புதன், 20 மே, 2020

அந்தமானின் அழகு – மணநாள் கொண்டாட்டம்


அந்தமானின் அழகு – பகுதி 33

 

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கணவன் மனைவி நீயா..? நானா..? என் வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..! நானும்..! என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்…

 

சென்ற பகுதியில் ஷாகீத் த்வீப் தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் வந்தது பற்றியும் அபர்தீன் பஜார் பகுதிக்குச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் பார்த்தோம்.  பஜாரிலிருந்து திரும்பிய போது எங்கள் தங்குமிடத்தில் ஒரு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது என்று சென்று பகுதியில் சொல்லி இருந்தேன்.  எதற்கான கொண்டாட்டம் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்!  ஏற்கனவே இந்தப் பயணம் பற்றிய கட்டுரையின் பகுதிகளில் நாங்கள் ஒரு குழுவாக சென்றதைப் பற்றி எழுதி இருக்கிறேன் – ஆறு குடும்பங்கள் கூடவே ஒண்டிக்கட்டையாக நான்! அந்த ஆறு குடும்பங்களில் நம் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதிய திருமதி சுதா த்வாரகநாதன் அவர்களும் உண்டு.  திருமதி – திரு த்வாரகநாதன் அவர்களுடைய திருமண நாள் அன்று (நவம்பர் மாதத்தில்!) தான்.  காலையிலேயே ஷாகீத் த்வீப் தீவிலேயே குழுவினர் அனைவருமாக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு அவ்வப்போது இருவரையும் கிண்டலும் செய்தும் கொண்டிருந்தோம்.  ஆனாலும் ஒரு கொண்ட்டாட்டமும் வேண்டுமல்லவா.


குழுவில் உள்ள நண்பர் ஒருவர் நானும் அவரது மகளும் பஜார் சென்ற போது அவரும் தனியாக பஜார் பகுதிக்குச் சென்று திருமண நாளுக்காக ஒரு கேக் ஆர்டர் செய்து அதையும், உருளை வருவல் போன்றவற்றையும், அருந்துவதற்காக குளிர் பானங்களையும் வாங்கி வந்தார்.  குழுவினரில் ஒருவரின் அறையில் அனைத்தும் சேர்க்கப்பட்டது.  இரவு ஏழரை மணிக்கு ஒரு Get-together இருக்கிறது. குழுவினர் அனைவரும்  அங்கே ஒன்று கூட வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருந்தோம்.  அபர்தீன் பஜார் பகுதியில் இருக்கும் தில்லை’ஸ் பேக்கரி & ஸ்வீட்ஸ் கடையில் (தமிழ் கடை தான்!) கேக் வாங்கிக் கொண்டு வந்தார் நண்பர்.  மண நாள் கொண்டாடும் தம்பதியினரின் மகனும் மகளும் எங்களுடன் பயணத்தில் இருந்தார்கள் – நண்பர் கேக் வாங்கி வருவது தெரியாமல் அவர்களும் கடைத் தெருவிற்குச் சென்று இன்னுமொரு கேக் வாங்கிக் கொண்டு வந்தார்கள்!  மண நாள் கொண்ட்டாட்டத்தில் – இரண்டு கேக்குகள்! அனைவரும் சொன்ன நேரத்தில் குழுவினரில் ஒரு குடும்பம் தங்கிய அறையில் ஒன்று கூடினோம்!


மணநாள் கொண்டாடும் தம்பதியும் குடும்ப சகிதம் வந்து சேர, அனைவருமாக மீண்டும் ஒரு முறை மண நாள் வாழ்த்துகளைச் சொல்லி, அவர்களை கலாட்டா செய்து கேக் வெட்டி கொண்ட்டாட்டம் நடந்தது.  அனைவருக்கும் கேக், குளிர்பானம், உருளை வருவல் என பகிர்ந்து கொடுத்தார்கள் குழுவில் உள்ள பெண்கள்.  நிறைய நேரம் கொண்டாட்டம் – தங்குமிடத்தில் இருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு எங்கள் அறையிலிருந்து வந்த சப்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்க்கும் அளவுக்கு இருந்தது! நாங்கள் அனைவரும் ஒரே அறையில் இருந்ததால் கதவைத் திறந்தே வைத்திருந்தோம் – சிலர் அப்படியே நடந்து வந்து கொண்டாட்டத்தினை பார்த்தும் சென்றார்கள்! ஹாஹா… பொதுவாக நம்மால் யாருக்கும் தொந்தரவு இருக்காது என்றாலும் இது போன்ற கொண்ட்டாட்டங்களின் சமயத்தில் ஒன்றும் செய்வதற்கில்லையே!  சிறிது நேரம் அந்த அறையில் பெரியவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தோம்.  என்ன பேசினோம் என்பதையும் இதே பகுதியில் சொல்லி விடுகிறேன். பிறகு அவரவர் அறைக்குத் திரும்பினோம் – மீண்டும் இரவு உணவுக்காக தங்குமிடத்தின் உணவகத்தில் சந்திப்போம் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு.  ஒரு மணநாளை அந்தமான் தீவுகளில் கொண்டாட முடிந்ததே என தம்பதிக்கும் மகிழ்ச்சி – குழுவினருக்கும் தான்!


