புதன், 25 செப்டம்பர், 2024

மறக்க முடியாத பாடகர் - எஸ்.பி.பி - ஒரு அஞ்சலி - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




பாடும் நிலா பாலு! மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்.  எத்தனை எத்தனை பாடல்களால் நம் மனதை மயக்கியவர்.  அவரது குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட பாலு இன்று இல்லை என்பது வேதனையான உண்மை.  பாடும் நிலா பாலு அவர்களுக்கு அவருடைய நினைவு நாளான இன்று, அஞ்சலி செலுத்தும் விதமாக திருமதி விஜி வெங்கடேஷ் ஒரு பதிவு வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


மறக்க முடியாத பாடகர் - எஸ்.பி.பி


மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரன் 

கிரங்கும் மனங்களின் கொள்ளைக்காரன்  

குரல் போதையூட்டி நமை ஆளவந்தான்

இல்லாதது இவனிடம் ஆணவந்தான்!


மலர் வந்து எனைத் தீண்டியதில்லை

மயிலிறகும் மெல்ல வருடியதில்லை

நிலா வந்து சோறு ஊட்டியதில்லை 

தென்றல் தாலாட்டுப் பாடியதில்லை  


குறையொன்றும் எனக்கில்லை நண்பனே , உன் 

குரலை விட இவை தருமா இன்பமே 

வெண்ணையும் சந்தனமும் பன்னீரும்     

உன் குரலுக்கு முன் வெறும் தண்ணீரே        


பாலுக்குள் நெய்; பாலு(வு)க்குள் பாவம் (bhaavam) 

நவரசம் உன் குரல்வசம், கேட்போர் நிலையோ  பரவசம்     

குரலுக்குள் வசியம் செய்து வைத்தாய் 

செவியெனும் புலனுக்கு அவசியம் வைத்தாய் 


சின்னச் சிரிப்பு, சிருங்கார சிணுங்கல் 

சோகப் பெருமூச்சு, சந்தோஷக்  கூப்பாடு  

இவையாவும் பாட்டிற்குள் பதுக்கி வைத்தாய்  

சிற்பி போல் இசையை நீ செதுக்கி வைத்தாய் 


குரலில் குழலை வைத்தாய் அதனால் கண்ணனானாய் 

பெயரில் இளவலை வைத்தாய் உருவில் அண்ணனானாய்

குழந்தை மனம் கொண்ட பாலசுப்ரமணியனே 

கொழு கொழு அழகனே  குறைவில்லா குணக்குன்றே 


எப்படி இருந்தாலும் எங்கள் செல்லம் நீ 

விட்டுவிட்டு இப்படி செல்லலாமா நீ   

கடைசியாய் ஒரு முறை பார்க்கவென்று  

கடலலையாய் கூட்டம் கூடியது நிலாவே வாவெனக் கதறியது 


நிலை கொள்ளாமல் அரற்றியது 

உயிர் அபாயம் இருந்தாலும் 

உனைப் பார்க்கும் ஆவல் முந்தியது 

தன்னலம் அங்கே பிந்தியது! 


பலர் வாழ தர்மங்கள் அளவில்லாமல் செய்தாய் நீ  

அவர் வாழ்வில் தீபத்தை அன்பாக ஏற்றி வைத்தாய்

உன் போல் பலருக்கும் குரல் வாய்க்கலாம் 

பொன்போல இதுபோல் மனம் வாய்க்குமா    


இத்தனை குணமிருந்தும் இறுதியில் ஏன் துன்புற்றாய் 

கர்மா என சொல்லிவிட்டு கடந்து போக மனமில்லை 

பேதை மனம் துடிக்கிறது; தூங்காமல் தவிக்கிறது!

இளையநிலாவே இளமையெனும் பூங்காற்றே சங்கீத மேகமே சாகசக் குரலோனே 


வருவேன் என்று சொன்னாயே  

வார்த்தை ஏன் தவறிவிட்டாய்?   

பாசமென்னும் தீபமொன்றை நெஞ்சினிலே ஏற்றிவிட்டு 

பிரிவென்னும் காற்றிடையே பேசாமல் நிற்க வைத்து


பரிவென்ற சொல் மறந்து பறந்து சென்றனையே    

சிரிப்பென்ற நிலைதனை கொன்று சென்றனையே  

இவ்வுலகு இருக்கும்வரை உன்னிசை இருக்கும். 

காற்றிருக்கும் வரை அது தவழ்ந்து வரும்; 


மூச்சிருக்கும் வரை அது எம் செவி நிறைக்கும் 

நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்! 

