திங்கள், 20 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – எலிஃபன்ட் கடற்கரை - காலை உணவு…


அந்தமானின் அழகு – பகுதி 22



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பதிவர் இரா. பூபாலன் எழுதிய, விகடனில் வெளிவந்த, நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.
 
ஒரே ஒரு கணம்

நெரிசலற்ற அதிகாலைப் பேருந்தில்
இருவர் அமரும் இருக்கையின் ஜன்னலோரத்தில்
தனியளாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறாள்
அறிவியல் புத்தகத்தை மடியில் விரித்தபடி.
ஒரு வரி வாசிப்பதும் சன்னலை வெறிப்பதுமாக
நீளும் பயணத்தில்
திடீரெனப் பரபரப்பாகி இரு கைகளையும்
குவித்துப்
பிரார்த்திக்கிறாள்.
இடது புறம் கடந்த ஆலயமா
வலது புறம் கடந்த ஆம்புலன்ஸா
அறிவியல் புத்தகமா
பிரார்த்தனை எதன் மீதென அறிய
அவளின் உதடுகள் முணுமுணுப்பை
உற்றுக் கேட்கிறேன்… புரியவில்லை.
கடவுளே ஒரே ஒரு கணம்
என்னைக் கடவுளாக்கேன்…



ஸ்வராஜ் த்வீப் தீவில் தங்கிய நாளில் இரண்டு கடற்கரைகளை நாங்கள் பார்த்து இருந்தாலும் பார்க்காத சில கடற்கரைகள் உண்டு – அதில் ஒன்று எலிஃபன்ட் கடற்கரை.  ஸ்வராஜ் த்வீப் தீவில் Water Activities இந்தத் தீவில் தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது கடல் கொந்தளிப்பு காரணமாக எல்லா வித செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். அங்கே சென்றாலும் எதிலும் ஈடுபட முடியாது.  அதுவுமில்லாமல் நீண்ட நேரம் ராதா நகர் கடற்கரையில் – ஆசியாவின் நான்காம் அழகான கடற்கரையில் நீண்ட நேரம் செலவிட்டு இருக்க முடியாது.  அதனால் அடுத்த நாள் காலையில் முடிந்தால் அங்கே செல்லலாம் என நினைத்திருந்தோம். அடுத்த நாள் காலை எழுந்ததும் நண்பர்களோடு தீவில் நீண்டதொரு நடை! வழியில் ஒரு பெங்காலி பெண்மணி நடத்திய கடையில் லிக்கர் சாய்! (அதாங்க ப்ளாக் டீ/கட்டஞ்சாய் என்பதை பெங்காலிகள் லிக்கர் சாய் என்று சொல்கிறார்கள் – பெங்கால் பயணத்திலும் இப்படி கேட்டது பற்றி எழுதி இருக்கிறேன்) குடித்தோம். ஒரு கிளாஸ் பத்து ரூபாய் மட்டுமே! நன்றாகவே இருந்தது. பால் கிடைப்பது இங்கேயும் கடினம் என்பதால் சாதாரண தேநீர் கேட்டால் பால் பொடியில் கலந்து தான் கொடுப்பார்கள்!



அந்த நாளின் காலை நேரத்தில் தீவில் இருந்த அமைதியையும் இயற்கைச் சூழலையும் சுத்தமான காற்றையும் ரசித்தபடியே நீண்ட தூரம் நடந்து சென்று வந்தோம்.  தங்குமிடம் திரும்பிய பிறகு காலை நேர வேலைகளை முடித்துக் கொண்டு காலை உணவுக்காக தங்குமிடத்தில் இருந்த உணவகத்திற்கு வந்தோம். நிறைய வகை உணவுகள் – Corn Flakes, சூடான பால், சில்லென்று பழரசம், இட்லி, உப்புமா, ப்ரெட், வெண்ணெய், கெட்ச் அப், பராட்டா, தேநீர், காப்பி என எது வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளலாம்!  சிலர் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார்கள் – சூடான பாலும், சில்லென்ற பழரசமும் எப்படித்தான் ஒரே நேரத்தில் குடிக்க முடிகிறதோ? நார்த்-சௌத் காம்பினேஷனில் உப்புமா, இட்லி, பராட்டா, ப்ரெட் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அடித்து ஆடுகிறார்கள் – அவரவர் Capacity தகுந்த மாதிரி சாப்பிடலாம் என்றாலும் இந்த மாதிரி பயணம் வரும்போது நிறைய சாப்பிடுவது என்னைப் பொறுத்தவரையில் நல்லதல்ல! வயிறு கடமுடா செய்தால், பல சுற்றுலாத் தலங்களில் ஒழுங்கான வசதிகள், சுத்தமான வசதிகள் இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!



