திங்கள், 23 செப்டம்பர், 2024

கதம்பம் - கடைத்தெரு மனிதர்கள் - பகவான் ஸ்ரீகிருஷ்ணர் - முருங்கை பிசின் - அபிநயம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடைத்தெரு மனிதர்கள் - 4 செப்டம்பர் 2024:


என்னை பாடாய் படுத்தி எடுக்காதீங்க! வெச்சு தொலைங்க!!


ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் அலைபேசியில் யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்! வீட்டுக்கு வீடு வாசப்படி! பிரச்சினைகள் இல்லாத வீடு தான் ஏது! குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவர் அவருடைய இரத்தக் கொதிப்பை அதிகப்படுத்துகிறார்! அந்த பெண்மணி அமர்ந்திருந்த ஆட்டோவைக் கடந்து சென்ற போது அவர் பதில் தந்த பதிலும் அவர் சொன்ன விதமும் என்னை புன்னகைக்க தான் வைத்தது!!


பகவான் ஸ்ரீகிருஷ்ணர் - 4 செப்டம்பர் 2024:


கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடையின் வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் சன்னியாசி! பொதுவாக அவர் வாய் திறந்து பேசி நான் பார்த்ததில்லை! மெளனமாக கண்மூடி அமர்ந்திருப்பார்! சில நேரங்களில் தலைகுனிந்து இவரின் தலை எங்கிருக்கிறது என்று தெரியாவண்ணம் குனிந்தவாறு  இருப்பார்! 


இந்த உலகத்துக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொன்னார்? சொல்லு!


அப்பனே! முருகா! உங்கிட்ட சமாதானமா போலாமான்னு கேட்டாரா? நீ என்ன சொன்ன??


நேற்று நாங்கள் இவரைக் கடந்து சென்ற  போது உரத்த குரலில் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்!


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை மனக் கலக்கங்களும்! சிக்கல்களும்! இறைவன் இவரிடம் என்ன விளையாட்டை நடத்துகிறாரோ??


முருங்கை பிசின் - 4 செப்டம்பர் 2024:


நாட்டுமருந்து கடையில் செம்பருத்தி டீ போட்டு சுவைப்பதற்காக பொடி ஏதேனும் இருக்கிறதா என்று கடைக்கார அக்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்! பூவே இருக்குப்பா! கால் கிலோ 50 ரூ! டீ போட்டு குடிக்கலாம்! நல்லது! என்றார். சரிக்கா! குடுங்க என்று சொல்லி நின்று கொண்டிருந்தேன்!


அக்கா! முருங்க பிசின் இருக்கா?? என்று ஒரு பெண்மணி கேட்டுக் கொண்டிருந்தார்! 50கிராம் இருக்குப்பா! இது போதுமா?? என்று அக்கா அவரிடம் கேட்க…. எனக்கு கொஞ்சம் நிறைய தான் வேணும்! நாளைக்கு வேணா வரட்டுமா?? என்றார்.


இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் உடனே மண்டைக்குள் குடைச்சல்..:) சரி! நம்ம அக்கா தானே! ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க என்று சந்தேகத்தை கேட்டே விட்டேன்…:) முருங்க பிசினா?? அதை வெச்சு என்ன பண்ணுவாங்கக்கா??


ஹெல்த்துக்கு நல்லதுப்பா! பாதாம்பிசின் மாதிரி தான்! அதை நுணுக்கி மிக்சியில போட்டு பொடி பண்ணி வெச்சிக்கலாம்! இதை தொடர்ந்து சாப்பிட்டுட்டு வந்தா குழந்தை பிறக்கிறத தள்ளிப் போடலாம்!! என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..!! அதை வாங்க வந்திருந்த பெண்மணிக்கும் வயது 30க்குள் இருக்கலாம்!! 


அபிநயம் - 4 செப்டம்பர் 2024:


மருந்துக்கடைக்கு சென்று வேண்டியதை சொல்லி விட்டு காத்திருந்த போது கண்ணில் பட்ட பதாகை! “கருச்சிதைவுக்கு இங்கு கண்டிப்பாக மருந்து தர முடியாது! தேவைப்பட்டால் நல்ல மருத்துவரை அணுகவும்!” இதைப் பார்த்ததும் ஏனோ முருங்கை பிசின் என் நினைவுக்கு வந்தது! 


மருந்துக்கடை ஊழியர் ஒருவர் வயதானவர் ஒருவரிடம் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார்! முதியவருக்கு சுத்தமாக காது கேட்கவில்லை! அவரிடம் புரிய வைத்து பணத்தை பெற்றுக் கொண்டும் இன்னும் ஐம்பது ரூபாய் தரணும் என்பதை மீண்டும் மீண்டும் புரிய வைக்க முற்பட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்!


இருவரையுமே பார்க்க பாவமாக இருந்தது! அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களில் தான் எத்தனை வேறுபாடுகள், உணர்ச்சிகள்! சட்டென்று ஒரு சாலையைக் கடந்து செல்வதைப் போல சென்று விடுகிறோம்! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

23 செப்டம்பர் 2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....