வெள்ளி, 29 மே, 2020

அந்தமானின் அழகு – Bபாராடாங்க் – சதுப்புநிலக் காடுகள்


அந்தமானின் அழகு பகுதி 37


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


உன் வசம் உள்ள திறமையை அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே; இனிமையாகவும், உன்னதமாகவும் பாடக் கூடிய பறவைகள் மட்டுமே குரலெழுப்பலாம் என்றால் காடு நிசப்தமாகிவிடும் – ஹென்றி வேன் டேக்.


உங்களில் எத்தனை பேர் நமது தமிழகத்தின் சிதம்பரத்தினை அடுத்த பிச்சாவரம் சென்றிருக்கிறீர்கள்? அங்கே இருக்கும் சதுப்புநிலக் காடுகள் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?  அழகான இடம் அந்த பிச்சாவரம். கல்லூரி நாட்களில் ஒரு அறிவியல் கண்காட்சியை நடத்த உதவியதால், கண்காட்சி ஏற்பாடு செய்த அமைப்பு, உதவி செய்த கல்லூரி மாணவர்களை எல்லாம்  பிச்சாவரம் வரை அழைத்துச் சென்றார்கள். மறக்க முடியாத அனுபவம் அது – அது வேறொரு சமயம் சொல்கிறேன்.  இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் இடம் கூட அது போன்ற, அதைவிட பரப்பளவில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் இருக்கும் இடம் தான்.   சென்ற பகுதியின் முடிவில் ஓட்டமாக ஓடி, மோட்டர் படகுகளுக்கான பயணச் சீட்டினை வாங்கியது குறித்து எழுதி இருந்தேன்.  எங்களை காத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்ற இளைஞர் படகுகளை படகுத்துறைக்கு வரவைத்து, எங்களையும் அழைத்தார்.  சாலையோரத்தில் நிறுத்தி எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ள உதவி செய்தார். 



நாங்கள் பதினாறு பேர் – பத்து பேர் ஒரு குழுவாகவும், மீதி ஆறு பேர் ஒரு குழுவாகவும் பிரிந்தோம். பத்து பேர் குழுவில் நண்பர் மணியும் ஆறு பேர் கொண்ட குழுவில் நானும்!  எங்கள் படகில் இன்னும் மூன்று வேறு பயணிகள்.  பத்து பேர் கொண்ட படகு முதலில் சென்றது. பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்ட பிறகு கீழே சில படிகளில் இறங்கிச் செல்ல வேண்டும். அந்த இடத்தில் எங்கள் பயணச் சீட்டுகளை பரிசோதித்து அனுமதிக்கிறார் ஒரு பெண் ஊழியர்.  படகு தயாராக இருக்கிறது. மோட்டார் படகை இயக்க ஒரு இளைஞர் – கூடவே எங்களுக்கு பாதுகாப்பு உடை அணிவித்த இளைஞர் – எல்லா இடங்களிலும் இளைஞர் கூட்டம் தான் – ஓடி ஓடி உழைக்கிறார்கள். படகுகளில் அவரவர் எடைக்குத் தகுந்த மாதிரி அமர வைக்கிறார்கள் – படகில் ஒரு பக்கம் அதிக எடை இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆயிற்றே! அனைவரும் அமர்ந்து கொண்ட பிறகு மோட்டார் படகை இயக்கலாமா என்று கேட்டுக் கொண்டு, படகைச் செலுத்தினார்.



சுமார் முப்பது நிமிடத்திற்கு நாம் இந்த படகில் பயணிக்கப் போகிறோம். இரண்டு பக்கங்களில் இயற்கை எழில் கொஞ்சுகிறது.  நடுவில் நீர்ப் பகுதியில் நம் படகு செல்ல இடப் பக்கம் முழுவதும் சதுப்பு நிலக் காடுகள் – Mangrove என ஆங்கிலத்தில் சொல்லப்படும் தாவர வகைகள் எங்கும் நிரம்பி இருக்கின்றன.  இந்த சதுப்புநிலக் காடுகள் இயற்கை நமக்குக் கொடுத்த வரம் – அவை இல்லாவிட்டால் பல கடல்வாழ் உயிரினங்கள் இல்லாமல் போகும் அபாயம் உண்டு – கடல் சீற்றங்களைத் தடுக்கவும் இந்த சதுப்புநிலக் காடுகள் முக்கியத் தேவை. அலையாத்திக் காடுகள் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இவை இருக்கும் பகுதியில் பயணிப்பது மிகவும் ஸ்வாரஸ்யமான அனுபவம். எங்களுக்கு அந்த அனுபவம் ரொம்பவும் பிடித்திருந்தது. அலையாத்திக் காடுகள் பற்றிய படித்த தகவல் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.


``கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளின் கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள். பலவகைப் பெயர்களில் அழைக்கப்படும் இத்தகைய காடுகள் கடல் உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கின்றன. இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சதுப்பு நிலக் காடுகள் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதுடன், எண்ணற்ற உயிரினங்களை வாழவும் வைக்கிறது. நம் நாட்டில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் மட்டும் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு உலக சதுப்பு நிலக் காடுகள் தினமாக கடைப்பிடித்து வருகிறது. தனித்த சிறப்பு மிக்க சதுப்பு நிலக் காடுகளைப் பாதிப்பிலிருந்து மீட்கவும், அதன் நிலையான வளர்ச்சிக்கான தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.”


படகுகளில் பயணித்தபடியே அலையாத்திக் காடுகளையும் அங்கே இருந்த பறவைகள் எழுப்பும் விதம் விதமான ஒலிகளையும், அந்த ஒலி இல்லாத நேரத்தில் நிலவும் அமைதியையும் ரசித்தபடியே பயணித்தோம்.  கூடவே நிறைய படங்களும் எடுத்துக் கொண்டோம்.  பிச்சாவரம் சென்றிருந்தாலும் அந்தப் பகுதியை விட இந்தப் பகுதியில் சற்றே அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பயணம் இன்னும் பசுமையாக இருக்கிறது நினைவில்.  படகுகள் மூலம் நாங்கள் பயணித்து எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பதைச் சொல்வதற்கு முன்னால், என்ன பார்க்க முடியவில்லை என்பதை இங்கே சொல்கிறேன். இந்தப் பகுதியில் இருக்கும் கிளித்தீவு பகுதிக்குச் செல்லும் ஆசை இருந்தது – மாலை நேரத்தில் ஆயிரக் கணக்கில் கிளிகள் பறந்து வந்து அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களில் அமர்ந்து கொள்ளும் காட்சியும், சிறிய மோட்டார் படகுகளில் பயணிக்கும்போது கண்களுக்கு ரம்மியமான சூரிய அஸ்தமனக் காட்சிகளையும் பார்க்க முடியாமல் போனதில் ஒரு வருத்தம். இந்தக் காட்சிகளைக் காண வேண்டுமென்றால் அன்றைய தினம் Bபாராடாங்க் பகுதியில் தங்க வேண்டும்!


நாங்கள் அன்றைக்கே போர்ட் Bப்ளேயர் திரும்ப வேண்டியிருந்ததால் – திரும்பும் போது ஒரு நாளைக்கு நான்கு முறை தான் வனப்பாதை திறப்பார்கள் – இந்த கிளித் தீவு, சூரிய அஸ்தமனக் காட்சிகளை பார்க்க முடியாததில் ஒரு வருத்தம் உண்டு. மனித மனதிற்கு இருக்கும் ஆசைகளுக்கு அளவேது – ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அந்தமான் பயணித்து, கிளித்தீவு, பாம்புத் தீவு, எலிஃபண்ட் தீவு, டிக்லிபூர், என பயணிக்க ஆசைகள் உண்டு! இந்த உலகம் முழுவதையும் தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நுண் கிருமி கொரோனா நம்மை விட்டு விலகிச் சென்றால், இந்த மாதிரி ஒரு பயணம் இப்படிச் செல்லக் கூடும்! அப்படிச் சென்றால் நிச்சயம் இங்கே எழுதுவேன்! அதைவிட வேறென்ன வேலை! சரி நண்பர்களே, சதுப்பு நிலக் காடுகளை ரசித்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  இன்னும் சில பகுதிகளில் இந்த அந்தமானின் அழகு பயணத் தொடர் முடித்து விட உத்தேசம்! அதன் பிறகு பயணத் தொடர்களுக்கு ஒரு இடைவெளி! பயணம் செய்தால் தானே! எழுதுவதற்கு விஷயங்களா இல்லை? எதையாவது எழுதாமல் நான் விடப் போவதில்லை! நீங்களும் படித்துத் தானே ஆக வேண்டும்!


நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

61 கருத்துகள்:

  1. அருமையான வாசகம்.  படங்கள் அழகு.   முதலில் படிப்பவற்றை முழுவதும் படித்து முடித்து விட்டு பிறகு படங்களை பார்ப்பேன். அருமையான அனுபவமாக அடைந்திருக்கிறீர்கள் அந்தமான் பயணத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      அந்தமான் பயணம் - சிறப்பான அனுபவங்கள் தான். மறக்க முடியாதவையும் கூட.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. உன்னில் இருக்கும் சிறிய திறமை அதை பயன்படுத்தும் விதத்தில் நாளைய உலகில் பெரிய அளவாக மாறலாம் என்ற பொருள்பட தன்னம்பிக்கை வாசகம் அருமையாய் உள்ளது.

    சதுப்புநில காடுகள் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. இயற்கை வனப்புக்கள் நீங்கள் எடுத்த படங்களில் கண்களுக்கு விருந்தாக தெரிந்தது. கூடவே மரம் செடி கொடிகளின் இயற்கையான வாசனையையும் நீங்கள் பயணத்தின் இடையே சொல்லிய வர்ணனைகளில் நானும் கற்பனையில் உண(நுக)ர்ந்து சந்தோஷமடைந்தேன்.

    சதுப்புநில காடுகளை பற்றிய விபரங்களுக்கு மிகவும் நன்றி. அந்தமானில் அழகிய இத்தனை தீவுகள் உள்ளனவா? கிளித்தீவு ரசிக்கத் தக்கதாக இருக்கும். பாம்பு தீவு, எலிஃபண்ட் தீவு எல்லாம் சுற்றிப் பார்க்க கொஞ்சம் பயமேற்படுத்துமே..!ஹா ஹா.

    படங்களும், பதிவும் அழகாக இருக்கின்றன. பயணங்களில் உங்கள் அனுபவங்களை விவரித்து கூறும் போது நாங்களும் பயணித்த உணர்வை பெறுகிறோம். அதற்கே தங்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். அந்தமான் பயணத்தில் சென்ற நான்கு பயணத்தின் கட்டுரையை படிக்க தவறி விட்டேன். விரைவில் நேரம் கிடைக்கும் சமயங்களில் அதையும் படிக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.


      வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஐநூறுக்கும் மேற்பட்ட தீவுகள். அவற்றில் நாம் பார்க்க முடிந்தவை வெகு சில மட்டுமே. மனிதர்கள் இல்லாத தீவுகள் தான் நிறைய.

      பாம்பு தீவு - கொஞ்சம் பயம் தான்! :)

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பயன் தரும் என்றே நம்புகிறேன். விடுபட்ட பதிவுகளை முடிந்த போது படியுங்கள்.

      நீக்கு
  3. சதுப்புநிலக்காடுகள் மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயனாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கும் ஏதோவொரு காரணம் நிச்சயமாக உண்டு.

    படங்கள் அருமை ஜி பிச்சாவரம்தானே இதயக்கனி, தசாவதாரம் படப்பிடிப்பு நடந்தது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனின் ஒவ்வொரு படைப்பும் பயனுள்ளவை/காரணம் உள்ளவை தான் கில்லர்ஜி.

      பிச்சாவரம் - இதயக்கனி படப்பிடிப்பு அங்கே செல்லும்போது சொன்னார்கள். தசாவதாரம் இன்னும் சில படங்களின் காட்சிகளும் அங்கே தான் எடுக்கப்பட்டவை.

      நீக்கு
  4. எங்களின் ஊரிலும் (குமரி மாவட்டம்) அலையாத்திக் காடுகள் உள்ளன. மிக சிறிய பரப்பளவில். அருகில் சென்று பார்க்கவேண்டுமென்றால் படகில்தான் செல்ல வேண்டும் .... தொலைவில் இருந்து ரசித்ததுண்டு. உங்களின் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமரி மாவட்டம் அலையாத்திக் காடுகள் - மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சிவா.

