வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆசிரியர் தின வாழ்த்துகள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட எத்தனை எத்தனை ஆலயங்கள் பதிவினையும் இன்றைக்கு காலை வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துகள் பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  



******


உங்கிட்ட இருந்து வலியை நான் வாங்கிக்க முடியுமா சொல்லு! அவங்கவங்களுக்கு வருகிற அவஸ்தையை அவங்கவங்க அனுபவிச்சு தான் ஆகணும்! அது பகவான் நமக்கு வைக்கிற சோதனைன்னு எடுத்துக்கணும்!


இப்படியெல்லாம் நாம் நிறைய கேட்டிருப்போம்! நமக்கு வருகின்ற சோதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்ற போது இறுதியில் இறைவனிடம் சரண் புகுவோம்! ஆனால் தன் குருவுக்கு வந்திருக்கும் நோயை தான் வாங்கிக் கொள்ள நினைக்கும் சீடர் ஒருவர்! யார் இவர்?


கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள்! இவர் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்! இன்றைய ஆசிரியர் தினத்தில் இவரைப் பற்றி நாம் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும்! இவருடைய குருபக்தியை பற்றி வாசித்தும் செவிவழி கேட்டும் மெய்சிலிர்த்து போனேன்!


தன் குருவின் மீது கொண்ட பக்தியின் காரணமாக அவருக்கு வந்திருக்கும் வாத நோயை தன்னிடம் தந்து விடுமாறு கேட்கிறார்! அவர் படும் அவஸ்தையை பார்க்க முடியாமல் வருந்துகிறார்! இறுதியாக தன் யோக நிலையின் மூலம் அதை பெற்றுக் கொண்டும் விடுகிறார்! பெற்றுக் கொண்ட வாத நோயுடன் மிகவும் அவஸ்தையும் படுகிறார்!


குருவாயூர் ஸ்தலத்துக்குச் சென்று ஒவ்வொரு நாளும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் மீது கொண்ட பக்தியின் காரணமாக 1036 பாடல்களை இயற்றி 100வது நாள் வாத நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறியப்படுகிறது! நாராயண் பட்டத்திரி இயற்றிய பாடல்களே ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ என்று பூஜிக்கப்பட்டு எல்லோராலும் பாராயணம் செய்யப்படுகிறது!


இவரைப் போன்ற சீடராக நாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை! சிறுவயது முதலாக ஒவ்வொரு நிலையிலும் நம்மை நெறிபடுத்தி வாழ்வில் உயர உதவிய ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்து சொல்லி வணங்குவோம்!


களிமண்ணை பயன்படுத்தும் பொருளாக உருவாக்குவதைப் போல ஒவ்வொரு மாணவனையும் சமுதாயத்தில் சிறந்த மனிதனாக உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! அப்படி என்னை செதுக்கிய ஆசிரியப் பெருமக்களுக்கு வந்தனம் கூறி வணங்குகிறேன். 


ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

5 செப்டம்பர் 2024


4 கருத்துகள்:

  1. மிக அருமை.
    விஜி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நாராயண பட்டத்திரி பற்றிய கதையை படித்திருந்தும், இப்போதும் தங்கள் பதிவில் படித்து தெரிந்து கொண்டேன்.

    /களிமண்ணை பயன்படுத்தும் பொருளாக உருவாக்குவதைப் போல ஒவ்வொரு மாணவனையும் சமுதாயத்தில் சிறந்த மனிதனாக உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! /

    நல்லதொரு கருத்து. அழகாக சொல்லியுள்ளீர்கள். தங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர் தினத்திற்கான பொருத்தமான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  4. ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ என்று பூஜிக்கப்பட்டு எல்லோராலும் பாராயணம் செய்யப்படுகிறது!//

    ஆமாம்.

    நாராயண பட்டத்திரி வரலாறு படித்து இருக்கிறேன், அதை சினிமா படமாக பார்த்து இருக்கிறேன்.

    குருவின் மேன்மையை சொல்லும் சீடனின் கதை பகிர்வு அருமை.

    அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....