திங்கள், 30 செப்டம்பர், 2024

கதம்பம் - Complaint - ஆச தோச அப்பளம் வட - இன்றைய தகவல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி 11 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


Complaint - 9 செப்டம்பர் 2024:


வழக்கமாக நாங்கள் ஸ்நாக்ஸ் வாங்கும் கடை அது! திருச்சியின் வேறு சில இடங்களில் அவர்களின் கிளைகள் இருந்தாலும் திருவரங்கத்தில் துவங்கியது முதல் நாங்கள் அங்கு தான் வாங்குகிறோம்! மாதம் ஒருமுறை இப்படி கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமாயிற்று!!


ஸ்நாக்ஸ்னா அதாங்க மிக்சர், காராசேவ், தட்டை இப்படி மாலைநேரத்தில் டீயுடன் கரக் மொரக் என்று சாப்பிடுவோமே! இவை எல்லாமே வீட்டில் செய்யக்கூடியது தான்! அம்மா பண்டிகை நாளையொட்டி நிறைய நிறைய பட்சணங்களைப் பண்ணுவாள்! அவை பண்டிகையைத் தொடர்ந்து சில நாட்களுக்கும் வந்துவிடும்! 


இப்போது தான் நாம் எல்லாவற்றையுமே சுருக்கிக் கொண்டு விட்டோமே! பண்டிகை நாட்களைத் தவிர மற்றைய நாட்களில் இப்படி கடைகளில் வாங்கிக் கொள்வது ஒருவிதத்தில் வசதியாகவும் இருக்கிறது! சரி!சரி! நாம இப்போ கதைக்கு வருவோம்!


அந்தக் கடையில் வாங்குவது முதலாக ஒரு விஷயம் என் மனதில் குடைந்து கொண்டே இருந்தது! அதை அவர்களிடம் சொல்லலாமா! வேண்டாமா! பொருட்கள் தரமாக தான் உள்ளது! விற்பனையும் நன்றாக இருக்கிறது! அதனால் பழைய சரக்குக்கு இடமில்லை! பேக்கிங்கும் நன்றாக உள்ளது! ஆனால்!!!!?? ஆனால்!!?


இம்முறை சென்ற போது சட்டென்று மனதிலிருப்பதை அந்தக் கடையில் வேலை செய்யும் ஊழியரிடமே சொல்லி விட்டேன்! அவரும் அதை கேட்டுவிட்டு 'நாங்க சொல்றதை விட நீங்களே சொன்னா தான் சரியாக இருக்கும்' என்று சொல்லி..... ஒரு நோட்டைத் தந்து என்னுடைய தொலைபேசி எண்ணுடன் என்னுடைய கருத்தை எழுதித் தரும்படி சொல்லவும் எழுதித் தந்து விட்டு வந்தேன்!


அடுத்த நாள் மதியம் கடை முதலாளியிடமிருந்து ஒரு கால் வந்தது! முதலில் ஒரு பெண்மணி தான் பேசினார்! “சார்! உங்ககிட்ட என்ன Complaintனு கேட்கச் சொன்னார் மேம்!” என்றார்! அது Complaint இல்லம்மா! Feedback! என்றேன்!


அதாவது ஸ்ரீரங்கத்தில உங்க கடை ஆரம்பிச்சதுல இருந்து தொடர்ந்து நான் வாங்கிட்டு தான் இருக்கேன்! நல்ல quality, packing, fast moving எல்லாம் இருக்கு! ஆனா டேஸ்ட் ஒரே மாதிரி இருக்க வேண்டாமா சொல்லுங்க! ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாமா! 


உங்க கடைக்குன்னு ஒரு டேஸ்ட்! எத்தனை வருஷம் ஆனாலும் அந்த டேஸ்ட் மாறக்கூடாது! அப்படி இருந்தா தான் இன்னும் உங்கள develop பண்ணிக்க சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்! Food industryஏ ரொம்ப மோசமா தான் போயிட்டிருக்கு! தினமும் நிறைய நிறைய நியூஸ் கேள்விப்படறோம் இல்லையா! அதனால தான் எழுதித் தந்தேன்! என்றேன்.


நான் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்ட பின்னர், “தேங்க்யூ மேம்! நீங்க சொன்ன விஷயங்களை எல்லாம் சார்கிட்ட சொல்றேன்! நாங்க பார்த்து செய்யறோம்!” என்று சொன்னார் அந்தப் பெண்மணி! 


அன்றாடம் நம்மைச் சுற்றி எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன! இந்த சமுதாயத்தில் ஒருவரால் மட்டுமே எதையும் மாற்ற இயலாது தான்! ஆனால் மனதில் பட்டதை எடுத்துச் சொல்வதொன்றும் தவறில்லையே! 