      அனுபவங்கள் பகிர்வு - தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படங்கள் நன்றாக உள்ளன. அதிலும் அந்த freeze shot --படகு செல்வதும் அதனால் உண்டாக்கிய அலைகள் , பின்னர் தூரத்து பச்சை-- காம்பினேஷன் நன்றாக உள்ளன. 

    47.5 டிகிரி வெயிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொது போக்குவரத்து ஆரம்பித்து விட்டதா? அல்லது நடராஜா செர்விஸ் தானா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய நுணுக்கமான வர்ணனைக்குப்பிறகு படங்களை மீண்டும் ஒரு முறை ரசித்துப் பார்த்தேன். நன்றி. 

      நீக்கு
    2. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      வெயில் - பழகி விட்டது. பொது போக்குவரத்து, ஆட்டோக்கள் ஓடுகின்றன. லாக்டவுன் ஆரம்பித்த சில நாட்கள் மட்டுமே நடை. பிறகு அலுவலக வாகனம். இப்பொழுது நண்பருடன் வாகனத்தில் காலைப் பயணம். மாலையில் அலுவலக வாகனம்/ஆட்டோ - நேரத்திற்குத் தகுந்தாற் போல! நடைப் பயணம் இல்லை! தங்களது அக்கறைக்கு நன்றி!

      நீக்கு
    3. படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      நீக்கு
  6. சதுப்புநிலக் காடுகள் படங்கள் அழகாக இருக்கின்றன.

    அதில் முதலைகள் உண்டோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      முதலைகள் உண்டோ? உண்டு!

      நீக்கு
  7. சில படங்கள் wide angle லென்ஸ் உபயோகித்து எடுத்தது போல் உள்ளன. லென்ஸ் உண்டா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Wide Angle Lens - என்னிடம் இல்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. இரண்டு லென்ஸ் மட்டுமே - 18-55 mm மற்றும் 55-250 mm. இப்போதைக்கு வேறு லென்ஸ் வாங்கும் எண்ணம் இல்லை.

      நீக்கு
  8. சதுப்பு நிலக் காடுகள் பற்றிய தகவல்களும் சிறப்பு... இந்தப் பயணம் மறக்க முடியாததாக இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுப்பு நிலக் காடுகள் தகவல்கள் சிலருக்காவது பயன்படும் என்றே இங்கே இணைத்தேன் தனபாலன்.

      மறக்க முடியாத பயணங்களில் அந்தமான் பயணமும் ஒன்று தான்.

      நீக்கு
  9. சதுப்புநில காடுகளை பற்றிய விபரங்களுக்கு மிகவும் நன்றி ஐய்யா.
    அலையாத்திக் காடுகள் குரித்த விவரனைகளும் பயன்களும் அணைவரும் அறியவேண்டுபவை.
    பயனக் கட்டுறைகள் முடிந்தால் என்ன? உங்கள் கொராணா கால டில்லி அணுபவங்களையும் அலுவலக நிகழ்வுகள் குரித்தும் சுவையான அணுபவங்களைப் பகிர்வீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      அனுபவங்கள் நிறையவே உண்டு பகிர்வதற்கு - முடிந்த போது பகிர்வேன்.

      நீக்கு
  10. எவ்வளவு ரம்யமான காட்சிகள்!.. மனம் பதிவை விட்டு அகலவே மறுத்தது.

    இன்னொரு பக்கம் வேதனை மண்டியது.. சினிமா, எதையும் அரசியல் பண்ணுவது இவை தவிர மற்ற எது பற்றியும் கவனம் கொள்ளாத காலத்தின் கோலத்தை நினைத்து வேதனை.

    வேதனையை மறக்க --

    'எல்லா இடங்களிலும் இளைஞர் கூட்டம் தான் – ஓடி ஓடி உழைக்கிறார்கள்' -- என்ற வரி உற்சாகத்தைக் கொடுத்தது.

    'ஒரே இந்தியா -- என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்' என்ற உன்னத உணர்வு மனதை ஆட்கொண்டது.. இப்படியான தேசிய செல்வங்களைப் பற்றிய அறிவை கொளுத்தியமைக்கு நன்றி, வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரம்யமான காட்சிகள் - மனதை விட்டு அகலாத காட்சிகள் தான் ஜீவி ஐயா.

