செவ்வாய், 17 டிசம்பர், 2013

பழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்



[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 13]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 12]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 11]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 10]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

இந்தப் பகுதியில் முடிக்க நினைத்திருந்தேன்.  இன்னும் சொல்ல வேண்டிய ஒரு சில விஷயங்கள் இருப்பதாலும், பதிவின் நீளம் கருதியும் அடுத்த பகுதி வெளிவந்தாக வேண்டிய கட்டாயம்.  அடுத்த பகுதியில் கண்டிப்பாக நிறைவு பெறும் என்ற உறுதிமொழியோடு! இப்படிகுதியை முடிக்கிறேன்!

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

சபரிகிரி வாசனின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு பம்பை நதிக்கரைக்கு வந்து சற்றே இளைப்பாறி, ஈரடி இலக்கியத்தில் சொல்லியிருக்கும் படி கொஞ்சம் வயிற்றுக்கும் கொடுத்தோம்! பிறகு அங்கிருந்து எங்கள் மகிழ்வுந்தினை நிறுத்தியிருந்த அலுவலக வளாகத்திற்கு வந்து மகிழ்வுந்தில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் என்பதையும் முந்தைய பகுதியில் சொல்லி இருந்தேன்.

அப்படி சென்று கொண்டிருந்தபோது கொஞ்சமாக பசிப்பது போல இருந்ததால் நடுவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் கடையில் நிறுத்தினோம். இங்கே கேரளத்தில் நெடுஞ்சாலை என்று பெயர் கொண்டிருக்கும் எல்லா சாலைகளுமே குறுகிய சாலைகளாக இருக்கின்றன. அதில் சிறிய கிராமங்களை கடக்கும்போது இரு மருங்கிலும் தேநீர் கடைகளும், சிறிய உணவகங்களும் உண்டு.

உணவகங்கள் என்று சொன்னால் ஏதோ பெரிய பட்ஜெட் உணவகம் என நினைத்து விடக்கூடாது. அனைத்தும் மிகச் சிறிய உணவகங்கள் தான். பெரும்பாலான கடைகளில் கண்ணாடி பெட்டிக்குள் உருண்டை உருண்டையாக ஒரு முட்டை போண்டா போல ஒன்றை வைத்திருக்கிறார்கள்! கூடவே கட்டஞ்சாய்/கட்டங்காபி. எல்லாக் கடைகளிலும் இருக்கும் இந்த உருண்டை என்ன என்பதை தெரிந்து கொள்ள நண்பரிடம் கேட்டேன் – “இது என்ன? அவர் சொன்ன பதில் – பழம் போண்டா!


உதவி: கூகிள்

அது என்ன பழம் போண்டா என ஒரு கடையில் டீ மாஸ்டரை வினவியபோது அவர் சொன்ன பதில் இதை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று எண்ண வைத்தது!

நன்கு பழுத்த வாழைப்பழத்தினை கொஞ்சம் சக்கரை சேர்த்து, தண்ணீர் சேர்க்காது மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்வார்களாம். கொஞ்சம் ஆப்பச்சோடா எடுத்து கோதுமை மாவில் கலந்து அரைது வைத்த வாழைப்பழத்துடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டுமாம். கொஞ்சமாக ஏலக்காய் பொடியும் சேர்த்து பிசைந்தால் வாசனை தூக்கும்!என்று சப்புக் கொட்டியபடி சொன்னார். சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேவையான அளவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணை ஊற்றி, நன்கு காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்!

இது தான் பழம் போண்டா.....  வாழைப்பழமும் கோதுமை மாவும் சேர்ந்தது என்று கேட்டவுடனேயே அதைச் சாப்பிடும் ஆசை போனது!  வேறு என்ன இருக்கிறது எனக் கேட்க, தோசையும், சம்மந்தியும் உண்டு!என்று சொல்லவே, தோசை தெரியும் – அது என்ன சம்மந்தி! என்று யோசித்தேன். நமக்குத் தெரிந்த ஒரே சம்மந்தி – மணப்பெண்/மணமகன் அப்பா-அம்மா தான்!