அன்றைய கொண்ட்டாட்டத்திற்குப் பிறகு நாங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் எங்கள் அடுத்த நாள் பயணத்தினைப் பற்றியது.  நாங்கள் தில்லியிலிருந்து புறப்பட்ட போது திரு சுமந்த் அவர்களிடம் பேசியிருந்த திட்டப்படி எங்கள் பயணத்தின் ஆறாம் நாள் போர்ட் Bப்ளேயர் பகுதியில் இருக்கும் சில அருங்காட்சியகங்கள், கடற்கரை மற்றும் சில இடங்களைப் பார்ப்பது தான். ஆனால் நாங்கள் அங்கே சென்று சேர்ந்த பிறகு எங்கள் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி இருந்தோம் – அது ஒரு நீண்ட தூரப் பயணம் – அதுவும் பழங்குடியினர் இருக்கும் பகுதியைத் தாண்டிச் செல்ல வேண்டிய பயணம் – சாலை வழி/கப்பல்/படகு என மூன்று விதமான வழித்தடங்களில் செல்ல வேண்டிய பயணம் – அந்தப் பயணம் மேற்கொள்ள நிறைய திட்டமிட வேண்டியிருக்கும்.  அனைவருடைய அடையாள அட்டையின் நகல் தருவதோடு ஒரு படிவத்தில் அனைவருடைய விவரங்களும் எழுதி அவர்களை எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குழுக்களாகப் பிரித்து அரசின் அனுமதியையும் பெற வேண்டியிருக்கும். கூடவே நிறைய சட்டதிட்டங்கள் உண்டு – அந்தப் பயணம் மேற்கொள்ள. 


போர்ட் Bப்ளேயரிலிருந்து அதிகாலை புறப்பட்டுச் சென்று சில கிலோமீட்டர்கள் கடந்த பிறகு ஒரு செக் போஸ்ட் – அந்தப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் வரை பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி – அந்தப் பகுதியில் பயணிக்கும் போது எங்கேயும் படம் எடுக்க அனுமதி இல்லை – பழங்குடியினர் எதிரே பார்த்தாலோ, உங்கள் வாகனங்களை தடுத்து ஏதாவது கேட்டாலோ நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என நிறைய வழிமுறைகள் உண்டு.  அவர்களிடம் பேசக் கூடாது, அவர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என நிறையவே சட்ட திட்டங்கள்.  அந்த சட்டதிட்டங்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் – கூடவே சிறைத் தண்டனையும், அபராதமும் உண்டு.  இதை எல்லாம் திரு சுமந்த் முன்னரே எங்களிடம் சொல்லி இருந்தார். எங்களுக்கும் முன்னர் அப்பகுதியில் பயணம் செய்திருந்த நண்பர்கள் சிலரும் சொல்லி இருந்தார்கள். இந்த வழிமுறைகள் அனைத்தையும் எங்கள் குழுவினருக்கும் நானும் நண்பர் மணியும் சொல்லி பயமுறுத்தினோம். பழங்குடியினரை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது, அவர்களிடம் பேசக் கூடாது, அவர்களைப் பார்த்து சிரித்தால் அவர்கள் வாகனத்தினைத் தாக்கக் கூடும் என்றெல்லாம் பயமுறுத்தி வைத்திருந்தோம்.


