சனி, 5 பிப்ரவரி, 2022

காஃபி வித் கிட்டு - 140 - கோபுரம் சிறுகதை - ஆலு டிக்கி - தொடர்ந்து வந்த பேய் - நஹி ஃபிஸ்லேங்கே - நிழற்படம் - - பணக்காரர் - கேள்விகள்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தமிழகப் பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

யாரும் எனக்கு உதவி செய்வதில்லை என்று கவலைப்படுவதை முதலில் விட்டுவிடுங்கள். மற்றவரின் உதவி என்பது உங்களுக்குள்ளேயே இருக்கும் நம்பிக்கை எனும் ஆயுதத்தை ஒப்பிடும்போது தூசுக்கு சமமானது.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கதை - கோபுரம் :



 

இந்த வாரம் சு. சமுத்திரம் அவர்கள் எழுதி, 1993-ஆம் ஆண்டு வெளியான ஒரு சிறுகதை. கதையின் தலைப்பு - கோபுரம்.  வீட்டில் திருடர்கள் வந்தபோது நடந்தவற்றை கதையாக எழுதி இருக்கிறார்.  க்ரைம் கதை என்று சொல்வதை விட ஒரு குடும்பத்தலைவரின் தைரியம் குறித்த கதை என்று கூட சொல்லலாம்.  சிறுகதைகள்.காம் என்ற தலைப்பில் ஒரு தளம் இருக்கிறது.  அந்தத் தளத்தில் இது போன்று நிறைய கதைகள் இருக்கின்றன.  அவ்வப்போது அத்தளம் சென்று வாசிப்பதுண்டு. அப்படி வாசித்த கதை உங்களின் ரசனைக்கும் வாசிப்பிற்கும் இந்த வாரத்தின் ரசித்த கதையாக! கதைக்கான சுட்டி கீழே.

 

கோபுரம் - சு. சமுத்திரம்

 

******

 

இந்த வாரத்தின் உணவு/இனிப்பு - ஆலு டிக்கி:



 

வட இந்தியர்களுக்கு ஆலு என ஹிந்தியில் அழைக்கப்படும் உருளைக் கிழங்கு மீது அதீத ஆர்வம் உண்டு.  தினம் தினம் இந்த ஆலுவை உணவில் சேர்த்துக் கொள்ளும் சிலரைப் பார்த்திருக்கிறேன். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஆலு, ப்யாஜ் போன்றவற்றை (DH)தடி எனப்படும் கணக்கில் - ஒரு (DH)தடி என்பது ஐந்து கிலோ அளவு - வாங்குவார். அதிலும் குறிப்பாக விலை குறைவாக இருக்கும் குளிர் நாட்களில்! அல்லது 25 கிலோ கொண்ட மூட்டையாக! ஒன்றிரண்டு மாதங்களில் அவை தீர்ந்து விடும்.  இந்த ஆலு கொண்டு விதம் விதமாக சமைப்பதுண்டு.  அப்படி ஒரு ஸ்னாக் (Snack) தான் ஆலு டிக்கி! சமீபத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிட்ட ஆலு டிக்கி மேலே படமாக!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: தொடர்ந்து வந்த பேய்!

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தொடர்ந்து வந்த பேய்!

 

நண்பர் பத்மநாபன் அவர்களின் அனுபவம் ஒன்று பதிவாக வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 

 

நாங்கள் சென்ற ஊருக்கும் எங்கள் ஊருக்கும் நடுவே இருந்த தூரம் முன்னர் சொன்னபடி ஏழு கிலோ மீட்டர். அதைக் கடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என நாங்கள் நடந்தாலும் உள்ளூர ஒரு பயம் காரணம், வழியில் ஒரு சுடுகாடு உண்டு! பொதுவாக இரவு நேரங்களில் மனித நடமாட்டம் சுத்தமாக இருக்காது. ஆனால் அங்கே பேய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவும், அவற்றிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது கேட்டதுண்டு. இருந்தும் பயத்தினை வெளியே காட்டாது நடந்து கொண்டிருந்தேன். நண்பர் சும்மா இருக்காது, ஏலே, பேய் நடமாட்டம் இங்கே உண்டுலே... கொலுசு சத்தமோ, மல்லிகை வாசமோ வந்தா திரும்பிப் பார்க்காதேலே எனச் சொல்லவே மனதில் கிலி அதிகமானது!

 

சுடுகாடு சமீபத்தில் வந்து கொண்டிருந்தபோது வெரசா நடப்போம்....  வழியிலே மாடன் கோவில் இருக்குல்லா, அதுவரைக்கும் நடந்துட்டா அவர் பார்த்துப்பார் என்று சொல்லி நடையை விரைவாக்க, பின்னாலே சரசர வென சத்தம். கூடவே காற்றில் மல்லிகை வாசம் வர இரண்டு பேருக்கும் கிலி! ஓட்டமும் நடையுமாக மாடன் சாமி கோவில் வரை வந்துவிட்டோம். ஆனாலும் எங்களுக்கு பின்னால் திரும்ப தைரியமில்லை. ஏனெனில் மாடன் சாமி கோவிலைத் தாண்டிய பிறகும் மல்லிகை வாசம் தொடர்ந்து கொண்டிருந்தது!