கோடி கோடி ரசிகர்களின் குரலாக 

ஒரு கண்ணீர் அஞ்சலி உனக்காக!

😓🙏🏻🙏🏻🙏🏻


விஜி வெங்கடேஷ்   


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

25 செப்டம்பர் 2024


10 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பாடும் நிலாவை மறக்க இயலாது. பாடும் நிலா அவர்களின் நினைவு நாளில் அவரைப்பற்றிய நல்லதுகளை சொல்லி அவருக்கு கவிதை வடிவில் அஞ்சலி செய்த சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களை மனதார பாராட்டுகிறேன். . சகோதரியின் கவித்துவம் நிறைந்த வார்த்தைகள் மிக நன்றாக உள்ளது. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. SPB யின் பரம ரசிகன் நான் என்பது எங்கள் பிளாக் வெள்ளி வீடியோ பார்க்கும் அனைவரும் தெரிந்திருப்பார்கள்!  அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்/

    ஆயினும்,

    அவர் மறைந்த நாட்களில் அவரைப் பாட எவரும் அதிகம் அழைக்கவில்லை.  அவருடைய பழைய பாடல்களைதான் நாம் ரசித்துக் கொண்டிருந்தோம்.  இது மாதிரி   பாடகர்களும் இசை அமைப்பாளர்களும் இறைவன் மக்களுக்கு அளித்த கொடை.

    அவரை நினைத்து எழுதி இருக்கும் கவிதை வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பதிவின் தலைப்பு பார்த்ததுமே நீங்க தான் டக்குனு நினைவுக்கு வந்தீங்க ஸ்ரீராம், கூடவே எங்க வீட்டுத் தம்பியும்.

      கீதா

      நீக்கு
  3. எஸ் பி பி ஐப்பற்றி நினைத்தால் பொது வெளியில் அவர் கடைபிடித்த நாகரீகம், எல்லோரையும் பாராட்டுவது போன்ற குணங்கள் நினைவுக்கு வரும். அதைவிட அவர் சொன்னது, நான் சிகரெட் ஏகப்பட்டது பிடிப்பேன், என் குரல் அதனால் பாதிக்கப்படவில்லை, எனக்குக் கிடைத்த வரம் எல்லோருக்கும் கிடைக்காது என்றார். அதனால் பாதிக்கப்பட்ட நுரையீரலினால், கொரானாவின்போது மறைந்தது சோகம்தான்.

    பதிலளிநீக்கு
  4. உண்மை பொதிந்த வாசகம்👍
    அழகான கவிதை
    (பாலு சார் போலவே)
    படிக்க படிக்க இனிமையாக இருந்தது.
    ஒவ்வொரு வரியிலும் பாலு சார் அவர்களின் புன்னகை முகம் பிரதிபலித்தது 👍🙏

    பதிலளிநீக்கு
  5. எஸ்பிபி அவர்கள் பாடும் நிலா என்பதையும் தாண்டி பின்னணிப்பாடல் துறையில் இருப்பவர்களில் சிறியவர்களையும் தன் வயதை ஒத்தவர்களையும் கூட எந்த வித ஈகோவும் இல்லாமல் மனதாரப் பாராட்டி ஊக்கப்படுத்துபவர். கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டதில்லை ஆனால் இத்தனை நுணுக்கங்களுடன் இசை அறிவுடன் பாடும் திறன். ஒருவேளை புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் நுரையீரல் பாதித்திருக்காமல் இன்னும் பாடிக் கொண்டிருந்திருப்பார்.

    உங்கள் வரிகள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இனிய குரலுக்கு சொந்தக்காரர்

    பதிலளிநீக்கு
  7. நன்றிகள் அனைவருக்கும்.
    விஜி

    பதிலளிநீக்கு
  8. வாசகம் அருமை.

    எஸ்பிபி பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்.
    அவரை பற்றி விஜி அவர்கள் எழுதிய கவிதை அருமை.
    அவர் குரலில் நிறைய குழந்தைகள் பாடினார்கள்.

    Saregamapa Senior Season 4 | Celebrating SPB Round

    ஜி தமிழ் நிகழ்ச்சியில் அவர் மகனும் வந்து பாடினார். என்றும் மறக்க முடியாத குரல் வளம்.
    அவரைப்பற்றி அவருடன் இசையில் இணைந்தவர்கள் பேசினார்கள்.

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் விஜியின் தமிழ் அருமை எல்லோரும் எல்லாம் நினைத்தாலும் சிலர் தான் எழுத்தில் வெளிபடுத்த முடியும் இதில் விஜி யின் கருத்து சிறப்பு மேன்மேலும்சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் ராஜலஷ்மி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....