      சினிமா, எதையும் அரசியல் செய்வது - காலத்தின் கோலம் தான். வேறென்ன சொல்ல.

      உழைக்கும் இளைஞர் கூட்டம் - மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான்.

      என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் - நிறையவே வளங்கள். சரியான விதத்தில் பயன்படுத்தினால் இந்தியா வல்லரசு ஆவது உறுதி தான்.

      பதிவின் பகுதிகளை ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  11. தஞ்சை மாவட்டத்தின் முத்துப் பேட்டை தம்பிக்கோட்டை வட்டாரங்களின் அலையாத்திக் காடுகளை சற்று எட்ட இருந்து ரசித்ததுண்டு...

    ஆள் விழுங்கும் குழிகள் இருப்பதாகச் சொல்லப்படுவதால்!..

    கோடியக்கரைக் காடுகள் இன்னும் பிரசித்தமானவை...

    தங்கள் பதிவை படங்களும் செய்திகளும் அணி ச்ஞ்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பகுதியில் இருக்கும் அலையாத்திக் காடுகள் பார்த்ததில்லை. தமிழகத்தில் பார்த்த ஒரே அலையாத்திக் காடுகள் - பிச்சாவரம் மட்டுமே.

      கோடியக்கரை - ஆஹா... கல்கியின் வார்த்தைகளில் படித்த அனுபவம் மட்டுமே... செல்ல வேண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  12. சற்று உடல் நலமில்லாமல் இருக்கிறேன்...

    எல்லாப் பதிவுகளுக்கும் என்னால் வர முடிய வில்லை வெங்கட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை ஐயா, உடல் நலன் கவனம் கொள்ளவும். அது தான் முக்கியம்.

      நீக்கு
    2. அன்பின் ஜீவி ஐயா...
      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
    3. உடல் நலம் - ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருங்கள் துரை செல்வராஜூ ஐயா. நலமே விளையட்டும்.

      பதிவுகள் எங்கே போய்விடப் போகிறது. முடிந்த போது படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அவசரமே இல்லை.

      நீக்கு
  13. இயற்கையின் படைப்பில் எம்மை மறக்கும் இடங்கள் அழகிய படங்களுடன்.

    எங்கள் நாட்டில் பலப்பிட்டிய என்ற இடத்தில் மதுகங்கை இங்கு அலையாத்தி காடுகளும் சிறு சிறு தீவுகளும் இருக்கின்றன படகில் பயணித்து இதே போன்ற அனுபவத்தைப் பெறலாம் எனது 'ரம்யம் 'பகிர்வில் பகிர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை தான் எத்தனை அழகு மாதேவி.

      உங்கள் ஊர் அலையாத்திக் காடுகள் பற்றிய பதிவு - ரம்யம் வலைத்தளத்தில் தேடுகிறேன்.

      நீக்கு
  14. //கோடியக்கரைக் காடுகள் இன்னும் பிரசித்தமானவை... //

    இந்தப் பகுதியை வாசிக்கும் பொழுதே கல்கி அவர்கள் கோடியக்கரை சதுப்பு நில பிரதேசத்தை தம் பொன்னியின் செல்வனில் கையாண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. கொள்ளி வாய் பிசாசுகள்
    என்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் செல்வனும், கோடியக்கரையும் நினைவுக்குள்.... கொள்ளி வாய் பிசாசுகளுக்காக ஒரு அத்தியாயம்! மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  15. வாசகம் அருமை.
    முதல் படத்தைப் பார்த்ததும் பிச்சாவரம் போல் இருக்கே ! என்று நினைத்தேன் நீங்கள் கேட்டு விட்டீர்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று. இரண்டு முறை சென்று இருக்கிறோம். அருமையான இடம்.

    //இந்த கிளித் தீவு, சூரிய அஸ்தமனக் காட்சிகளை பார்க்க முடியாததில் ஒரு வருத்தம் உண்டு.//
    பார்த்து இருந்தால் அற்புதமான காட்சிகள் கிளியின் மொழிகள் கேட்டு இருக்கலாம்.
    அடுத்தமுறை போய் பதிவு போடுவீர்கள் நாங்கள் படிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

      பிச்சாவரம் - ஆஹா நீங்களும் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சிம்மா...