சரி தோசையும் சம்மந்தியும் தருஎன்று நான் பறைய, அவரும் கொண்டு வந்தார். சம்மந்தி என்ன என்று பார்த்தால் தண்ணீர் நிறைய விட்டு விளாவி இருந்த தேங்காய் சட்னி! ஆறிப்போயிருந்த தோசைக்கு நிறைய தண்ணீருடன் இருந்த சட்னி சரியாக இருக்க, லைட்டாக சாப்பிட்டோம். ஏனெனில் மதியம் ஒரு ஹெவியான சாப்பாடு காத்திருந்தது திருவனந்தபுரத்தில்!

காலை உணவு முடிந்து வண்டியில் விரைந்தோம் திருவனந்தபுரம் நோக்கி.  நண்பரின் அக்கா மகளுக்கு ஒன்றாவது வயது முடிந்து அன்று பக்கத்தில் இருக்கும் கோவிலில் “சோறுண்ணுஇருந்தது. அவர்கள் அதை முடித்து வீட்டிற்கு வந்து எங்களுக்காக காத்திருந்தார்கள். நாங்களும் ஒன்றரை மணி அளவில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.

மீண்டும் சிகப்பரிசி சாதம் – கூடவே அவியல், காலன், ஓலன், உப்பேரி என திவ்யமாக ஒரு மலையாளச் சாப்பாடு. கூடவே விதம் விதமாய் மலையாள நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள்.  அளவுக்கு அதிகமாகவே பரிமாறிவிட, அதை வீணடிக்காது சாப்பிட்டு முடித்தேன். உண்ட களைப்பு கொஞ்சம் உறங்கச் சொன்னது.  நண்பரின் வீட்டிற்கு வந்து கொஞ்சம் இளைப்பாறினேன்.

மாலையில் நண்பரின் வீட்டின் அருகே இருக்கும் ஒரு சிறிய குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து வீடு வந்து இரவு உணவு உண்டபின் திருச்சி திரும்ப ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தமையால் பேருந்து நிலையம் வந்து எனக்காகவே காத்திருந்த பேருந்தில் அமர்ந்தேன்.

செல்லும் போது இருந்த இடையூறுகள் ஏதுமின்றி அமைதியானதோர் பயணம். இரவின் இன்பம் தொடங்க, பயணம் மிகச் சிறப்பாய் அமைந்தது. ஓட்டுனர் அதி விரைவாக பேருந்தினைச் செலுத்தில் 07.30 மணிக்கு திருச்சியில் கொண்டு வந்து சேர்த்தார்.

இப்படியாக இந்த சபரிமலைப் பயணம் இனிதே முடிந்தது. இத்தனை வருடங்களில் இங்கே சென்றதில்லை என்ற ஏக்கமும் தீர்ந்தது. இனிமேலும் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்தப் பயணத்தில் இக்கட்டுரை வாயிலாக என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் சபரிகிரிவாசனின் பூரண நல்லாசி கிடைக்க வேண்டிக்கொண்டு இந்தப் பயணத் தொடரினை நிறைவு செய்கிறேன்.  சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணத் தொடரில் சந்திப்போம்!
  
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. 600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சலிக்கவேயில்லை உங்கள் எழுத்து. சுருக்கமான எளிய நடை. அனாவசிய வார்த்தை ஜாலங்கள் இல்லை (தொன்மம்.. அவதானிப்பு.. என்றெல்லாம் சிலர் பதிவுகளில் படிக்கும்போது பயமாக இருக்கிறது!)

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      நீக்கு
  2. உங்களோடு பயணித்தது திரும்பவும் சபரி மலைக்கு சென்றதைபோன்ற உணர்வு ஏற்பட்டது. சுவைபட பதிவிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  3. இறைவனைக் காணச் செல்லும்போதுதான் பயணத்தில் இடையூறுகள்! தரிசனம் முடிந்து திரும்பும்போது சுகமான பயணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தமிழ்மணம் இன்னும் சப்மிட் செய்யப் படவில்லை போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சேர்த்து விட்டார் ரமணி ஜி!

      தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நல்ல அருமையான பயணப் பதிவு
    படங்களுடன் இடம் குறித்தும்
    அறியாத உணவுகள் குறித்தும்
    பகிர்ந்தது பயனுள்ளதாய் இருந்தது
    அடுத்த பயணக் குறிப்பை
    ஆவலுடன் எதிர்பார்த்து...
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. பழம் போண்டா - பதிவுல எழுதுறதுக்காகவது கொஞ்சம் ருசித்திருக்கலாம் நீங்கள் (உபதேசம் எல்லாம் அடுத்தவர்களுக்குத் தான், எனக்கில்லை. ஹி.. ஹி.. )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும்போதே பிடிக்கவில்லை..... இதில் எங்கே சாப்பிடுவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  7. நேந்திரம் பழ பஜ்ஜிகள் கிடைக்குமே....!
    பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. //சம்மந்தி என்ன என்று பார்த்தால் தண்ணீர் நிறைய விட்டு விளாவி இருந்த தேங்காய் சட்னி!//

    பெயருக்குச் சம்பந்தமில்லாமல் உள்ளாரே, இந்த சம்மந்தி. சம்பந்தி சண்டை போட்டீர்களா? ;)

    //வாழைப்பழமும் கோதுமை மாவும் சேர்ந்தது என்று கேட்டவுடனேயே அதைச் சாப்பிடும் ஆசை போனது!//

    ;))))) பழத்தை கைபோடாமல் அப்படியே சாப்பிட வேண்டும்.

    அதைப்போய் பிசைந்து ;((((( போதுமே.

    இதனால் தான் நான் பஞ்சாமிர்தமே சாப்பிட மாட்டேன்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      பார்க்கும்போதே பிடிக்கவில்லை. செய்முறை கேட்டபின் மொத்தமாக!

      நீக்கு
  9. //இப்போது சேர்த்து விட்டார் ரமணி ஜி! //

    Now, voted!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. எனக்கும் விரதம் போல கட்டுபாட்டுடன் இருந்து சபரிமலை கோயிலுக்கும் செல்லும் ஆசை இளம் வயதில் இருந்தது அந்த ஆசை உங்கள் பதிவு மூலம்தான் நிறைவேறியது. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் உங்கள் பகிர்விற்கு....

    வாழைப்பழ போண்டா சுவையாக இருக்கும். அது எங்க சொந்த ஊரு(செங்கோட்டை) பலகாரத்தில் ஒன்று, அதை நான் எப்போதாவது இங்கு செய்து சாப்பிடுவது உண்டு tha.ma 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      அடுத்த பயணத்தின் போது சாப்பிடுகிறேன்! :)

      நீக்கு
  11. இனிய பயணத்தில் நாங்களும் பயணம் செய்தோம்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. சுதா த்வாரகாநாதன்17 டிசம்பர், 2013 அன்று AM 10:47

    பயணக் கட்டுரை அருமையாக இருந்தது. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தோம். உங்களின் 600வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதைப் போன்று 1000வது பதிவுக்கு வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.பயணக் கட்டுரை அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

      நீக்கு
  13. வாழைப்பழமும், கோதுமை மாவும் சேர்ந்த போண்டா ரொம்ப சாஃப்டா ருசியாவும் இருக்கும். நிஜமாவே நீங்க மிஸ் பண்ணிட்டீங்கண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      அடுத்த பயணத்தில் சாப்பிட வேண்டியது தான்!

