வியாழன், 12 செப்டம்பர், 2024

லட்டு கோபால் - ஜன்மாஷ்டமி - நடை நல்லது - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இரண்டு நாட்களுக்கு முன்னர் முக நூலில் நடை நல்லது என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வருவது குறித்தும் அந்த இற்றைகளின் தொகுப்பாக முதல் பகுதியை வெளியிட்டதும் நினைவில் இருக்கலாம்.  அந்த வரிசையில் இதோ இன்றைக்கு இரண்டாம் பகுதி! முகநூலில் எனது பக்கத்தில் மட்டுமல்லாது, நான் பல காலமாக சைலண்ட் ரீடராக இருந்த மத்யமர் குழுவிலும் இந்தப் பதிவுகளை வெளியிடுகிறேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் இங்கேயும் வெளியிடுகிறேன். இந்த பதிவுகள் உங்களுக்கும் பிடித்திருந்தால் தொடர்கிறேன். 


லட்டு கோபால் - 25 ஆகஸ்ட் 2024:









நாளை கோகுலாஷ்டமி….. வீட்டின் அருகே அமைந்துள்ள Bபிர்லா மந்திர் அழகுற அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இன்றைக்கு மாலை ஜுலூஸ் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் வீதி ஊர்வலம். பிள்ளையார், ஹனுமன், ராதா கிருஷ்ணர், காளி, சிவன் பார்வதி ஆகியோரின் உருவச் சிலைகள் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டிகளில் வீதி ஊர்வலம் இன்றைக்கு இருந்தது. இங்கே எல்லாவற்றுக்கும் Bபேண்ட் வாத்தியம் தான். ஒரே வித ராகம் தான்…. 


ஒரு சாரட் வண்டியில் சிவன் பார்வதி வேடமிட்டு இருவர் நின்று கொண்டு வந்தார்கள்….. இன்றைக்கு அதிக அளவில் உமஸ் (புழுக்கம் என்ற தமிழ் வார்த்தைக்கு ஈடான ஹிந்தி வார்த்தை). இந்த புழக்கத்தில் இப்படி வேடமிட்டு வருவது மிகவும் கடினமான விஷயம். அதில் ஃபோகஸ் விளக்குகள் வேறு….. ஆனாலும் புன்னகையோடு கையசைத்து வந்தனர். லட்டு கோபால் என்று பாசத்துடன் அழைக்கப்படும் கிருஷ்ணர் சிலை இல்லை. அவன் வருகையைக் கொண்டாடும் வகையில் இன்னும் நிறைய கொண்டாட்டங்கள் நாளைக்கும் உண்டு. 


நம் ஊர் போல இங்கே சீடை, முறுக்கு எல்லாம் எதிர்பார்க்க முடியாது! லட்டு கோபால் வருகைக்கும் லட்டு தான் :) இன்றைக்கு மாலை மேலே சொன்ன பிர்லா மந்திர் எனும் லக்ஷ்மி நாராயணர் கோவில் வழி நடந்து வந்த போது எடுத்த படங்கள் மற்றும் காணொளிகள் மேலே…..


எல்லோர் வீட்டிலும் லட்டு கோபால் - 25 ஆகஸ்ட் 2024:





இன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் மாலை நேரமும் கொஞ்சம் நடை…… எங்கள் பகுதியே கோலாகலமாக இருக்கிறது. சாலையில் பாதசாரிகள் மட்டுமே நடக்கும் வண்ணம் தடுப்புகள் அமைந்திருப்பதால் Bபிர்லா மந்திர் நோக்கிச் செல்லும் மக்கள் வெள்ளம் சாலைகளில்….. இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி என்பதால் உங்கள் வீடுகளுக்கும் கிருஷ்ணன் அவனது பிஞ்சுப் பாதங்கள் நோக வந்து போயிருப்பான். ஒரு வீடா, ரெண்டு வீடா அனைத்து பக்தர்களின் வீடுகளுக்கும் நடந்து நடந்து பாதங்கள் வலிக்கும்….. கொஞ்சம் பிடித்து விடுவோம் மானசீகமாக…… 