      கிளித்தீவு - மீண்டும் ஒரு பயணம் - அமையும் என்ற நம்பிக்கை உண்டும்மா...

      நீக்கு
  16. துப்பறிவாளன் என்ற படம் பிச்சாவரம் காடுகளில்தானே எடுக்கப்பட்டது! போகட்டும், கிளித்தீவை இன்னொருமுறை பார்த்துவிடுங்கள். எனக்குக் கிளிகள் மிகவும் பிடிக்கும்! (பார்த்து ரசிப்பதற்குத்தான்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பறிவாளன் படத்தின் கிளைமாக்ஸ் பிச்சாவரத்தில்தான் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனிதான் பிச்சாவரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம். அதற்குப்பிறகுதான் பிச்சாவரம் டூரிஸ்ட் ஸ்பாட் ஆனது என்பார்கள். 

      நீக்கு
    2. துப்பறிவாளன் - படம் நான் பார்த்ததில்லை.

      கிளிகள் உங்களுக்கு பிடிக்குமா? :) மகிழ்ச்சி.

      கிளித்தீவு - பார்க்கலாம் இராய. செல்லப்பா ஐயா - வாய்ப்புக் கிடைத்தால்.

      நீக்கு
    3. ஆமாம் பானும்மா. இதயக்கனி பாடல் காட்சி ஒன்று அங்கே எடுக்கப்பட்டது என அங்கே இருந்த படகோட்டி சொல்லிக் கொண்டிருந்தார் - அது நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  17. பிச்சாவரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. பாராடாங் படங்கள் மனத்தை கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சாவரம் - அழகான இடம் தான் - சிதம்பரத்திற்கு வெகு அருகில் இருக்கிறது. முடிந்த போது பார்த்து வாருங்கள் இராமசாமி ஜி.

      நீக்கு
  18. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளுக்குச் சென்ற நினைவுகள் மனதில் வலம் வந்தன
    படங்களும் பகிர்வும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. பிச்சாவரம் செல்ல வேண்டும் என்று ஆவல், சிதம்பரம் சென்றிருக்கிறேன், ஆனால் பிச்சாவரம் போனதில்லை. பட்டுக்கோட்டைக்கு அருகிலும் இப்படிப்பட்ட அலையாத்தி காடுகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சாவரம் - முடிந்த போது சென்று வாருங்கள் பானும்மா... பட்டுக்கோட்டை அருகே அலையாத்டிக் காடுகள் - கேள்விப்பட்டதில்லை. முடிந்த போது சென்று வரலாம்!

      நீக்கு
  20. புகைப்படங்கள் அற்புதம் வெங்கட். நீங்கள் உங்கள் படங்களைக் கொண்டு கண்காட்சியை வைக்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படங்கள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.... கண்காட்சி - நன்றிம்மா....

      நீக்கு
  21. வாசகம் அருமை வெங்கட்ஜி.

    அலையாத்திக் காடுகள் சென்று பார்த்த அனுபவம் இதுவரை இல்லை. நீங்கள் எழுதிய விதம் பிச்சாவரமேனும் சென்று பார்த்திட வேண்டும் என்று தோன்றுகிறது.

    படங்கள் விவரணனங்கள் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      அலையாத்திக் காடுகள் - உங்களுக்கும் விரைவில் ஒரு வாய்ப்பு அமையட்டும். பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  22. வாசகம் செம வெங்கட்ஜி ரொம்ப ரொம்ப ரசித்தேன். ரொம்ப சரி..

    //இனிமையாகவும், உன்னதமாகவும் பாடக் கூடிய பறவைகள் மட்டுமே குரலெழுப்பலாம் என்றால் காடு நிசப்தமாகிவிடும்//

    எங்க வீடும் நிசப்தமாகிடும்!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      எங்க வீடும் நிசப்தமாகி விடும் - நீங்கள் நன்றாகவே பாடுகிறீர்கள்.

