அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிறுவனத்தின் பொன்விழா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நகர்வலம்
1991 - ஆம் ஆண்டு நிலக்கரி நகரம் நெய்வேலியிலிருந்து தேசத்தின் தலைநகரம் தில்லிக்கு வந்து சேர்ந்த போது வடக்கு மொழியான ஹிந்தியில் ஒரு அக்ஷரம் கூடத் தெரியாது. மொழியும் தெரியாது, ஊரும் தெரியாது, இங்கே உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்களும் தெரியாது. வந்து சேர்ந்த நாட்கள் - ”திக்குத் தெரியாத காட்டில்” என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தமும் உணர்வு பூர்வமாக தெரிந்து கொண்ட நாட்கள் அவை.
அப்போது அறை நண்பராக இருந்தவர் ஒரு வழியைக் காண்பித்தார் - அது இங்கே இருக்கும் பேருந்துகளில் நாள் முழுவதும் ஒரு தினப்படி பாஸ் எடுத்துக் கொண்டு எந்த பேருந்தில் வேண்டுமானாலும் ஏறலாம், அங்கிருந்து அதே பாஸ் மூலம் வேறு பேருந்தில் ஏறி பயணம் செய்யலாம், நாள் முழுவதும் இப்படி தில்லியைச் சுற்றி வரும் வசதி உண்டு, அதில் பயணம் செய்து பல புதிய அனுபவம் பெறலாம் என்பது தான் அந்த வழி. பல வித மனிதர்களைக் காண்பதோடு புதிய இடங்களையும் பார்க்கலாம் என்று சொல்லித் தந்தார்.
அப்படியான அனுபவத்தைப் பெற ஒரு சுப யோக சுப தினமாக, விடுமுறை நாளான ஞாயிறு அன்று வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டது, இரவு வீடு திரும்பும் போது நேரம் இரவு ஒன்பது. மொழி தெரியாமல், ஒரு அசட்டு தைரியத்தில் ஊர் முழுக்க இப்படி பல விடுமுறை நாட்களில் தில்லி நகரைச் சுற்றி வந்திருக்கிறேன். அப்படி சுற்றியதில் தில்லி நகரில் உள்ள பல இடங்களைப் பார்த்ததோடு புதிது புதிதான பல அனுபவங்களைப் பெற முடிந்தது.
அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் பேசியதிலிருந்தும் இப்படிச் சுற்றியதிலிருந்தும் கிடைத்த இன்னுமொரு பலன் இந்த ஊரின் மொழியைக் கற்றுக் கொண்டது. இப்படியான நகர்வலங்கள் நிறைய அனுபவங்களைத் தந்தது. விடுமுறை நாட்களில் வீட்டில் அடைந்து கிடைப்பதற்கு பதிலாக மீண்டும் நகர்வலம் வரலாம் என்று ஒரு யோசனை….. :) நகர்வலங்களில் கிடைக்கும் அனுபவங்களை அவ்வப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நஷ்டத்தில் DTC:
DTC - Delhi Transport Corporation என்ற பெயரில் இயங்கி வரும் தில்லி நகர பேருந்து நிறுவனம் பல வருடங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதற்கான காரணம் என்று பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒன்று குறைவான கட்டணம் - இதைச் சொன்னால் சிலர் என்னிடம் வம்புக்கு வரலாம்! இருந்தாலும் பரவாயில்லை சொல்கிறேன் - இங்கே குறைந்த பட்ச பயணச் சீட்டு ஐந்து ரூபாய், அதிக பட்சம் பதினைந்து ரூபாய் - இந்தக் கட்டணங்கள் சாதாரண பேருந்துகளுக்கு! அதுவே குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து ரூபாய், அதிக பட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். தில்லியின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் இந்த பேருந்துகளில் சிலவற்றின் மொத்த பயணிக்கும் தூரம் நம் மாநிலத்தில் அடுத்த ஊருக்குப் போகும் அளவு தூரம்! உதாரணத்திற்கு 729 எனும் பேருந்து எண் மோரி Gகேட் பேருந்து நிலையத்திலிருந்து காபஷே(டா)ரா பார்டர் என்கிற இடத்திற்கு மொத்த தூரம் சுமார் 28 கிலோ மீட்டர் - கிட்டத்தட்ட 45 நிறுத்தங்கள் இடையே உண்டு. சாதாரண பேருந்தில் இதற்கான கட்டணம் ரூபாய் பதினைந்து மட்டுமே! குளிரூட்டப்பட்ட பேருந்து எனில் 25 ரூபாய்! இதே அளவு தொலைவிற்கு நம் ஊரில் வாங்கும் கட்டணம் எவ்வளவு என்பதை நீங்கள் சொல்லுங்களேன்!