 

மாடன் சாமிக்கும் பயப்படாத இந்த பேய், நிச்சயம் அடுத்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுடலைமாடனுக்கு நிச்சயம் கட்டுப்படும், ஆகவே இன்னும் வேகமாக நடப்போம் எனச் சொல்லிக் கொண்டே, திரும்பி மட்டும் பார்க்காதலே, ஒரே அப்பு அப்பினா, ரத்தம் கக்கிடுவோம்! என நடந்தோம் அதாவது நடப்பதாக நினைத்து ஓடினோம்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - நஹி ஃபிஸ்லேங்கே :

 

சோமானி டைல்ஸ் விளம்பரம் ஒன்று - ஹிந்தியில் இருந்தாலும் ரசிக்க முடியும் என்றே தோன்றுகிறது! பாருங்களேன்.  அந்தச் சிறுவனின் நடிப்பும் மூதாட்டியின் நடிப்பும் சிறப்பு.



 

மேலே உள்ள காணொளியைப் பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!

 

Somany Ceramics #NahiPhislenge - YouTube

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - குண அமுதன் :


 

குண அமுதன் எனும் நிழற்படக் கலைஞர் எடுக்கும் படங்களுக்கு நான் ஒரு ரசிகன்.  அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளும் படங்கள் ஒவ்வொன்றுமே அழகு.  தொடர்ந்து ரசிக்கும் விதத்தில் அவர் எடுத்த நிழற்படங்கள் இருக்கும்.  அப்படி பகிர்ந்த படங்களில் சமீபத்தில் ஒன்று மிகவும் இரசிக்கும்படி இருந்தது.  படமும் அது குறித்த தகவலும் அவர் வார்த்தைகளில் கீழே!

 

தண்ணீரில் விழும் நிழல் உங்களின் மறுபதிப்பாக இருக்கிறது. வெறும்தரையில் வெயிலால் கருகிப் போய் விடுகிற நிழலின் உருவம் தண்ணீரிலே உயிர் பெற்றுவிடுகிறது. ஒரு புகைப்படக்காரனுக்கு அது அகம் நிறைக்கும் அனுபவம்.

 

தண்ணீரில் விழும் பிம்பத்தின் வீரியம் தெரிவதற்காக இங்கே படத்தை தலைகீழாகப் பதிவு செய்திருக்கிறேன். உங்களுக்கும் அந்த அனுபவம் கிட்டும் என்று நம்புகிறேன்.

 

-           இரா.குண அமுதன்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - பணக்காரர் :


 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் மேலே! சொல்லும் விஷயம் சரி தானே!

 

*****

 

இந்த வாரத்தின் எண்ணங்கள்- கேள்விகள்

 

சிலர் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்டு விடுகிறார்கள் - அதுவும் கேட்கப்படும் கேள்வி தனிநபர் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் - கேட்பவர்கள் முதியவர்களாக இருந்தும் கூட!  அதிலும் கேட்கப்படும் நபருக்கு, அந்த கேள்வியின் பதிலில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட!  சபை நாகரீகம் என்ற ஒன்று குறித்து அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும்! என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என நினைப்பவர்கள், அப்படிக் கேட்பது அவர்கள் பிறப்புரிமை என நினைத்து விடுகிறார்கள் போலும்! 

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 


40 கருத்துகள்:

  1. கதம்பம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து எப்பொழுதும் ரசிக்க கூடியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி விட்டு கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து எப்போதுமே மிகவும் ரசிக்கக்கூடியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சி பேச்சும் எழுத்தும் என்றைக்கும் ரசிக்கக் கூடியது என்பது உண்மைதான் நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. //பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து எப்போதுமே மிகவும் ரசிக்கக் கூடியது//

      ஹா.. ஹா.. ஊர்ப்பாசமா ?

      நீக்கு
    3. ஊர் பாசம் இருக்கத்தானே செய்யும் கில்லர்ஜி? தங்களது மீள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நிலைத்தகவல் சொல்லும் செய்தி மிகவும் சிறப்பு.  விளம்பரம் ஓகே.  எல்லோருக்கும் பிடித்த ஆலு எனக்குப் அவ்வளவாக பிடிக்காத ஒன்று!  கதம்பத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவின் வழி சொன்ன செய்திகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். வடக்கில் வாழும் அனைவருக்கும் ஆலு இல்லாமல் இருக்க முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதிவின் பகுதிகள் அணைத்தும் சுவாரசியம் சார்.
    அண்ணாச்சியின் பேய் அணுபவம் மிகவும் ரசித்து படித்தேன்.
    அதை சிறப்பாக மறைத்து தன் இமேஜை உயர்த்திய விதமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்தும் பத்மநாபன் அண்ணாச்சியின் அனுபவம் குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. வாசகம் அருமை. நிலைத்தகவல்👍.
    பத்து சார் எழுத்து எத்தனை முறை படித்தாலும் நம்மையறியாமல் ஒரு சிரிப்பை வரவழைக்கும். இன்றும் அதே அனுபவம். தங்களின் மனதில் எழுந்த கேள்விகள் அனுபவப்பட்ட ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. என்ன செய்வது? இப்படியும் சிலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை. நிழற்படம் அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. சிறுகதைகள்.காம் தளம் அவ்வப்போது சென்று வாசிப்பதுண்டு. இக்கதையும் வாசிக்கிறேன்

