், நஜிமாபாத்(dh) வழியாக உத்திரப்பிரதேச எல்லையைக் கடந்து உத்திராகண்ட் மாநிலத்தின் கோட்(dh)த்வார் வழி லான்ஸ்(d)டௌன் சென்றடைய வேண்டியிருக்கும். சாலை வழி பயணத்திற்கான தூரம் சுமார் 275 கிலோமீட்டர்.  மீரட் நகரத்திற்குப் பிறகு சாலை மிகவும் சுமாராகவே இருக்கும் என்பதால் இந்தத் தொலைவினை கடக்க, குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆகலாம். காலை ஆறு மணிக்குள் புறப்பட்ட எங்கள் வண்டி லான்ஸ்(d)டௌன் சென்றடைந்தபோது சுமார் 02.30 மணி - வழியில் இரண்டு இடங்களில் தேனீர் மற்றும் காலை உணவுக்காக நின்றதும் இந்தக் கணக்கில் உண்டு என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன். 

 

நீங்கள் இரயிலில் பயணிக்க விரும்பினால் தில்லியிலிருந்து கோட்(dh)த்வாரா (கோட்(dh)த்வார்) வரை சுமார் 240 கிலோமீட்டர் பயணித்து அதன் பிறகு சுமார் 40 கிலோ மீட்டர் சாலை வழி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இரயில் பயணம் என்றால் இரண்டே இரண்டு இரயில்கள் (இரயில் எண் 12038 மற்றும் எண் 14089) மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது!

 

விமானப் பயணம் என்றால் தில்லி விமான நிலையத்திலிருந்து உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஒரே விமான நிலையமான Jolly Grant விமான நிலையம் வரை வந்து அங்கிருந்து சாலை வழி சுமார் 150 கிலோ மீட்டர் சாலைப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். விமான நிலையத்திற்கு Jolly Grant என்கிற பெயர் வித்தியாசமான பெயர் தானே. ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கூர்க்காக்களை வென்று இப்பகுதியை ஆள ஆரம்பித்த சமயம் பல இடங்களை, உள்ளூர் மக்களிடமிருந்து பெற்றார்கள் - அப்படி பெற்றவை Grant என்ற பெயர் உடன் இருக்கின்றன - Jeoli (Jolly) Grant, Arcadia Grant, Markham Grant, karbari grant என இப்போதும் சில இடங்கள் உண்டு. அந்த இடங்களில் பெரும்பாலும் தேநீர் தோட்டங்களாக, farm house போன்றவை அமைக்கப்பட்டன. அப்படி இருந்த Jolly Grant பகுதியில் அமைக்கப்பட்ட விமான நிலையத்திற்கு அதே பெயரை வைத்து விட்டார்கள். Dehradun Airport என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர் இந்த விமான நிலையத்திற்கு அடல் பீஹாரி வாஜ்பாயீ அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்னமும் இந்த விமான நிலையம் Jolly Grant என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

 

பனிமூட்டத்தில் எங்கள் பயணம்:



பனிமூட்டமும் சூரியனும்…
பயணத்தில் நடுவே நின்றபோது எடுத்த படம்…



அதிகாலை நேரத்திலேயே தில்லி நகருக்குள் மாசு படர்ந்த சாலைகள் என்றால் தில்லியைத் தாண்டிய பிறகு எங்கும் பனிமூட்டம் தான். நவம்பர் மாதத்தில் முன்பெல்லாம் இன்னும் அதிக அளவில் பனிமூட்டம் இருக்கும் என்றாலும் தற்போது அந்த அளவு மோசமில்லை. ஆனாலும் பனிமூட்டம் இருந்தது.  தொடர்ந்த எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன, வழியில் எங்கே சாப்பிட்டோம், அந்த இடத்தில் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

 

18 கருத்துகள்:

  1. // ஒன்றிரண்டு நாட்களேனும் இங்கே தங்கிவருவது //

    ஆம்.  நம் மாதிரி டவுன் வாசிகளுக்கு அவ்வளவு நாட்கள்தான் அங்கே தாக்குப்பிடிக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய இடங்களில் சில நாட்கள் மட்டுமே தங்க முடியும் - வேறு வழியில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவாரஸ்ய பயணம்.  சுவாரஸ்ய விவரங்கள்.  அங்கெல்லாம் நடுவில் டோல் தொந்தரவு கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோல் - இங்கேயும் உண்டு. அது இல்லாத இடம் மிகவும் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. “பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை” என்று நான் சொன்னால் உங்களுக்கு அது அதிர்ச்சியான பதிலாக இருக்க முடியும்.//