சாலையில் நடக்கும்போது எதிரே வரும் குடும்பத்தினர் கைகளில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்தில் கிருஷ்ணருக்கு ஆன உடை, அலங்காரம், கிரீடம், அதில் ஒரு மயில்பீலி என அட்டகாச அலங்காரம். வீதியெங்கும் கிருஷ்ணர்களின் உலா நடந்து கொண்டிருக்கிறது. அட எங்கள் வீட்டில் ஆண் குழந்தை இல்லையே என்று கவலைப்படாத பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை ராதை வேடமிட்டு அழைத்து வந்தனர். கிருஷ்ணர்களும் ராதைகளும் என வீதியெங்கும் மஞ்சள் பச்சை/சிவப்பு வண்ணம் மின்னுகிறது. 


எங்கும் மகிழ்ச்சி ஒலி…… இளம் பெண்களும் வாலிபர்களும் அவர்கள் பங்குக்கு சந்தோஷமாக இருக்க வண்டிகள் வராத சாலைகளில் விதம் விதமாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுப்பதும் ரீல்ஸ் எடுப்பதும் என அதகளப்படுத்துகிறார்கள். மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் மகிழ்ச்சியாக இருந்தால் சரி என அதையும் ரசித்தபடியே ஒரு உலா வந்தாயிற்று. 


குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பீப்பி, புல்லாங்குழல், என பலவற்றை விற்பவர்கள், தின்பண்டங்கள் விற்பவர்கள், என சாலையே பரபரவென்று இருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகம் என்பதால் அவர்களை பாதுகாக்கவும் சட்ட ஒழுங்கை நிலையாக வைக்கவும் பல துறை காவலர்கள் வீதிகளில் காலையிலிருந்தே இயங்குகிறார்கள். இன்றைக்கு எத்தனை மணி வரை இங்கே மக்கள் கூட்டம் இருக்குமோ என்று ஒரு காவலர் கவலையுடன் கேட்டுக் கொண்டு இருந்தார் - இரவு பன்னிரெண்டு மணி வரை இன்றைக்கு இப்படித்தான் கூட்டம் இருக்கும் என்று சொல்ல, அதன் பிறகு தான் வீட்டுக்குச் செல்ல முடியும் என்ற கவலை அவருக்கு. 


இந்த நன்னாளில் லட்டு கோபால் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும் என மனதார வேண்டிக்கொண்டு வீடு திரும்பி விட்டேன். 


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

12 செப்டம்பர் 2024


5 கருத்துகள்:

  1. அங்கு நடந்த கோலாகலங்களை சிறப்பாக சுவாரஸ்யமாக வர்ணித்துள்ளீர்கள்.  எனக்கு பெண் குழந்தை இல்லையே என்கிற சிறு குறை இருந்தது!  கோகுலாஷ்டமியை அந்த ஏரியா மக்கள் திருவிழா போல கொண்டாடுகிறார்கள் போல...   சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. வாசகத்துபடம் அருமை.
    விழா படங்கள் அருமை. ஒளி அலங்காரம் அருமையாக இருக்கிறது.
    காணொளிகள் நன்றாக இருக்கிறது.
    லட்டு கோபால் வருகை அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான photos விளக்கங்கள்.இங்கே பிள்ளையார் போல அங்கே லட்டு கோபால் பிரபலம்.
    விஜி

    பதிலளிநீக்கு
  4. லட்டு கோபால் வர்ணனையும் நீங்க பகிர்ந்த காட்சிகளையும் ரசித்தேன் படங்கள் காணொளிகள் மூலம். திருவிழா போலவே கொண்டாடுகிறார்கள்.

    இங்கு இருக்கும் வட இந்தியர்களும் இதே லட்டுகோபால் தான்!!!! இப்படி குழந்தைகளை அலங்காரம் செய்து கோயில்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஊர்வலம் எதுவும் எங்கள் பகுதியில் இல்லை.

    வாசகமும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகள் அலங்காரமிட்டு கிருஷ்ணர் ராதை களாக கோகிலாஷ்டமி நாளில் வீதியில் வலம் வருவது பார்க்க அழகாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....