அனைவரும் காலை உணவினை உட்கொள்ளும் நேரத்தில், நாங்கள் சென்று பார்க்க முடியாத கடற்கரையான எலிஃபன்ட் கடற்கரை பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  ஸ்வராஜ் த்வீப் தீவின் ஒரு பகுதியாக இந்த எலிஃபண்ட் கடற்கரை கருதப்பட்டாலும், இங்கே செல்வதற்கு ஒரு படகுப் பயணம் அவசியம் அல்லது ஒரு ட்ரெக்கிங்! படகு என்றாலும் சுமார் 30 நிமிடங்கள் படகுப் பயணம் செய்ய வேண்டும். ட்ரெக்கிங் பாதை அனைவருக்கும் ஆனது அல்ல! கொஞ்சம் கடுமையான, சரியில்லாத பாதை என்பதால் குழந்தைகள் பெரியவர்கள் தவிர்ப்பது நல்லது.  அது மட்டுமில்லாமல் காட்டுப்பாதை என்பதால் சுப்புக் குட்டிகள் (பாம்புகள் – கீதாம்மா பாஷையில்!) நடமாட்டம் அதிகம் இருக்கும்! என்பதால் படகுப் பயணத்தினை தேர்ந்தெடுப்பது நல்லது. படகுகளும் குறைவான அளவில் இருப்பதால் ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும் – நீங்கள் பதிவு செய்த படகு செல்லாவிட்டால் பணம் திரும்பித் தந்து விடுவார்கள்.  இங்கேயும் ஸ்கூபா, ஸ்னார்க்ளிங், ஜெட் ஸ்கீ, சீ வால்கிங், கண்ணாடி அடித்தளம் கொண்ட படகுகள் என அனைத்தும் உண்டு – நீச்சல் தெரியாதவர்களும், ஸ்கூபா பயிற்சி இல்லாதவர்களும் இங்கே ஸ்கூபா செய்ய அனுமதி இல்லை.



இந்த எலிஃபன்ட் கடற்கரைக்கு பல சமயங்களில் செல்ல அனுமதி தருவதில்லை – படகுப் பயணத்திற்கும் அரசு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும் என்பதால் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  இங்கே செல்லும் திட்டம் உங்களுக்கு உண்டென்றால் உங்கள் பயண ஏற்பாட்டாளரிடம் இதை முன்னரே சொல்லி விடுவது நல்லது. அழகான கடற்கரை – சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது சில மாதங்களில் மட்டுமே – நிறைய மரங்களும் பழைய மரங்களின் வேர்களும் நிறைந்த பகுதி இது.  இந்த கடற்கரையின் பெரும்பாலான பகுதிகள் 2004-ஆம் ஆண்டு வந்த சுனாமியில் கடலுக்குள் சென்று விட்டது.  எங்களுக்கும் அங்கே செல்லும் ஆசை இருந்தாலும், படகுப் பயணம் ரத்து செய்து விட்டார்கள் என்பதால் எங்களால் அங்கே செல்ல முடியவில்லை. அதனால் பரவாயில்லை – ஒரே பயணத்தில் எல்லா இடங்களையும் பார்த்து விட முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம். சென்ற பகுதியில் சொன்னது போல கொஞ்சம் ஓய்வும் இந்த மாதிரி பயணங்களில் தேவை – ஒரேயடியாக ஓடிக் கொண்டே இருந்தால் பயணம் இனிப்பதில்லை!  அந்தமானின் ஸ்வராஜ் த்வீப் தீவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இங்கேயும் சென்று வர திட்டமிடலாம்! இப்பகுதியில் இருக்கும் காடுகளிலிருந்து யானைகள் வருவதும் உண்டு – யானைகள் இருப்பதால் இந்தக் கடற்கரைக்கு எலிஃபன்ட் கடற்கரை பெயர் வந்திருக்கலாம்!



காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குத் திரும்பி எங்கள் உடமைகளைச் சரி பார்த்துக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட வேண்டும். அப்போது தான் நண்பரின் மகள் கொஞ்சம் பதட்டத்தோடு வந்தார்.  அவரின் சிறு கைப்பை காணவில்லை என்ற பதட்டம் அவருக்கு.  அறை முழுவதும் தேடினாலும் கிடைக்கவில்லை. அவரது சிறு கைப்பையை கடைசியாக பயன்படுத்தியது முதல் நாள் மாலை ராதா நகர் கடற்கரையில் இளநீர் வாங்கியபோது! அதன் பின்னர் எடுக்கவே இல்லை. அறை முழுவதும் தேடினோம், சிப்பந்திகளும் வந்து தேடினார்கள் என்றாலும் கிடைக்கவில்லை. முதல் நாள் இளநீர் வாங்கியபோது அதனை அந்த இளநீர் கடையில் வைத்து விட்டு இளநீர் குடித்தது நினைவிருக்கிறது என்று சொல்ல குழுவினர் அனைவருக்கும் வருத்தம் – பணமும் இருந்தாலும் அதனை விட முக்கியமான தஸ்தாவேஜுகள் – வங்கி அட்டை, பான், ஆதார், தேர்தல் அட்டை என அனைத்துமே அதில் தான் வைத்திருந்தார் என்பதால் அதிக வருத்தம் நண்பரின் மகளுக்கு.  உடனடியாக என்ன செய்யலாம் என யோசித்து அந்தக் கடை இருந்த ராதா நகர் கடற்கரைக்கு ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு விரைந்தார்கள்.



அங்கே காவல் பணியில் இருந்தவர்களிடம் தகவல் சொல்ல, கடைக்காரர்கள் எடுத்திருந்தால் தந்து விடுவார்கள், வேறு சுற்றுலா பயணிகள் எடுத்திருந்தால் சொல்வதிற்கில்லை – எதற்கும் நீங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு புகார் அளித்து விடுங்கள் எனச் சொல்ல, அங்கிருந்து துறைமுகம் அருகே இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகாரும் அளித்தார்கள். அங்கே இருந்த காவலர்களில் ஒருவர் தமிழர் – அவரும் விசாரித்து, தகவல் கிடைத்தால் உங்களுக்குச் சொல்கிறோம் என அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.  வங்கி அட்டையை உடனடியாக Block செய்வதற்கு உண்டான வேலைகளையும் செய்து விட்டார்கள்.  ஆனாலும் இந்த நிகழ்வு நண்பரின் மகளை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியது.  குழுவில் இருந்த மற்றவர்களும் Upset ஆகிவிட்டார்கள். இதுவரை சிறப்பாகச் சென்று கொண்டிருந்த பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு வித மன வருத்தத்தினை அனைவருக்கும் உண்டாக்கியது என்று சொல்லலாம்.  அன்றைக்கு காலையில் ஸ்வராஜ் த்வீப் தீவிலிருந்து அடுத்து ஒரு தீவிற்கு சொகுசுக் கப்பலில் பயணம் செய்ய வேண்டும் – அதற்காக ராதாகிருஷ்ணா ரிசார்ட்டிலிருந்து குழுவினர் அனைவருமாக வண்டிகளில் துறைமுகம் வந்து சேர்ந்தோம். 



துறைமுகம் அருகே இருந்த காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு முறை சென்று நண்பரும் அவரது மகளும், தகவல் எதுவும் உண்டா என விசாரித்து வந்தார்கள் – அதுவரை எந்தத் தகவலும் இல்லை என்ற பதிலோடு திரும்பினார்கள்.  துறைமுகத்தில் என்ன நடந்தது, ஸ்வராஜ் த்வீப் தீவிலிருந்து நாங்கள் அடுத்ததாகச் சென்ற தீவு எது, அங்கே என்ன பார்த்தோம் போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. அழகிய கவிதை. மற்றும் சுவாரஸ்யமான தகவல்களுடன் பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அவர்களின் அலட்சியம் என்பதால், விதி என்பதால், இனிமையான பயணங்களில் இதுமாதிரி தடைச் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அப்புறம் எப்போது கிடைத்தது காணாமல்போன கைப்பை? சமயங்களில் நம்மிடமே இருக்கும். கவனக்குறைவாய் வேறு பையில் வைத்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனக்குறைவாக இருந்தால் இது போன்று நடந்து விடுகிறது. நண்பரின் மகளுக்கு அவரது கைப்பை கிடைக்கவில்லை - அடையாள அட்டை மற்றும் கடன் அட்டைகளை மறுபடியும் வாங்க வேண்டியிருந்தது. கொஞ்சம் இழப்பு தான். அஜாக்கிரதையாக இருந்தால் இப்படி நடந்து விடுவதுண்டு.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    கடற்கரைகளின் விவரங்களையும்
    அழகிய படங்களையும் பார்த்ததும்,
    பல திரைப்படங்களில் இந்தக் கடற்கரையைப்
    பார்த்த நினைவு வந்தது.
    சட்டென்று நண்பரின் மகள் தொலைத்த
    கைப்பையைத் தொலைத்த விவரம் சட்டென்று அத்தனை மகிழ்ச்சியையும் காணமல்
    போக்கிவிட்டது.
    பை கிடைத்திருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா...