பழங்குடி மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் அந்தமான் அரசாங்கத்தின் காவல்துறை நண்பர்கள் மாறு வேடத்தில் ஆங்காங்கே பதுங்கி இருப்பார்கள் – பழங்குடியினரை படம் எடுத்தாலோ, அவர்களிடம் பேசினாலோ, அவர்களுக்கு ஏதும் கொடுத்தாலோ அவ்வளவு தான் – அவர்கள் நம் வாகனத்தினைப் பிடித்துக் கொள்வார்கள் – அனைவருமே சிறையில் அடைக்கப்படுவோம் – அல்லது வழக்கு நடக்கும் வரை ஒவ்வொரு மாதமும் அங்கே சென்று வர வேண்டியிருக்கும் – ஆகையால் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வைக்க, குழுவினரில் அனைவரும் அவரவர்களது சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டார்கள். கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்த்தால் நாம் பார்ப்பது அவர்களுக்குத் தெரியாது என்றெல்லாம் உத்திகளைப் பேசிக் கொண்டு, நடுநடுவே சிரிப்பும், பயமுமாக குழுவினர் அனைவரையும் அடுத்த நாள் பயணத்திற்குத் தயார் செய்து வைத்தோம்.  இதையெல்லாம் சொல்லி முடித்த பிறகு அனைவரும் உணவகத்திற்குச் சென்றோம்.  இரவு உணவாக – சூப், சலாட், ரொட்டி, சாதம், தால், சப்ஜி மற்றும் ரஸ்குல்லா! சிம்பிள் மெனு!


உணவு உட்கொண்ட பிறகு அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்பி ஓய்வு.  அடுத்த நாள் காலையில் இரண்டு-இரண்டரை மணிக்கே எழுந்திருக்க வேண்டும். தயாராகி மூன்று மணிக்குள் புறப்பட வேண்டும் என்பதால் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்காமல், அன்றைய கணக்கு வழக்குகளை எழுதி வைத்த பிறகு ஓய்வு தான்.  அடுத்த நாள் பயணம் எங்கே, அந்தப் பயணம் எப்படி இருந்தது, பழங்குடியினரைப் பார்க்க முடிந்ததா? வேறு என்ன பார்த்தோம் போன்ற தகவல்களை எல்லாம் வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி


36 கருத்துகள்:

  1. நல்லதொரு சஸ்பென்ஸ். திகில் அனுபவமாக இருந்திருக்கும் போல! சுதா த்வாரகநாதன் தம்பதியர் அந்தத் திருமணநாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள். வாழ்த்துகள்.

    அர்த்தமுள்ள வாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட் ,
      இனிய காலை வணக்கம்.
      தம்பதியர் மண நாள் கொண்டாட்டம். நிறைவு. மனம் நிறை வாழ்த்துகள்.

      இவ்வளவு பீடிகையோடு நீங்கள் ஆரம்பிக்கும் பயணம் எப்படி இருந்ததோ
      அறிய மிக ஆவல்:).

      நீக்கு
    2. எப்படியான அனுபவம் என்பதை வரும் பகுதிகளில் சொல்வேன் ஸ்ரீராம்.

      ஆமாம். அவர்களுக்கு மறக்க முடியாத கொண்டாட்டமாக இருந்திருக்கும்!

      நீக்கு
    3. காலை வணக்கம் வல்லிம்மா...

      உங்களுடைய வாழ்த்துகளை அவர்களிடம் தெரிவிக்கிறேன் மா.

      பீடிகையுடன் ஆரம்பித்த பயணம் எப்படி இருந்தது? வரும் பகுதிகளில் சொல்கிறேன் மா.

      நீக்கு
  2. மணநாள் என்பதால் இரண்டு கேக் களுக்கும் திருமணம் செய்து வைத்தீர்களோ?  கேக்  படம் தவிர்த்து வேறு படம் எதுவும் இல்லை இந்தப் பதிவில்.

    நிசசயம் பழங்குடியினரைப் பார்த்திருப்பீர்கள். பார்த்தவுடன் வேகமாக அங்கிருந்து போய் விட்டீர்கள். அவர்கள் பிசுக்கோத்தா என்று கூவிக்கொண்டே இருந்தனர். என்ன சரிதானே? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பதில் சரியில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  3. பொன்மொழி ஆழமான தத்துவத்தை சொல்கிறது ஜி

    தம்பதிகளுக்கு எமது வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி சொல்லும் தத்துவம் - ஆமாம் - சரியான புரிதல் இருந்தால் இல்லறம் நல்லறம்!