      நீக்கு
  23. பிச்சாவரம் சென்றதுண்டு. கோடியக்கரை இன்னும் அழகாக இருக்கும் என்று அறிந்து மகனுக்கும் ஆசை அங்கு செல்ல ஆனால் போக முடியவில்லை. அப்போதுதான் சுனாமி வந்துவிட்டது அப்புறம் போகவே முடியவில்லை. அலையாத்திக் காடுகள் கண்டிப்பாக வரப் பிரசாதம். கோடியக்கரை சரணாலயத்தில் கூட சுனாமி வந்தப்ப விலங்குகள் எதற்கும் எந்தவித ஆபத்தும் இல்லாததற்குக் காரணம் அலையாத்திக் காடுகள் தான் என்று வாசித்த நினைவு.

    சுந்தர்பன் சதுப்புனிலக் காடுகளும் ஃபேமஸ் ஆச்சே..

    அந்தமானில் இருக்கும் காடுகளும் அழகு என்று வாசித்திருப்பதை இப்ப உங்கள் நேரடி அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சாவரம் நானும் சென்றிருக்கிறேன். கோடியக்கரை செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. சுந்தர்பன் சதுப்பு நிலக் காடுகள் பிரபலம் தான்.

      அழகான காடுகள் தான் அந்தமானிலும். உங்களுக்கும் சென்று வர வாய்ப்பு அமையட்டும் கீதாஜி.

      நீக்கு
  24. படங்கள் மிக அழகாக இருக்கின்றன ஜி. நல்ல அனுபவம். சதுப்பு நிலக்காடுகள் இடையே போட்டில் செல்வது செமையா இருக்கும். அடர்த்தியா இருக்கர இடம் த்ரில்லிங்கா இருக்கும்.

    கிளித்தீவு எலிஃபென்ட் தீவு பாம்புத் தீவு இப்ப இல்லைனா என்ன தொற்று போகாமலா இருக்கும் போய்விடும். அதன் பின் போய்ட்டு வந்து எழுதுங்க நான இருக்கோமே வாசிக்க!!

    ஜி பயணக்கட்டுரைகள் இல்லைனாலும் நீங்க தொடர்ந்து எழுதுங்க. வாசிக்க நாங்கள் எல்லோரும் இருக்கையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தொற்று போனதும் பயணம் தான்! பார்க்கலாம்.

      தொடர்ந்து எழுதுவோம்!

      நீக்கு
    2. உங்கள் பயண ஆசைகள் நிறைவேற வேண்டும் வெங்கட்.
      எங்களுக்குப் படிக்கக் கிடைக்கும். எல்லோரும் சொல்லிவிட்டார்கள். நானும் சொல்கிறேன்,. படங்கள் மிக மிக அற்புதம்.
      சதுப்பு நிலக்காடுகளின் அவசியத்தையும் ,பவழப் பாறைகளின் அவசியத்தையும் சுனாமியின் போது விளக்கிச் சொன்னார்கள்.
      மௌரீஷியஸ் தீவுகளில் சுனாமி வராமல் தடுத்தவை
      அவைதானாம்.
      மிக மிக நன்றி வெங்கட். வளமுடன், பத்திரமாக இருங்கள்.

      நீக்கு
    3. வணக்கம் வல்லிம்மா...

      பயணம் விரைவில் சூழல் சரியாகட்டும். அதன் பிறகு பயணம் செய்து கொள்ளலாம்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  25. சிதம்பரத்திற்குப் போய் அங்கே தங்கி இருந்திருந்தாலும் பிச்சாவரம் போனதே இல்லை. நானும் பலமுறை ஆசைப்பட்டேன். சிதம்பரத்திலேயே படித்த நம்மவரே இன்னும் பார்க்கலையாம். அதான் போல என்னையும் கூட்டிப் போகலை! :))))

    உங்கள் அனுபவங்கள் அற்புதமானவை. ஆனாலும் உங்களாலும் பார்க்க முடியாத இடங்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மிக அழகான படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி. எல்லாப் படங்களும் ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதம்பரம் சென்றிருந்தாலும் பிச்சாவரம் சென்றதில்லை - இது என் நண்பர்கள் சிலரும் சொல்லி இருக்கிறார்கள் கீதாம்மா.

      அனுபவங்கள் ரொம்பவும் மகிழ்ச்சி தந்தன. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  26. அழகான காட்சிகள் ..

    பல வருடங்கள் முன்பு நாங்கள் சென்ற பிச்சாவரம் பயணம் நினைவுக்கு வந்தது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....