      விவரங்கள், பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கைப்பை கிடைக்கவில்லை அம்மா - போனது போனது தான்.

      நீக்கு
  4. கவிஞர் பூபாலன் அவர்களின் கவிதை அருமை.

    நண்பரின் மகளது கைப்பை கடைகாரர் வைத்திருந்து கொடுத்தாரோ...?

    பொதுவாக சிலரது அஜாக்கிரதையால் இப்படி நிகழ்ந்து விடுகிறது இது குழுவில் அனைவரது மகிழ்ச்சியையும் கெடுத்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      இல்லை கில்லர்ஜி. அவரது கைப்பை கிடைக்கவில்லை - அனைவரும் வருத்தத்துடனே இருந்தோம் - சில மணி நேரம் வரை.

      நீக்கு
  5. அந்த பை கிடைத்ததா இல்லையா அண்ணா!! அந்தமான் அழகை அந்த அவலம் மறைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மகிழ்நிறை... கிடைக்கவில்லை.

      அந்தமானின் அழகு - ஒரு சில விஷயங்கள் தவிர அனைத்தும் அங்கே சிறப்பு தான்.

      நீக்கு
  6. கவிதை வரிகள் அருமை...

    எலிஃபண்ட் கடற்கரை மிகவும் அழகு...

    கைப்பை கிடைத்திருக்க வேண்டும் என்று மனது துடிக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      கடற்கரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கைப்பை கிடைக்கவில்லை தனபாலன்.

      நீக்கு
  7. படங்கள் அழகு. முதல் மூன்று படங்கள் ஒரே இடத்தில் இருந்து ஒரே கோணத்தில் எடுக்கப் பட்டாலும் அலைகள் கரையை தொடும் விளிம்பு வித்யாசம் உள்ளன. வேளியேற்றம் வரும் வரை காத்திருந்து படம் பிடித்தீர்களா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் எலிஃபண்ட் கடற்கரை செல்ல முடியவில்லை என எழுதி இருக்கிறேன். அங்கே சென்றிருந்தால் தானே படம் எடுக்க.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. பகிர்ந்த கவிதை அருமை

    கைப்பையை பறிக்கொடுத்த பெண் பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைப்பை தவறவிட்டது சோகம் தான் ராஜி.

      கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. கடற்கறை அழகோ அழகு
    பை தவற விட்டதில் வருத்தமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரையின் அழகு மனதைக் கவரும் ஒன்றே.

      பை தவறவிட்டது அனைவருக்குமே வருத்தம் தந்த நிகழ்வு தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. //அவளின் உதடுகள் முணுமுணுப்பை
    உற்றுக் கேட்கிறேன்… புரியவில்லை.
    கடவுளே ஒரே ஒரு கணம்
    என்னைக் கடவுளாக்கேன்…//

    ஆஹா அழகிய கவிதை.

    அலையே இல்லாத மிக அமைதியான அழகிய கடற்கரை.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தண்ணியை விட்டு வெளியே வர மனம் வராது போல இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      அந்தமானின் கடற்கரைகள் அனைத்துமே அழகு தான்.

      நீக்கு
  11. கவிதை நன்றாக இருக்கிறது. நானும் கோவில் வந்தால் ஆம்புலன்ஸ் சத்தம் போட்டுக் கொண்டு போனால் பிரார்த்தனை செய்வேன்.

    பயணத்தில் அளவாக சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அனைவரையும் பாதிக்கும். சுற்றுலா இடங்களை பார்ப்பதும் சரிவர நடக்காது.

    //குழுவில் இருந்த மற்றவர்களும் Upset ஆகிவிட்டார்கள். இதுவரை சிறப்பாகச் சென்று கொண்டிருந்த பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு வித மன வருத்தத்தினை அனைவருக்கும் உண்டாக்கியது என்று சொல்லலாம்.//

    கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன். கிடைக்க வேண்டும் என்று மன்டஹு வேண்டுகிறது.
    படங்கள் எல்லாம் அழகு. வானமும் ,கடலும் பார்க்க பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      கைப்பை கிடைக்கவில்லைம்மா..