      நீக்கு
  14. மிகவும் எளிமையாக சிறப்பான முறையில் தங்களின் பயண அனுபவத்தினைத்
    தந்திருந்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா மேலும் இது போன்ற அனுபவத் தொடர்கள்
    தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  15. சபரிமலைப் பயணம் இனிது நிறைவேறியது கேட்க சந்தோஷம். நடுநடுவில் சில பகுதிகள் படிக்காமல் விட்டிருக்கிறேன். எல்லாவற்றையும் படித்துவிட்டு வருகிறேன்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  16. அழகாக எங்களுக்கு ஐயன் ஐயப்பனை தரிசனம் செய்து வைத்தீர்கள். வாழ்க.

    (பழம் போண்டா புதியதாக இருந்தால் பஞ்சுபோல் மெத்தென்று சுவையாகத்தான் இருக்கும். ஆனால் பழம்ம்ம் போண்டாவாக இருந்தால் நூல் இழுத்து துணி நெய்யலாம். எங்கூர்ல இத உண்ணியப்பம், உண்ணியப்பம்- ன்னு சொல்லுவோம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. //கேரளத்தில் நெடுஞ்சாலை என்று பெயர் கொண்டிருக்கும் எல்லா சாலைகளுமே குறுகிய சாலைகளாக இருக்கின்றன.
    Funny..

    உங்கள் எழுத்துக்கள் பயணத்தை கண் முன் காட்டுகிறது.
    revmuthal.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா. கே.

      நீக்கு
  18. Pazham bonda yendravudan pazhaya bonda yendru ninaiththuvitten. Payanakkatturai nandraga irundhadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  19. எங்களுக்கும் சபரிவாசனின் அருள் கிடைக்க வேண்டிக் கொண்டதற்காக நன்றி.
    பழம் போண்டா என்று பார்த்ததும் நான் பழைய போண்டா என்று நினைத்தே படிக்க ஆரம்பித்தேன்.பிறகு புரிந்தது.
    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  20. வணக்கம்
    ஐயா
    பதிவு அருமை வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  21. வணக்கம்
    ஐயா
    த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. சம்மந்தி னா சம்பந்திங்க சண்டைக்கு வரப்போறாங்களே! :))) பழம் போண்டானு சொல்லி இருந்தாலும் பண்ணுகிறபடி பண்ணினால் அதுவும் சுவையாகவே இருக்கும். எங்க வீட்டில் அப்பம் செய்யும்போது கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுச் செய்வது உண்டு. தேங்காயும், வாழைப்பழமும் சேர்ந்து செய்யப்படும் அப்பம் நன்றாகவே இருக்கும். (பழக்கப்பட்டவங்களுக்கு) பொதுவாகக் கேரளாவில் நேந்திரம்பழ அப்பம் ரொம்பவே பிரபலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  23. பழம் பொரிச்சது என்ற நேந்திரம் பழ பஜ்ஜி கேரளத்தில் பிரசித்தி. படங்களும் பதிவும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு

  24. பயணம் அருமை. அங்கே போகும் எண்ணம் எனக்கு இதுவரை இல்லாததால் உங்கள் பதிவின் மூலமே தரிசனம் ஆச்சு.

    நேந்திரம் பழத்தை, அரிசிமாவில் முக்கி எடுத்து பஜ்ஜி செய்வார்கள். அதன் பெயர் பழம்பொரி(ச்சது) இதைப்பற்றி ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சு அப்படியே கிடப்பில் கிடக்கு:(

    காலன் = காளன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓலன் - காலன்! :) அதற்காக எழுதியது!

      கிடப்பில் கிடப்பதை விரைவில் பகிர்ந்துக்கோங்க டீச்சர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  25. சபரிகிரிவாசனின் பூரண நல்லாசி கிடைத்தது. மகிழ்ச்சி.
    பழ அப்பம் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  26. உடன் பயணித்தது போன்ற உணர்வினை அளித்தது! பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  27. அருமையான பயணப் பகிர்வு...
    ஐயப்பனின் தரிசனம் சிறப்பாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  28. சபரிகிரிவாசனின் நல்லாசி கிடைத்தது.

    இந்தப் பணியாரத்தை நாங்கள் வாய்ப்பன் என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      வாய்ப்பன் - நல்ல பெயராக இருக்கிறதே!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....