      உங்களுடைய வாழ்த்துகளை அவர்களிடம் சொல்லி விடுகிறேன் கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. சஸ்பென்ஸ் - விரைவில் சொல்லி விடுகிறேன் நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  5. வாசகம் மிக அருமை.

    அன்பு வலையில் சிக்கி கொண்டதை காட்ட இரண்டாவது கேக் டிசைன் அருமை.

    திருமதி – திரு த்வாரகநாதன் அவர்களுடைய திருமண நாள் நண்பர்களுடன் சிறப்பாக நடந்தது மனதுக்கு மகிழ்ச்சி.
    அடுத்த பயணத்தில் ஏற்பட போகும் அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      இரண்டாவது கேக் டிசைன் - அன்பு வலையில் சிக்கிக் கொண்டதைக் காண்பிக்கிறது - நல்ல கற்பனை.

      உங்களுடைய வாழ்த்துகளை அவர்களிடம் சொல்கிறேன் மா.

      வரும் பகுதிகளில் இன்னும் அனுபவங்கள் சொல்வேன்.

      நீக்கு
  6. வாழ்த்துகள். நீயும் நானும்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. இரு கேள்விக்குறிகள் எடுத்து விட்டபின் இனிமையே....

    தம்பதியர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விக்குறிகள் எடுத்த பின் இனிமையே! :)

      தங்கள்து வாழ்த்துகளை அவர்களிடம் சொல்லி விடுகிறேன் தனபாலன் ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

      நீக்கு
  9. கூலிங் கிளாஸை குளிர்க் கண்ணாடி என்று எழுதுவார் தமிழ்வாணன். தமிழ்வாணன் யார் என்று உங்களுக்குத் தெரியும்.

    கூலிங் கிளாஸ் சிலருக்கு கறுப்புக் கண்ணாடி. சூரிய வெப்பத்திலிருந்து விழிகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தான் கூ.கிளாஸ் கண்டுபிடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக சூரிய ஒளியை பெற்றுப் பிரதிபலிக்கும் பனிக்கட்டிகள் உமிழும் வெளிச்ச ஒளியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே குளிர்க் கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்வாணன் யார் என்று உங்களுக்குத் தெரியும் - :) தெரியும் ஐயா.

      குளிர்க் கண்ணாடி - நல்ல வார்த்தை. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  10. இரண்டு கேக்குகளும் அருமை. தம்பதியர் நீண்டநாட்கள் மனமகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வாங்கு வாழட்டும். இந்தப் பழங்குடி மக்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். சமீபத்தில் கூட ஒருத்தர் அவர்களிடம் மாட்டிக்கொண்டு இறந்த செய்தி தினசரிகளில் வந்தது. உங்கள் அனுபவத்தைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பதிகளை வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா... அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

      பழங்குடிமக்கள் நிறைய தீவுகளில் உண்டும்மா... நீங்கள் சொல்லும் சம்பவம் வேறு ஒரு தீவில் நடந்தது - அந்தத் தீவிற்கு யாருமே செல்ல முடியாது - அரசுத் துறையில் கூட - ஒரே ஒருவரை Point of Contact-ஆக ஏற்பாடு செய்வார்கள் - அவரும் அவர்கள் மொழி தெரிந்தவராக இருப்பார். அந்தத் தீவின் பெயர் செண்டினெல் தீவு! நாங்கள் சென்ற தீவு வேறு! அங்கே பயணிகள்/சுற்றுலாவாசிகள் செல்ல முடியும்.

      நீக்கு
  11. பழங்குடியினரைச் சந்திக்கப் பயணமா? ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்கள் அனுபவத்தைப் படிக்க.

    உங்கள்ட ஒரு சந்தேகம்...கணக்கு வழக்கு எழுதும்போது அனைத்தையும் விடாமல் எழுத முடிகிறதா இல்லை பலவற்றை மறந்திருக்கிறீர்களா? எப்படி நோட் பண்ணிவைத்துக்கொள்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வரும் பகுதிகளில் அனுபவங்களும் விவரங்களும் தருகிறேன் நெல்லைத் தமிழன்.