குறைவான கட்டணம் என்றாலும் பலர் பயணச் சீட்டு வாங்குவதில்லை. அவ்வப்போது பயணச் சீட்டு பரிசோதகர் பிடித்தாலும் 200 ரூபாய் தண்டம் கட்டிவிட்டு ஒன்றுமே ஆகாதது போல நடையைக் கட்டுவார்கள். இப்படி என் அலுவலகத்திலும் ஒரு நபர் இருந்தார். இப்படிச் செய்வதற்கு அவர் சொன்ன காரணம், தொடர்ந்து பல முறை பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தாலும் இது வரை ஒன்றிரண்டு முறை மட்டுமே பரிசோதகர்களிடம் மாட்டியிருப்பதாகவும் எப்படியிருந்தாலும் எனக்கு லாபம் தான் என்றும் சொல்வார்.
சென்ற வாரம் இப்படி நகர்வலம் வந்த போது ஒரு பேருந்தின் நடத்துனர் பாஸ் என்று சொன்னவர்களிடம் அதனைக் காண்பிக்கச் சொல்ல, ஒருவரின் பாஸ் 2023 - இல் காலாவதி ஆனது தெரிந்தது. இன்னொருவர் காண்பித்தது மூன்று நாட்கள் முன்னர் காலாவதி ஆனது - அவர் நடத்துனரிடம் சண்டை போடுகிறார் - உங்க அப்பன் வீட்டு காசா போகுது? டிக்கெட் வாங்காம விடேன் என்று…. கூடவே பக்கத்தில் இருந்த ஒருவரின் வாதம் - பொம்பளைங்க எல்லோருக்கும் இலவசம்….. எங்கள்ட்ட மட்டும் காசு கேளு என்று….. பொதுவாக DTC நடத்துநர்கள் அவர்கள் இருக்கையிலிருந்து நகர மாட்டார்கள். டிக்கெட் வாங்க வேண்டுமென்றால் பயணி தான் அவரிடம் செல்ல வேண்டும். அவ்வப்போது பயணச் சீட்டு வாங்கிக்கோங்க என்று குரல் கொடுப்பதோடு சரி! வித்தியாசமாக ஒரு சில நடத்துநர்கள் இப்படி பாஸ் என்று சொல்பவர்களிடம் கேட்டு திட்டு வாங்கிக் கொள்வதுண்டு அல்லது சண்டை போடுவார்கள். பெரும்பாலும் ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே சில பயணிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.
என்னதான் நஷ்டத்தில் இருந்தாலும் புதிதாக கடன் வாங்கி புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குகிறது DTC! இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், பணி ஓய்வு பெறும் பல தொழிலாளிகளுக்கு தர வேண்டிய பல பலன்கள் நிலுவையில்…… சில மாதங்கள் சம்பளம் தரவே கஷ்டப்படுகிறார்கள்!
DTC நஷ்டத்தை நானும் ஒரு விதத்தில் அதிகமாக்குகிறேன் - எனது நகர்வலத்தினால்!
தொடர்ந்து வலம் வருவோம்…..
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
20 செப்டம்பர் 2024
சுவாரஸ்யமான ஷேர். ஃபேஸ்புக்கிலும் படித்தேனோ?
பதிலளிநீக்குநானும் 1972இல் ஹிந்தி தெரியாமல் டெல்லியில் பாடு பட்டது நினைவில் வந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் வேலைக்கு எழுத்து பரீட்சை, aptitude test, நேர்முகம், என்று மூன்று நாள் தேர்வு. கரோல் பாகில் wea வில் லாட்ஜ். parliament ஸ்ட்ரீட்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகம், மற்றும் பஹதூர் ஷா ஜாபெர் மார்கில் IBM அலுவலகம் என்று மாறி மாறி பரீட்சை இடங்கள். ஷேர் ஆட்டோ போல் ஷேர் பட் பட். கடைசி சுற்றில் நீக்கப்பட்டேன். ஆனால் பயணப்படி 140*2 கிடைத்தது.
பதிலளிநீக்கு