    கோபுரம் செம!! நானும் ரசித்தேன்

    ஆலு டிக்கி யம்மி!! நாவூறுது. ஆமாம் வட இந்தியர்களுக்கு உகி ரொம்பவே பிடிக்கும் ...அனால் நிஜமாகவே டக்கென்று சமைக்க உதவும் ஒரு காய் வித விதமாகவும் செய்யலாம்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பப்பு அண்ணாச்சியின் கதை வாசித்த நினைவு இருக்கே!!! விவேகானந்தா கேந்த்ராவில் செர்வீச் செஞ்சப்பன்னு நினைவு...இங்கு நீங்கள் எடுத்துச் சொன்னதிலிருந்து நினைவு வந்துவிட்டது.

    ஜி குண அமுதன் ஹையோ வாவ்!!! செமை ஃபோட்டோ. நானும் இனி பார்க்கிறேன் என்ன அழகான படம்...கவர்கிறது!! பெயரைக் குறித்துக் கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சி பதிவும் குண அமுதன் அவர்களின் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. விளம்பரம் மிகவும் ரசித்தேன் ஜி. பேரனின் எக்ஸ்ப்ரஷன்ஸ் செம!! நல்ல கருத்தும் சொல்லபப்டுகிறது விளம்பரம் என்றாலும்.

    நிலைத்தகவல் சூப்பர்

    இந்த வாரத்தின் எண்ணங்கள் : டிட்டோ செய்கிறேன் ஜி. இப்படிச் சிலர். எனக்குத் தெரிந்தவரை பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். அனுபவம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. பணக்காரர் நிலைத்தகவல் அருமை.நஹி ஃபிஸ்லேங்கே விளம்பர படத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலை தகவலும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. அந்த பேய்க் கதைக்குள்
    இருட்டுக்குள் புறப்பட்டபோது வராத மல்லிகை வாசம்,

    //கொலுசு சத்தமோ, மல்லிகை வாசமோ வந்தா திரும்பிப் பார்க்காதலே..//

    என்று சொன்னதற்குப் பிறகே வருகின்றது என்றால் -
    விநோதம் தான்!..

    எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று.. நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. குணா அமுதன் திறமை மிக்கவர்.. 5/6 ஆண்டுகளாக அவருடன் இணைந்திருக்கின்றேன்..

    இவர் எடுத்த ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றின் படத்தை அங்கு இங்கு வண்ணத்தை மாற்றி அவரது பெயரை நீக்கி விட்டு தங்களுடையதாக வெளியிட்டு தில்லாலங்கடி வேலை
    செய்தது பிரபல ஊடகம் ஒன்று..

    அவரது படங்களுடன் பல பதிவுகள் நான் வெளியிட்டு இருக்கின்றேன்..

    குறிப்பாக மீனாக்ஷியம்மன் திருக்கல்யாண படங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை உங்கள் தளம் மூலமே முதல் முறை அறிந்தேன் துரை செல்வராஜூ ஐயா. பின்தொடர்ந்தது அப்போதுதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. முதல் பாராட்டு பதிவின் வாசகத்துக்கு. இரண்டாவது அமுதன் அவர்களின் ஃபோடாக்ரஃபிக்கு.
    அற்புதமாக எடுத்திருக்கிறார். அதுவும் தலை கீழாக ப்ரசண்ட் செய்திருப்பது
    மிக ஆச்சர்யம்.
    இனி சென்று பார்க்கிறேன். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குண அமுதன் அவர்களின் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. சு .சமுத்திரம் மிகப் பிடித்த எழுத்தாளர். அந்தத் தளத்திற்கு அவ்வப்போது செல்வதுண்டு. இதையும் மீண்டும் படிக்கிறேன் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுரம் கதையை முடிந்தபோது படித்துப்பாருங்கள் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  16. பாட்டி பேரன் படம் மிகவும் ரசிக்க வைத்தது. எங்கள் மகன் சென்னை வீட்டுக்கு

    பாத்ரூமில் செய்த டைல்ஸ் தளம்,
    சுற்றிவர கைப்பிடிகள் அமைத்தது நினைவுக்கு வருகிறது.
    நல்ல மகன் கள் என்றும் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. உங்களது நினைவுகளையும் இந்த குறும்படம் மீட்டெடுத்தது அறிந்து மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. ஸ்ரீரங்கம் கோபுரம் தான். சரியாக சொல்லியிருக்கிறீர்கள் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  18. குறும்படம் சிறப்பு ரசித்தேன்.

    குணா அமுதன் அவர்களின் படம் கோணம் வெகு அருமை! அதை நீங்கள் தந்தவிதம் அதன் சிறப்பைக் கூட்டுகிறது.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படமும் நிழற்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  19. நிழல் படம் சூப்பர். குறும்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....