******


ஆச தோச அப்பளம் வட…. - 9 செப்டம்பர் 2024:



சற்று குறுகலான தெரு அது! அதன் வழியே தான் தெப்பக்குளத்தை சுற்றி அமைத்திருக்கும் வாரச்சந்தைக்கு சென்று வருவோம். அந்தத் தெருவின் இருபுறமும் நெருக்கமான வீடுகள்! விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மூலைக்கு மூலை விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன!


விநாயகரின் முன்னர் சின்னஞ்சிறு சிறுவர்கள் சிலர் வெல்க்ரோ வேட்டி கட்டிக் கொண்டு மேலே தந்திருக்கும் (அடிச்சு குதிச்ச) பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்..🙂 இப்படியான குத்துபாட்டுக்கு என் அம்மா சொல்லும் பெயர்..🙂 அப்பவே அம்மா அப்படி சொல்வார் என்றால் இன்றைய ட்ரெண்டிங் பாடல்களைக் கேட்டால்…:)) ஒருவேளை நான் அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் துடைப்பம் பிய்ந்து போயிருக்கும்…:)


******


இன்றைய தகவல் - 30 செப்டம்பர் 2024:


இன்றைய நாள், இந்த வலைப்பூவிற்கு கொஞ்சம் ஸ்பெஷல் நாள்! என்ன என்று தானே கேட்கிறீர்கள்! இதே நாளில் 15 வருடங்களுக்கு முன்னர் - அதாவது 2009-ஆம் ஆண்டு - இந்த வலைப்பூ தொடங்கிய நாள்! இத்தனை ஆண்டுகளில் மூவாயிரத்து நானூறு பதிவுகளுக்கு மேல் வெளியிட்டு இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி - அதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் கூட மகிழ்ச்சி! உங்கள் ஆதரவில் இன்னும் பதிவுகள் தொடர வேண்டும் - வெங்கட், புது தில்லி


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

30 செப்டம்பர் 2024


7 கருத்துகள்:

  1. நல்ல கடைக்கு, வாடிக்கையாளரின் கருத்து ரொம்ப முக்கியம்.

    ருசி மாறுபடுவது நல்ல தொடர் கடைகளுக்கு (chain of stores) நல்லதல்ல. நீங்கள் அஸ்வின்ஸைச் சொல்றீங்களா? ஶ்ரீகிருஷ்ணா, கடைகள்ல ஒரே மாதிரி ருசி இருக்கும். அவங்க கணிணிப்படுத்தி ஒவ்வொரு பேட்சையும் கண்காணிக்கறாங்க. பலப் பல குக்குகள் செய்தாலும் ஒரே ருசி, 90கள் சரவணபவனைப் போல

    பதிலளிநீக்கு
  2. அப்பளம் என்றதும் தில்லி அப்பளம் என்று சொல்லப்படும் திருவிழாக்களில் கிடைக்கும் மிகப் பெரிய அப்பளம் நினைவுக்கு வந்துவிட்டது. சிறிய வயதில் கிடைக்கவில்லை. பெரியவனானபின், என்ன எண்ணெயோ என்று தோன்றிவிட்டதால் வாங்கிச் சாப்பிடலை. எங்கேயாவது தரமாக்க் கிடைத்தால் வாங்கணும்.

    பதிவுகளின் milestoneக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல நோக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளீர்கள். சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  4. தரமான பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள். மென்மேலும் உயர, வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆதி, நல்ல் விஷயம்தான் நீங்கள் அந்தக் கடைக்குச் சொன்னது. நானும் இப்படிச் சில கடைகளில் சொன்னதுண்டு, தின்பண்டங்கள் என்றில்லை மற்ற பொருள்கள் கடைகளிலும் சில பரிந்துரைகள் சொன்னதுண்டு.

    மென்மேலும் வாழ்த்துகள் இன்னும் உங்களின் பதிவுகள் பெருகிட!

    சில பாடல்கள் கேட்பதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவைதான் ட்ரெண்டிங்க்! என்ன செய்ய?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது.

    தங்களுக்கு பிடித்தமான அந்த ஸ்நாக்ஸ் கடையில், தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இனிஅவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் அந்த தவறை புரிந்து கொண்டு சரி செய்வார்கள். உங்களையும் மனதுக்குள் பாராட்டியபடி இருப்பார்கள். நல்ல விஷயத்தை முன்னின்று செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    இப்போது வருகிற பாட்டடெல்லாமே மனதில் பதியுப்படியான மாதிரி வருவதில்லை. மனதில் அடிக்கிற மாதிரிதான் வருகிறது.

    உங்கள் வலைப்பக்கத்துற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மென் மேலும் பதிவுகளை எழுதி சிறக்க என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....