புதன், 14 ஜனவரி, 2026

பழையன கழிதலும்… - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட விதம் விதமாய் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


பழையன கழிதலும்….:



இன்றைக்கு Bபோகி பண்டிகை….  தென்னிந்தியாவில் Bபோகி கொண்டாடுவதைப் போலவே வட இந்தியாவில் லோடி(ரி) என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவார்கள்.  இன்றைக்கு பெரியம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருக்கும் ஒரு பழக்கம் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அதாவது ஒவ்வொரு தெரு முக்கிலும் பழைய பொருட்கள் அல்லது விறகுகளை குமித்து வைத்து எரியூட்டுவார்கள் என்றும் அதன் பக்கத்தில் எல்லா வீடுகளிலிருந்தும் ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டு வைத்து விடுவார்கள் என்றும் அந்தத் தண்ணீர் சூடானதும் அதை வீட்டுக்கு எடுத்து வந்து அனைவரும் அந்தத் தண்ணீர் கலந்து நீராடுவார்கள் என்றும் அதனால் அவர்களைப் பிடித்திருக்கும் பீடைகள் அனைத்தும் விலகும் என்றும் நம்பிக்கை என்று ஒரு கதையைச் சொன்னார்.  இது புதியதாக இருந்தது எனக்கு.  ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வித நம்பிக்கை.  


வடக்கில் கூட லோடி(ரி) சமயத்தில் தெரு முக்கில் நிறைய சுள்ளிகள், விறகுகள் சேர்த்து குவித்து வைத்து, அதைச் சுற்றி நிறைய சிவப்பு வண்ண கயிறுகள் கட்டி, எரிய விட்டு அதில் பொரித்த மக்காச் சோளம், எள்ளும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் ரேவ்டி, வேர்க்கடலை என அனைத்தையும் அந்த நெருப்பில் போட்டு அதனை வெடிக்க விடுவார்கள்.  அங்கே குழுமியிருக்கும் அனைவரும் அந்த நெருப்பைச் சுற்றி வந்து பாடலுக்குத் தகுந்தவாறு நடனம் ஆடி மகிழ்வார்கள்.  அனைவருக்கும் மக்காச்சோளம், ரேவ்டி, வேர்க்கடலை போன்றவற்றை விநியோகமும் செய்வார்கள்.  பஞ்சாபிகளுக்கு இந்தப் பண்டிகை மிகவும் விசேஷமான ஒன்று.  திருமணம் முடிந்த முதலாம் லோடிக்கு மணப்பெண் வீட்டிலிருந்து சீர் கொண்டு வந்து தருவதும் வாடிக்கை.  ஒரு பஞ்சாபி பாடல் ஒன்று உங்கள் ரசனைக்கு கீழே இணைத்திருக்கிறேன். 


பழையன கழிதலும் என்று பேசும்போதே ஒரு விஷயம்…  நமக்குத் தேவையில்லை என்று தோன்றுவதை எரித்து தான் ஆகவேண்டும் என்பதில்லை. தேவைப்படுபவர்களுக்குத் தரவும் செய்யலாம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நல்லது.  அதைப் போலவே எரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பழைய டயர்கள், ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரித்து சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமலும் இருந்தால் நல்லது தான். பல இடங்களில் இப்படி எரித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் இருப்பதையும் நான் பார்த்ததுண்டு.  இந்த வருடமேனும் இப்படியெல்லாம் இல்லாமல் போகிப் பண்டிகையை கொண்டாடட்டும்.  


அனைவரும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

14 ஜனவரி 2026


3 கருத்துகள்:

  1. கிட்டத்தட்ட உங்கள் பெரியம்மா ஆந்திரா பழக்கம் போன்று இன்று பழைய வீட்ட்டின் அருகில் இருக்கும் ஆந்திரா நட்பு கூப்பிட்டுப் பேசிய போது போஹி ஆந்திராவில் கொண்டாடுவது பற்றிச் சொன்னார். அவர்கள் வீட்டில் இன்று சுள்ளிகள் இலைகளைக் கூட்டி வைத்து எரித்தார்களாம் மகன் ரொம்ப ஆர்வமுடன் செய்ததாகச் சொன்னார்.

    இங்கு கர்நாடகாவில் யாரும் எதுவும் எரிப்பதில்லை எங்கள் தமிழ் தெலுங்கு மக்கள் இருநாலும் யாரும் எரிக்கவில்லை. ஒரு வேளை வேறு பகுதியில் தமிழ், தெலுங்கு மக்கள் இருக்கும்கொண்டாடுவார்களா தெரியவில்லை.

    கூடவே நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கைகள். பழக்கங்கள்,

    எனக்கும் அதே கருத்துதான் எரிப்பதற்குப் பதில் யாருக்கேனும் உபயோகப்பட்டால் கொடுத்துவிடலாம். டயர், ரப்பர், ப்ளாஸ்டிக் எல்லாம் எரிப்பதை சட்டரீதியாகக் கொண்டுவர வேண்டும் எரிக்கக் கூடாது என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. லோடி(ரி) பற்றி தங்கையும் உறவினரும் சொல்லியிருக்கிறார்கள். பழக்கவழக்கங்களில் சற்று வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லாப் பகுதிகளிலும் கான்செப்ட் அதேதான் போலும்.

    காணொளி பார்த்தேன் ஜி. துள்ளல் பாடல்! நன்றாக இருக்கிறது.

    ஊரில் கொண்டாடியதை அமெரிக்கா சென்ற பிறகும் கொண்டாடுவதாகக் காட்டியிருக்கிறார்களோ?!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....