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  12. கடற்கரை படங்கள் அழகு. ரொம்ப அலைகளில்லாமல் குளிக்கும்படியாக கடல் இருந்ததா? அங்கு குளித்தால், நல்ல நீரில் குளிக்க அருகிலேயே வாய்ப்பு இருந்ததா?

    எலிஃபெண்ட் தீவு, குடும்பத்தோடு செல்லும்போது பார்ப்பதற்காக விட்டுப்போய்விட்டது போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான கடற்கரைகள் அழகு. குளிக்க முடியும் - சில கடற்கரைகளில் குளிக்க அனுமதி இல்லை. பல கடற்கரைகளில் நல்ல நீர் குளியலுக்கான வசதிகள் உண்டு நெல்லைத் தமிழன்.

      எலிஃபண்ட் தீவு செல்ல முடியவில்லை. பிறிதொரு சமயம் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.

      நீக்கு
  13. கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி. நிறையப் படிக்கவில்லை என்பது மேலே தலைப்புக் கீழ் உள்ள முந்தைய பகுதிகளில் இருந்து தெரிகிறது. இதைப் படிக்கையிலும் முன் பின் தெரியாத மனிதரைப் பார்ப்பது போல் கொஞ்சம் அந்நிய உணர்வு. பதிவு முன்னால் படிச்சிருந்தால் புரிஞ்சிருக்குமே! தொடர்ந்து படிக்க முயற்சி செய்கிறேன். பார்த்தவரை/படித்தவரை பதிவும் முதல் படமும் அழகோ அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      ஆமாம் நடுவில் நிறைய நாட்கள் இங்கே வரவில்லையே. முடிந்தபோது வாசியுங்கள்.

      படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  14. வெங்கட்ஜி கவிதை அழகு. இரா பூபாலனின் கவிதைகள் வாசிப்பதுண்டு

    //லிக்கர் சாய்!// ஹா ஹா இதை நீங்க முன்னரேயே பெங்காலி கட்டன் சாய் பற்றி சொல்லிருக்கீங்க...நான் நினைக்கும் போதே நீங்க் அடைப்புக் குறிக்குள் சொல்லிருக்கீங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      ஆமாம் கீதாஜி - லிக்கர் சாய் பற்றி எழுதி இருந்தேன். உங்களுக்கும் நினைவிருக்கிறதே!

      நீக்கு
  15. இந்த மாதிரி பயணம் வரும்போது நிறைய சாப்பிடுவது என்னைப் பொறுத்தவரையில் நல்லதல்ல! //

    அதே அதே ஜி..

    அது போல பயணங்களில் நாம் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குழுவாகச் செல்லும் போது மற்றவர்களின் சந்தோஷம், நேரம் எல்லாம் முக்கியம்.

    எலிஃபென்ட் கடற்கரை ரொம்ப அழகாக இருக்கும் என்று தோன்றுகிறது நீங்கள் சொல்லியிருந்ததிலிருந்து..நீங்கள் செல்ல முடியாமல் போனாலும்..

    .அந்த மரம் மரங்களுக்கு இடையே கடல் நீர் அந்தக் கடற்கரைதானோ ஜி? செம அழகு....

    கடற்கரைப் படங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப மனதைக் கவர்கிறது. கடல் என்ன அமைதியாக இருக்கிறது!

    அது சரி இத்தனை அமைதியாக இருக்கறப்ப எலிஃபென்ட் கடற்கரையில் மட்டும் எப்படிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது ஆச்சரியமாக இருக்கிறது இயற்கையின் நிகழ்வுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த கடற்கரைக்கு செல்ல முடியாததில் வருத்தமே கீதாஜி...

      இயற்கை என்றைக்குமே தனக்குள் பல விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்திருக்கிறது. நாம் தான் என்றைக்குமே இயற்கையை புரிந்து கொள்வதில்லை.

      நீக்கு
  16. கடற்கரை அருமை ... ஆனால் அந்த கைப்பை எங்கள் அத்தனை மகிழ்ச்சியையும் கடலில் மூழ்கடித்து விட்டது .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

      காணாமல் போன கைப்பை - சோகம் தான்.

      நீக்கு
  17. எலிஃபன்ட் கடற்கரை அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்கரையின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....