      கணக்கு வழக்கு: பொதுவாக, நினைவில் இருக்கும். நான் கணக்கு வழக்குகளை பார்க்கும் சமயத்தில் அலைபேசியில் Notes பகுதியில், வரவு செலவு என அனைத்தையும் அவ்வப்போது சேமித்துக் கொண்டே இருப்பேன். இரவில் அனைத்தையும் சரிபார்த்து ஒரு நோட்டில் எழுதிக் கொள்வேன். அதனால் எப்போதுமே பிரச்சனை வந்ததில்லை.

      நீக்கு
  12. சுதா த்வாரகாநாத் திருமண நாள் கொண்டாட்டம் - அவர்களுக்கு அந்த நாள் ஸ்பெஷலாக இருந்திருக்கும், அந்தமானில் வந்தது என்பதால்.

    அவர்கள் அனுமதி இல்லாததால் அவர்கள் படத்தைப் போடாமல் கேக் படங்களைப் போட்டிருக்கிறீர்கள் போலிருக்கு. அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லைத் தமிழன் - அவர்களுக்கு இது ஸ்பெஷல் கொண்டாட்டம் தான்.

      பொதுவாக நான் மற்ற நண்பர்களின் படங்களை இங்கே பகிர்வது இல்லை. உங்கள் வாழ்த்துகளை அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  13. பழங்குடியினர் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறோம்.

    ஊட்டி பழங்குடியினர்,அவர்கள் வீடுகள், கோவில் கண்டிருக்கிறேன்.எங்கள் நாட்டு வேடுவர் இனமும் பார்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழங்குடியினர் பற்றிய தகவல்கள் விரைவில்.

      அரக்கு பள்ளத்தாக்கில் இப்படி பழங்குடியினரை பார்த்ததுண்டு மாதேவி ஜி.

      நீக்கு
  14. அந்தமானில் மணநாள் கொண்டாடிய தம்பதியினருக்கு வாழ்த்துகள்.

    அந்தமான் பழங்குடியினரைப் பற்றி அறிந்ததுண்டு. உங்கள் வழி அறிய ஆவலுட்ன தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வரழ்த்துகளுக்கு நன்றி துளசிதரன் ஜி. அவர்களிடமும் தெரிவித்து விடுகிறேன்.

      நீக்கு
  15. ஆஹா நம்ம துவாரகாநாதன் சுதா துவாரகாநாதன் தம்பதியினர் மணநாள் கொண்டாட்டமா? நான் ஏதேனும் பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும் என்று எண்ணினேன். பிலேட்டட் விஷ்ஷஸ் சொல்லிடுங்க ஜி. சுதா இங்கு எழுதியிருக்காங்களே அவங்க மகன் மருத்துவம் படித்த போது மண்டை ஓடு வீட்டுக்குக் கொண்டு வந்து அனுபவங்கள் எல்லாம்...மகள் மருத்துவம் பற்றியும் எழுதியிருந்த நினைவு..ரெசிப்பிஸ் கூட கொடுத்திருந்தாங்க இங்க.ஆந்திரா ரெசிப்பிஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திருமதி சுதா த்வாரகநாதன் அவர்கள் சில பதிவுகள் இந்தத் தளத்தில் எழுதி இருக்கிறார்கள். உங்களுக்கு நினைவு இருப்பதில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  16. வெங்கட்ஜி ஆஹா நான் இன்னும் பழங்குடி பற்றி வரலியே என்று நினைத்தேன். பல விஷயங்கள் வாசித்திருந்தாலும் அங்குள்ள சட்ட திட்டங்கள் பற்றியும் வாசித்திருந்தாலும் உங்கள் வழி நேரடி அனுபவமாக அறிய ஆவல். எப்படி இருந்தது உங்கள் அனுபவம் என்று..பார்க்க முடிந்ததா என்றெல்லாம். தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழங்குடிகள் பற்றிய இன்னும் சில விஷயங்கள் அடுத்த பகுதியில்.

      தொடர்ந்து பயணிப்போம் கீதாஜி.

      நீக்கு
  17. மணநாள் கொண்டாடிய தம்பதியருக்கு வாழ்த்துகள்.

    பழங்குடி மக்களை அணுகக் கூடாதென்கிற தகவல்கள் புதிதாக உள்ளன. அவர்களைப் பார்க்க முடிந்ததா என அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி. அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.

      ஆமாம். பழங்குடியினரை அதுவும் குறிப்பாக அந்தமான் தீவுகளின் பழங்குடியினரை அணுக நமக்கு அனுமதியில்லை.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....