    No No NO! ஜி!!! இப்படியான இடங்களில் படத்தில் இருக்கும் வீடு போல ஒரு இடத்தில் தங்கியிருந்துவிட்டு வந்தால் மனம் அப்படியே elated நிலையில் இருக்கும். அனுபவம் உண்டு. இப்போது அப்படியானவை கிடைக்கும் சூழல் இல்லையே என்ற ஏக்கம்.

    அருமையான இடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. பயண விவரங்களை குறித்துக் கொண்டுவிட்டேன், வெங்கட்ஜி. உத்திரப்பிரதேசம், உத்ரகான்ட் இரண்டும் சில சமயங்களில் குழப்பமாகிவிடும்!

    விமான நிலையப் பெயர்க்காரணம் மற்ற இடங்களின் பெயர்க்காரண தகவல்கள் அறிய முடிகிறது. வித்தியாசமான பெயர்தான்.

    தில்லியில் உள்ள கட்டுப்பாடு வரவேற்கத் தக்கது.

    அடுத்து உங்கள் பயண அனுபவங்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்கிறோம்.

    இன்றைய வாசகம் மிக அருமை. Attitude is everything!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரிந்ததே உத்திராகண்ட்.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான தகவல்கள் ஜி.
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றி கில்லர் ஜி.

      நீக்கு


  6. முதல் படமும் அழகு, மேகங்களால் மறைக்கப்பட்ட மலைமுகடுகளுக்கு இடையே தெரியும் சூரியன் படமும் அழகு.
    பயணம் விவரத்துடன் ஆரம்பம் ஆகி விட்டது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  7. Commercial வாகனங்களுக்கு 6-6 இப்போதும் தொடர்கிறதா கட்டுப்பாடு? அல்லது முடிந்துவிட்டதா? தில்லியின் மாசு பிரச்சனைக்கு ஏதேனும் மாற்று யோசிக்கத்தான் வேண்டும்..

    jolly grant போல் பல grants இருக்கின்றன என்பதுதெரிகிறது.

    குறிப்புகள் மிக அருமை, வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாகனங்களுக்கான கட்டுப்பாடு இப்போது இல்லை. தில்லியின் மாசுப் பிரச்சனை - அரசியலாகிவிட்ட பிரச்சனை. அதனால் இப்போதைக்கு தீர்வு கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. 'இயற்கையான சூழலில் இப்படி ஒரு வீடு அமைந்தால்...' மனதுக்கு இனிமை. அருமையான இடம் . படமும் அழகு.

    திருமணமான தொடக்கத்தில் கணவர் வேலை செய்த இடமும் மலைகள் சிறிய நீர்வீழ்ச்சிகள் ஆறு சூழ்ந்த சற்று குளிர்கால நிலை உள்ளஇடம்.மாலையானதும் வீட்டினுள் இருக்காமல் வெளியே வந்து நின்று ரசித்திருக்கிறோம். அவ் இடத்தில் ஆறுமாதம் இருக்க முடிந்தது அதன் பின் வேறு ஊர்களுக்கு மாற்றம் என்பது இப்பொழுது நினைத்தால் கவலைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. பதிவு உங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியிருக்கிறது என்பது அறிந்து மனதில் உவகை.

      நீக்கு
  9. டெஹ்ராடூன் ஏர்ப்போர்ட்லே போய் இறங்கினதும் உண்டு. அங்கிருந்து ரிஷிகேஷ் நாங்க. இன்னும் நீங்க போன இடங்களுக்கெல்லாம் போகலை. இப்போ உங்க வண்டியில் தொத்திக்கொண்டு வர்றதுதான்

    துளசி கோபால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டேராடூன் ஏர்போர்ட் - சிறியதாக இருந்தாலும் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ல பல இடங்களுக்கு இங்கேயிருந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. வண்டியில் தொத்திக்கொண்டு வருவதற்கு நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....